கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

கந்து வட்டி என்பது பணத்தைக் கொடுத்து வசூலிப்பவரோடு  மட்டும் தொடர்புடைய ஒன்று அல்ல. பணத்தைக் கொடுத்து வாங்குகிறவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் என்கிற வட்டியில் கல்லூரிப் பேராசிரியர்கள்,வங்கி மேலாளர்கள் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள்.இவர்கள் மட்டும் என்றில்லை இவர்கள் எங்கள் ஊரில் அதிகம்.மேலும் பல தரப்பினரும் உண்டு. வசூலித்தாலும் இல்லையென்றாலும் ,வசூலிக்க இயலவில்லை என்றாலும் ஐம்பது ரூபாய் வட்டியை இவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இவர்கள் தொழிலே செய்ய முடியாது.இரண்டாவது காரியம் சமூகத்தின் உள்ள பண தேவையின் இடத்தை கந்து வட்டி பிடித்து வைத்திருக்கிறது.நமது அனைத்து வங்கிகளும் ஏழைகள் விஷயத்தில் அடைந்துள்ள படுதோல்வியின் இடத்திலேயே இது வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் கந்து வட்டியில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.மாதம் அவர் அதன் மூலம் ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார் என்று பொருள்.யோசித்துப் பார்த்தால் வசூலிப்பவன் இவ்விஷயத்தில் வெறும் கூலியாள் மட்டுமே என்பது புலப்படும்

இன்று கந்து வட்டிக்கு நிகரான தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் வந்து விட்டன.உதாரணமாக பஜாஜ் பைனான்ஸ் போல .இருப்பினும் அன்றாடம் பணம் தேவைப்படுகிற ,அன்றாடம் இந்த கடனை அடைக்கிற ஏழைகளுக்கும் சற்று மேல்மட்டத்திலேயே இந்த நிறுவனங்கள் பணிபுரிகின்றன.கந்து வட்டி ஒருவரை கிளர்ச்சியடையச் செய்து நுகர்வோர் ஆக்குவதில்லை.நெருக்கடியான விதியை மீறிய துன்பங்களில் இருந்து விடுபடும் மார்க்கமாக ஏழைகள் இதனைத் தேர்வு செய்கிறார்கள்.நிறுவனங்கள் முப்பதினாயிரத்திற்கும் மேல் நீ துணி மேலும் பல தரப்பினரும் உண்டு.  இன்ன கடையில் உனக்கு கடன் தருகிறோம் என்பது வரையில் கிளர்த்துகின்றன.இந்த நிறுவனங்களின் முன்பாக தீக்குளிக்கும் வைபவங்கள் நடப்பதற்கும் அதிக கால அவகாசங்கள் ஏதும் இருக்கப்போவதில்லை.கந்து வட்டி நேரடியாக கண்களில் தெரிகிறது . நிறுவனங்கள் மறைந்திருக்கிறார்கள்.இவை அனைத்து காரியங்களும் நமது வங்கிகள் ஏழைகளிடமிருந்து அந்நியமாகியிருப்பதன் அடையாளங்கள்தான்.

காலையில் சந்தைக்கு ஐந்து மணிக்கு கிளம்பி  காய்கனிகள் வாங்கி தெருவில் விற்று அன்றாடத்தில் போரிடும் ஒரு பாட்டிக்கு தினமும் காலையில் கொஞ்சம் பொருள் தேவைப்படுகிறது.ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்காரர்களிடம் பெறுகிறாள் .900  ரூபாய் கையில் கொடுப்பார்கள் .மாலையில் ஆயிரமாக தரவேண்டும்.மதியத்திற்குள் அவளுக்கு இதனையும் கொடுத்து போக அவளிடம் 200  ரூபாய் மிஞ்சும்.கடன் இருக்கும் ஏழைகள் எப்போதும் கலங்கி கொண்டே இருப்பார்கள்.பணம் இருப்பவர்கள்தான் கடனுக்குக்  கலங்குவதில்லை.அதனை அடைத்தால்தான் நிம்மதி பெறுவார்கள். 

இதனை ஏன் சொல்கிறேன் எனில் ,இவர்களை வங்கிகள் இதுகாறும் திருப்பி செலுத்தமாட்டார்கள் என்கிற நோக்கிலேயே அணுகுகின்றன.இது உண்மையில்லை.இந்த அவசர கடன் தேவையை தினமும் அவர்கள் பைசல் செய்யவில்லை எனில் அவர்களுக்கு வாழ்வும்  இல்லை .தொழிலும் இல்லை என்பதே உண்மை .ஏழைகள் கடனைத் திருப்பித் தரமாட்டார்கள் என்பது ஒரு மேல்தட்டுப் பார்வை.கண்ணோட்டம்.இதில் துளியும் உண்மை கிடையாது.  இப்படி பெறுகிற பெற்று தினம் தோறும் பைசல் செய்கிற ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதனை ஈடுகட்டுவதற்கென்று நமது வங்கிகளிடம் இதுகாறும் ஒரு அமைப்பு கூட கிடையாது.இது முதல் வகை .

லாரி தொழிலாளிகள் வெளியூருக்குக்  கிளம்பும் போது பணம் தேவைப்படும் .டீசல் ,சுங்க வரி, போலீஸ் மாமூல் இத்யாதி விஷயங்கள். ஊருக்குத் திரும்ப ஒருவார காலம் ஆகும் .வந்ததும் முதல் வேலையாக பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் கீழே இறங்குவார்கள்.வீட்டில் நடையெடுத்து வைப்பது பிற்பாடுதான்.இது ட்ரிப் வட்டி.இப்படி வாங்க வேண்டுமா ? என்று மத்தியதர வர்க்கத்து சிலிபிரட்டிகளுக்கு தோன்றலாம்.இந்த தொழில் செய்பவனுக்குத் தெரியும் .இப்படியில்லாமல் தொழிலே செய்ய முடியாது என்பது.பத்தாயிரம் வாங்கிச் சென்றால் இரண்டாயிரம் சேர்த்து தரவேண்டியிருக்கும்.இந்த வட்டித் தொழில் செய்து பெரியாளாகி அமைச்சர் ஆனவர்கள் வரையில் உண்டு.சகல காட்சிகளிலும் ஜெயிக்கும் தரப்பில் இருப்பவரும் இவர்தான்.ம .தி.மு.க ; தி.மு.க ; அ .தி.மு.க என்று ஒரு வேறுபாடும் இங்கே வேலை செய்வதில்லை.எனவே இந்த கட்சிக்காரர்கள் கந்து வட்டிக்கு எதிராகக் குதிப்பது இருதயத்திற்கு நல்லதல்ல.பிற கட்சி காரர்கள் சொக்கத் தங்கம் என்பதல்ல இதற்கு அர்த்தம் .அவர்களுக்கு வேறுவிதமான நாலாந்தர வேலைகள் பணிகள் நிறைய இருக்கின்றன.இந்த வகை  கந்து வட்டியில் இரண்டாவது வகை .இதனை ஈடு செய்வதற்கும் நம்மிடம் கூட்டுறவு அமைப்புகள் உட்பட எதுவுமே கிடையாது.

தின வட்டி சிறு வியாபாரிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விட்டு தினமும் வசூலிக்கும் வகை.சிறு வியாபாரிகள் சேமிப்பிற்காக இதனை வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.வியாபார முதலீடுகளுக்கு பயன்படுத்த வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.இதனைத் தவிர்த்து சந்தையில் கோடிக்கணக்கில் சிலநாள் தேவைகளுக்கு கைமாற்றம் செய்யப்படுகிற பணத் தேவைகளுக்கு என வட்டிக்கு விடுகிறவர்கள் உண்டு.இவர்களில் பலரும் அரசியல் பிரமுகர்களே

தவிர சொத்து வாங்குதல் விற்றல் தொடர்பாக ,வாகனங்கள் வாங்க விற்க , திருமண அவசர தேவைகள் இவை எல்லாவற்றையுமே ஏழைகள் மட்டத்தில் ஈடுசெய்யும் அமைப்பாக வங்கிகள் எதுமே நமக்கு கிடையாது.

ஏழைகளிடம் வங்கி அமைப்புகள்   இது போன்ற விஷயங்களில் உதவிகரமாக இருக்க வேண்டுமெனில் முதலில் அவை எளிமையாக இருத்தல் வேண்டும்.ஆனால் நமது வங்கி அமைப்புகள் அனைத்துமே சிக்கலானவை.வாரா கடன்களிடம் பக்குவமாகவும் ,ஒழுங்காக திரும்பிச் செலுத்தும் தரப்புகளிடம் சிக்கலாகவும் முகத்தை திருக்கிக் காண்பிப்பவை.ஏழைகள் தேவையில் முன் நின்று கொண்டிருக்கும் போது காத்திருக்கவே இயலாது.நமது வங்கி அமைப்பிடம் உதவி பெற்று பாட்டி சந்தைக்குச் செல்ல வேண்டுமெனில் நடக்குமா ?

எந்த தீமை நிறைந்த அமைப்பாக இருந்தாலும் சரி ,அது தேவையை முன்னிட்டு மட்டுமே மக்களிடம் செல்வாக்கு பெறுகிறது.அந்த தேவையை வேறொன்று ஈடுகட்டாதவரையில் அந்த தீமை ஒழியப்போவதில்லை என்பதே நிஜம்.இன்று கந்து வட்டியால் வாங்கியவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கந்து வட்டி கொடுத்ததாலேயே தூக்கில் தொங்கிய பலரும் உண்டு.அழிந்தோர் அநேகம் பேர்.

இங்கே வாங்குகிறவன் ,வசூலிப்பவன் இருவருமே தற்கொலைப் பாவைகள்தாம்.மறைந்திருப்போர் அல்ல.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"