பெருந்தேவியின் இரண்டாம் தரிசனம்

பெருந்தேவியின்  இரண்டாம் தரிசனம் 

வாழ்வின் மீது அபத்தத்தின் ரசம் எந்த பதுங்கு குழியிலிருந்து  வந்து தெறிக்கிறது  என்பதை கணிக்க முடியவில்லை.அபத்தத்தின் கசந்த ருசியை அல்லது வெளிறிய அதன் தோற்றத்தை  கவிஞன் கண்டடையும் விதம் ஒரு பொது நெருக்கடியாக மாறும் தன்மை கொண்டிருக்கிறது.பெருந்தேவியின் "பெண் மனசு ஆழம்  என   99 .99  சதவிகித ஆண்கள்  கருதுகிறார்கள் "என்னும் புதிய கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அபத்தத்தின் நிறம் கொண்டவையாக இருக்கின்றன.

மொத்த வாழ்வும் அபத்தமாக மாறியிருப்பதை அதன் நுண் தளத்தில் வைத்து பெருந்தேவி இந்த  கவிதைகள் மூலம் கண்டடைந்துள்ளார்.அபத்தத்தின் நடனத்தில் பெண் உடலும் சக்கையாகி வெளிறி  மிதப்பதை  இந்த கவிதைகளில் காண்கிறோம்.காமம் அனைத்து பொருட்களிலிருந்து தன்னை நீங்க எத்தனிக்கும்  கவிதைகளாக இத்தொகுப்பின்  கவிதைகள் உள்ளன.கடைசி கையறு நிலையாக அது வாழ்வின் மீது ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய விமர்சனத்தில் இருந்தும்   தன்னை விலக்கிக்  கொள்கிறது ."இறந்து விட்ட என் பெற்றோர் நானும் இறந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் ,என் காதலன் என்னை மாதாந்திர பாக்கட் நாவலென நினைக்கிறான் " ,மயில் என்ற பெயரில் ஒரு சீர்காழிப் பேருந்து நிற்கிறது ; ஆடி  முடித்து ஓய்ந்த என இருக்க  வேண்டும், பெண் பாவனைகளைத் துவைத்துக் கொடியில் காயப் போட்டிருக்கிறேன்   போன்ற வரிகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ஆல்பர் காம்யு கண்டடைந்த  அபத்ததிற்கு நிகர்  எனலாம் .

தமிழில் நகுலனும் ,விக்ரமாதித்யனும் இந்த அபத்தத்தைக் கண்டடைந்தவர்கள்தாம் .பண்பும் நலன்கள் ஒன்றாவதில் ஏற்படுகிற கடுமையான நெருக்கடியை குழம்பியவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.நகுலன்  தனதகம்  விட்டு வெளியேறும்  பிரயாசையையே கொண்டிருக்கவில்லை .   ஆனால் அவர்கள் கண்டடைந்த அபத்தம் சமகாலத்திற்கு முந்தையது என ஆறுதல் கொள்ளலாம்.ஆனால் பெருந்தேவி எழுப்பும் அபத்தம் நாம் இன்று சிரசில் வைத்து கூத்தாடுகிற அனைத்து நவரசங்களின் மீதும் தன் வெம்மையை பரப்புகிறது. அவற்றை  ஒரு நிறை மாத கர்ப்பிணியின் சிரத்தையும் எடுத்து கசப்புடன் பகடி செய்கிறது.அனைத்து உச்சங்கள் மீதும் நிகழ்கிறது

சும்மா சொல்லக்கூடாது 

வாழ்க்கைக்கு உருவகம் நன்றாகவே  கைவருகிறது
இல்லாத அப்பத்தைப்
பிரித்துத் தரப்போவதாக
உறுதியளித்து
என் முன் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது
ஒரே சமயத்தில்
நான் நானாகவும் இரண்டு பூனைகளாகவும்
இருப்பதையும் தெரிந்து வைத்திருக்கிறது

குளிர் போய்விட்டது

வாஷிங்டனில் அடுத்த வாரம்
செர்ரிப்  பூக்களின் வசந்தோத்சவம்
ஆனால்
நான் போகப் போவதில்லை
அவற்றைப் பார்க்க ஆன்மா வேண்டும்
என்னிடம் ஸ்மார்ட் போன்தான்
இருக்கிறது

இந்த இரு கவிதைகளையும் உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் மிகவும் எளிமையாக  இருப்பதை போன்ற கசந்த பாவனையை இவை நிகழ்த்துகின்றன என்று சொல்லலாம்.இந்த கவிதைத் தொகுப்பின் சாராம்சம் இந்த கவிதைகள் .

த்சோ    த்சோ,பேராசிரியர் சிடி,விமானத்தை விட்டிறங்கிய இந்து வயதுச் சிறுவன் ,தபால் தலைகளை போல் காதல்கள் சேகரிப்பவர்கள் ,கவித்துவம் சொட்டச்  சொட்ட கவிதை எழுத எனக்கு மட்டும் தோன்றாமலா இருக்கும் ?,நள்ளிரவில் கும்பகோணப் பேருந்து  நிலையம் , உயிர்த்தெழுந்ததன்    ஒரு வகை ,அங்கீகாரம் ,என்றார் மூத்த கவிஞர்  ,  இவருக்கு  நல்லா வேண்டியதுதான் ,சில பொழுது போக்குகள் ,கணபதி ஹோமம் பேக்கேஜ் ,சாரங்க  பாணி  கோயிலில்  ஸ்ரீசூரண மாமியின் ஆற்றுப்படுத்துதல் ,நம்பிக்கை வேண்டும் மக்களே ,சராசரிகள், அத்தைகள் ,வேஷக் கரப்பான் என மிகச்  சிறந்த   கவிதைகள் நிரம்பப்  பெற்ற கவிதைத் தொகுப்பு இது.நேர்த்தியுடன் புத்தக அச்சாக்கம்  கண்டிருந்தால்  அது  சிறந்த புத்தகமாக இருக்கும் என்ற நிலை மாறி உருக்குலைந்த நிலையில் விளைந்திருக்கும் மனோசிருஷ்டி இந்த கவிதை நூல்.சம காலத்தில்  இரண்டு கவிஞர்கள் என்னுடைய அபோதத்தை சமீப காலத்தில் கலைத்தவர்கள் என்று சொல்ல முடியுமெனில் ஒருவர் திருச்சாழல் வழியே கண்டராதித்தனும்  ,இந்த கவிதைத் தொகுப்பின் மூலமாக பெருந்தேவியும் என்பேன் .

தேர்வு : இடம் பொருள் காலம்

முலையில் வாய் வைத்த ரோபாட் நான்கு எண்களில் 
ஒன்றை அழுத்தச் சொன்னது
முலையோடு  விளையாட  சப்ப எண் ஒன்றை அழுத்து
மேற்சொன்னதை பேசிக்கொண்டே விரைவாகச் செய்ய
எண் இரண்டை அழுத்து
மேற்சொன்னதை  வசவுச் சொற்களோடு விரைவாகச் செய்ய
எண் மூன்றை அழுத்து
இதுவரை அனுபவிக்காத பரவசத்தில்  நீ கண்ணீரைச்
சிந்தும்போது அதை நான் துடைத்து விட எண்
நான்கைச் சேர்த்து அழுத்து 

பெருந்தேவி  இந்த கவிதைகளின் மூலம்  நிகழ்த்தியிருப்பது என்ன என்பதனை நம்மால் அறிந்து கொள்ள முடியுமாயின்  ஒருவேளை  நிகழ்கால வாழ்வையும் அறிந்து கொள்ள இயலலாம்  .அவர் மொழியில்  ஏற்றிவைத்திருக்கும் ரத்தத்திருநீற்றிற்கு காலத்தின் முன்பாக எனது நல்வணக்கம் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"