கலைஞனுடன் பயணித்தல்

கலைஞனுடன் பயணித்தல்

சமீபத்தில் படித்த நூல்களில் மனம் அலாதியான  உற்சாகத்தை அடைந்த நூல் ஜெயமோகனின் முகங்களின் தேசம் .ஜெயமோகன் ஒரு இடத்தையோ , பொருளையோ எட்டுவதற்கும் சற்று முன்னதாகவே அந்த இடத்தின் அல்லது பொருளின் சகல பரிமாணங்களையும் மனம் கொண்டு அறிந்து விடுகிறார்.அவர் அறிந்த பரிமாணங்களை அப்படியே அவரால் கூடுமானவரையில் சேதாரமில்லாமல் வாசகனிடத்திலும் சேர்ப்பித்து விட முடிகிறது.இப்படி வாசகன் அடைகிற அனுபவங்களை வெறும் பயண அனுபவங்கள் என்று மட்டுமே சொல்வதற்கில்லை.ஜெயமோகனின் பயண அனுபவங்கள் படைப்பனுபவங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவையாக உள்ளன.

முகங்களின் தேசம் நூல் வழியாக ஜெயமோகனுடன் அவர் பிரயாணித்த இடங்களுக்கெல்லாம் வாசகனாக நாமும் இணைந்து செல்கிறோம் என்று சொல்லலாம்.ஆனால் நேரில் உடன் சென்றாலுங் கூட அடைய இயலாத அனுபவங்களை வாசிப்பில் அடைகிறோம். ஏராளமான நிலப்பகுதிகள் , ஏரிகளை கடக்கிறோம்.அவை நம்மிடம் படைப்பு வஸ்துக்களாக உருமாறிவிடுதலே இந்த நூலின் சிறப்பு .அவர் ஒட்டகத்தின் மீது ஏறி இடுப்பு இணைப்புகள் களறுவதை நம்மிடத்திலும் உணரச் செய்கிறார்.ஏரிகளின் நீலம் நம்மிடம் படிகிறது அவ்வாறே.இவையெல்லாம்  ஒரு வழக்கமான பயண நூலில் பெறுபவைதானே என்றால் பயண அனுபவங்களுக்கு அப்பால் பெறுகிற படைப்பனுபவங்கள் நிறைய பெற்றிருக்கிறது இந்த நூல்.படைப்பனுபவங்களை ஏற்படுத்துகிற பயண நூல் இது என்று சொல்வதே சரியானது.

வானை நிறைத்து விழுதுகளாக இறங்கி நின்ற மஞ்சள் வெயில் ,பெரிய உருத்திராட்ச மாலை போல நீரில் வளைந்து சென்றன நீர்க்காகங்கள் ,மனித உடலளவுக்குப் பெரிய மீன்கள் ,உறை விட்டு உருவப்படும் வாள் என எழுந்து ஒளிவிட்டு அமையும் .இந்த வாக்கியங்கள் ஒரு அத்தியாயத்தில் வருகிற விவரணைகள்.ஒவ்வொரு பகுதியும், அத்தியாயமும் இவற்றைப் போன்ற விவரணைகளால் மெருகடைந்துள்ளன.ஒவ்வொரு பகுதியும் புதிய தகவல்கள் ,அதிலிருந்து புதிய கண்ணோட்டங்கள் ,பார்வைகள் என மேலெழும்பிக் கொண்டேயிருக்கின்றன.வாசிப்பில் ஈர்ப்பு குன்றாமல் நகருவதற்கு இவை ஒவ்வொன்றுமே உதவுகின்றன.

குளியலைப் பற்றி சொல்கிற இடங்களில் நீரின் தன்மை ,மென்மை அனைத்தும் நமக்கு ஸ்ப்ரிசமாகிறது.மகா கவி பாரதி ஸ்நானத்தைப் போற்றும்  இடம் ஒன்று அவருடைய எழுத்தில் வரும்.துறவையும் குளியலையும் இணைத்து அவன் பேசியிருப்பான்.இந்த பயண நூலில் இடம் பெற்றுள்ள குளியல் அனுபவங்களை மட்டும் கொண்டு ஒருவர் மிக முக்கியமான கட்டுரையொன்றினை எழுதிவிட முடியும்.

ராம கிருஷ்ணா மடம் பற்றிய கூரிய விமர்சனம் ஒரு அத்தியாயத்தில் வருகிறது."எனக்கு அவமதிப்பும் கூட பெரிய விஷயமல்ல.அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது அவ்வளவுதான் " என்கிற வாக்கியம் இடம்பெற்றிருக்கும் அத்தியாயம் அது.இது போன்ற பல வாக்கியங்கள் மிக சாதாரணமாக நாம் கடந்து செல்லும் வண்ணம் உள்ளன.

நாம் உண்ணும் உணவு அனைத்துமே நம் பரபரப்பிற்கு எரிபொருளாக மாறுகிறது.உடலை விட நம் உள்ளத்திற்கு அதிக உணவு தேவைப்படுகிறது.அந்த குழந்தை நூறாண்டு வாழ பயிற்சியெடுக்கிறது என நினைத்துக் கொண்டேன் ஆகிய வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள அத்தியாயம் ஒரு வாசகனுக்கு வாழும் கலையை சொல்லித் தருவதாக அமைந்தால் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.

பயணங்களில் ,காத்திருக்குமிடங்களில் என மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த பயண நூலில் நிறைய காத்திரமான முகங்களும்,இடங்களும் நம்மைக் கடந்து செல்கின்றன. "சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மைப் பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும் " என்கிற வரி ஒரு அத்தியாயத்தில் எனக்கு  திகைப்பூட்டுவதாக இருந்தது.இந்த திகைப்பு இந்த நூல் முழுவதிலும் ஏற்படுகிற அனுபவமென்றால் அது மிகையில்லை.

ஜெயமோகன் தனது தரிசனங்களை மிகவும் வெளிப்படையாக திறந்து கொண்டே இருக்கிறார்.அவை எளிமையாக இருப்பதை போல கோலம் காட்டும் போது அவை அவ்வளவு கடுமையாகவும்  இருக்கிறது என்பதையும் காண்கிறோம்.

காலத்தின் பெருங்கலைஞன் ஜெயமோகன் என்பதற்கு இந்த எளிய நூலும் ஒரு நிரூபணமே

முகங்களின் தேசம்
ஆசிரியர் - ஜெயமோகன்
சூரியன் பதிப்பகம்
229 ,கச்சேரி ரோடு ,மயிலாப்பூர் ,
சென்னை - 4
தொடர்பு எண் - 7299027361

 பக்கம் - 360
விலை - 225 
முதற் பதிப்பு : ஜூலை 2017   

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்