திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம்



திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம்
ஐம்பது ஆண்டுகளில் திராவிட இயக்கங்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி இப்போது முற்றிலும் பழமையின் நெடியடிக்கத் தொடங்கியிருக்கிறது.அதன் தத்துவார்த்த பின்னணிகள் முடங்கியுள்ளன.ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் இளைஞர்கள் மத்தியில் அது பெற்றிருந்த எழுச்சியும் ,அடித்தட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மாற்றத்தில் ,வளர்ச்சியில் அது ஏற்றுக் கொண்ட பொறுப்பும் குறிப்பிடத் தகுந்தவை.சமூக மாற்றத்தின் இடைப்பகுதியில் திராவிட கருத்தியல் மிக சிறந்த பங்காற்றியது.தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிடக் கருத்தியல் தவிர்க்க முடியாத அளவிற்கு மாநில உரிமைகளின் பால் செயலாற்றியிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் அரசியலில் ஒரு கருத்தியல் பங்காற்றியிருக்கிறது எனில் அது சாதாரணமான காரியமில்லை.இன்று நாம் காண்பது இற்று நொறுங்கிக் கிடைக்கும் அதன் நிலையை.உள்ளும் புறமும் அது நொறுங்கிக் கிடக்கிறது.ஐம்பதாண்டு காலம் மக்கள் அதன் சார்பில் இருந்திருக்கிறார்கள்.மக்கள் எந்த ஒன்றினையும் தேவையின்றி தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.இன்று மக்கள் அதன் இற்று நொறுங்கிக் கிடக்கும் பரிதாப நிலையை வெறுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
காலம் மாறிக் கொண்டிருக்கிறது.அடுத்த காலத்திற்குள் காலம் நுழைய வேண்டியிருக்கிறது.பழைய தலைவர்கள் உருவாக்கிய நில பிரபுத்துவ உருப்படிகள் மேலும் உதவாது.காங்கிரசுக்கும் , காமராஜுக்கும் தமிழ் நாடு விடை கொடுக்கும் போதும் அது ஏன் என்பது பெரும்பாலோருக்கு விளங்கவில்லை.இன்னும் கூட அது பலருக்கு விளங்கவில்லை எனலாம்.ஆனால் காமராஜின் பின்னால் துணைக்கிருந்த பின்புலமும் திராவிட இயக்கத்தின் நிலவுடைமைத் தன்மையைக் காட்டிலும் இறுக்கமானது என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள்.தியாகராஜ பாகவதரின் காலம் முடிவுற்று சிவாஜி,எம்.ஜி.ஆர் காலம் உருவானதை போன்றுதான் இதுவும்.பாகவதருக்கு இது விளங்காமல் அதிக பொருள் முடக்கி படமெடுத்தாடி மேலும் முடங்கினார்.
அதிகாரம் எவ்வளவு தூரத்திற்கு பரவலாகிறது,என்பதே அரசியலில் நல்லது செய்கிறார்களா அல்லது செய்கிறார்களா என்பதைக் காட்டிலும் முக்கியமானது.காமராஜ் காலத்தில் அதிகாரம் முடங்கியிருந்த இடம் நிலப்பிரபுத்துவம்.அவர்கள் நல்லது செய்திருக்கிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் சமூகத்தில் அதிகார பரவல் அனைத்து சமூகங்களுக்கும் ஏற்படவில்லை.அது ஆங்காங்கே உடலில் கட்டிக்கட்டியாக திட்டுகள் ஏற்படுவதை போல குவிந்திருந்தது. இப்போதுவரையில் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.ஒருவர் காலாவதியாகும் போது எதனால் காலாவதியாகிறோம் என்பது அவருக்கு மட்டும் விளங்குவதே இல்லை. காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஏன் காலாவதியானார்கள் என்பதும் இன்றுவரையில் அவர்களுக்கு விளங்கவில்லை.அப்படியே ஜமீன் தோரணையில் நல்லதுக்கு காலமில்லை என்னும் பிறழ்வுண்ட குரலில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைய தமிழ் நாட்டு பா.ஜ.கவினரின் நிலையும் பழைய காங்கிரஸ் காரர்களின் நிலையும் வேறல்ல.
தமிழ் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வெற்றி கொள்வதில் சமர்த்தர்கள் என்பது எனது கணிப்பு.அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஜனநாயகத்தை தங்களிடம் எடுத்துக் கொண்டே வருகிறார்கள்.இந்த விஷயத்தில் தமிழர்கள் மிகவும் கூர்மையானவர்கள்.பலரும் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மையல்ல.அதிகாரத்தை பரவலாக்காத ஒன்றை தமிழ்நாட்டு மக்கள் ஏற்பதில்லை.ஏற்க தயாராகவும் இல்லை.இல்லை நீங்கள் அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டாம் ஒதுங்கி நில்லுங்கள் ; நாங்கள் உங்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறோம் என்று எவரேனும் தமிழ் மக்கள் முன்னின்று சொன்னால் மக்கள் அவரிடமே நேரடியாக நரகத்திற்கு வழியெங்கே இருக்கிறது என்பதை நேரடியாக சொல்லிவிட்டுப் போய்விடுங்கள் என்றுதான் சொன்னவரிடமே கேட்பார்கள்.
திராவிட இயக்கங்கள் அடித்தட்டு வரையில் அதிகாரத்தைப் பரவலாக்கியதுதான் தமிழ் நாட்டில் அது ஐம்பதாண்டு காலம் நிலைக்கக் காரணம்.இன்றும் கூட தி.மு.க ; அ.தி.மு.க இரண்டிற்கும் இணையான உள்கட்டமைப்பைக் கொண்ட வேறு கட்சிகள் எதுவுமே கிடையாது.உள்கட்டமைப்பு என்பதை கிராமங்கள் தோறும் உங்களுக்கு கிளைகள் , தொடர்புகள் இருப்பதை பற்றி நான் சொல்லவில்லை.தொடர்புகள் எல்லோருக்கும்தான் உண்டு.மூன்று சீட்டு விளையாடுகிறவனுக்கும் கூட தொடர்புகள் உண்டு.உள்கட்டமைப்பில் அனைத்து சாதி சமய இன மக்களுக்கும் ; அவர்களின் வாக்கு மதிப்பினை ஒட்டி சமமான பிரதிநிதிதித்துவத்தை இவ்விரு கட்சிகள் மட்டுமே கொண்டிருக்கின்றன.ஜனநாயகத்தின் வேல்யூ என்பது இதுதான்.ஜனநாயகத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் செய்ய வேண்டியது இதனையே .பின்னர் அந்த அதிகார பங்கேற்பு தனக்கு நல்லது எது தீயது எது என்பதையெல்லாம் அதுவே முடிவு செய்து கொள்ளும்.
பத்துப்பதினைந்து ஆண்டுகளாக கிரிமினல்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றோரு கருத்தாக்கம் இந்தியாவில் முன்வைக்கப் பட்டது.ஊடகங்கள் ,நலம் விரும்பிகள் இந்த கருத்தாக்கத்தை விரும்பி வரவேற்றார்கள்.இதனை ஒரு உதாரணத்திற்காகத் தான் சொல்கிறேன்.இப்படி ஏராளமான ஜனநாயக விரோத கருத்தாக்கங்கள் ஜனநாயகக் கருத்தாக்கங்களை போன்று நம் முன்னர் வைக்கப்பட்டன.இவ்வாறான கருத்தாக்கங்களை எதிர்கொள்வதில் இந்தியா முழுமையிலும் அரசியல் அறிஞர்கள் மத்தியில் பிரச்சனைகள் இருந்தன.ஆனால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து அரசியலில் உருவாக்கி வருகிறவர்களுக்குத்தான்;இது மிகவும் போலியான ஜனநாயகத்திற்கு எதிரான கருத்தாக்கம் என்பது விளங்கும்.
வழக்குகள்,பொய்வழக்குகள் என்றெல்லாம் எதிர்கொள்ளாமல் இந்தியாவில் ஒரு தலைவர் உருவாகவே இயலாது.அதற்குரிய வாய்ப்புகள் எந்த மட்டத்திலும் கிடையாது.ஆனால் இந்த கருத்தாக்கம் கற்பனையாக ஒரு "மாரல் பொசிசன்" போல இனிப்பு தடவி நம் முன்னர் வைக்கப்பட்டது.எல்லோருமே இதனை ஏற்றுக் கொண்டார்கள்.அல்லது இப்படியான கருத்தாக்கங்களை எதிர்கொள்வது என்பது எப்படியென யாருக்கும் விளங்க வில்லை.அடுத்த இனிப்பாக இப்போது வழங்கப்படுவது ஊழல் என்னும் கருத்தாக்கம் .இந்த இனிப்பு வலைகளில் அடிமட்டக் குரல்கள் இன்று நசுங்குகின்றன.இந்த இனிப்புக்கு கருத்தாக்கங்களின் மூலமாக இன்று சில அடிமட்டத் தலைவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அறிஞர் அமர்த்தியா சென் "ஊழல்" என்னும் இனிப்புக்கு கருத்தாக்கம் எப்படி போலியானது என்பது பற்றி எச்சரித்திருக்கிறார்.இத்தகைய சிந்தனை முறைகளோடு ,அடித்தட்டு மக்கள் பேரில் ஆர்வம் கொண்ட அறிஞர்களோடு ; திராவிட இயக்கம் போன்று இந்தியா முழுவதிலும் உள்ள அடித்தட்டு மக்கள் இயக்கங்கள் தொடர்பு பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.இவற்றின் உள் காரணிகள் தனியே எழுதப்பட வேண்டியவை.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியப் பண்பாட்டின் மேலாதிக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய தலைமை மிகவும் அவசியம் .ஒவ்வொரு முறையும் வடக்கு இவ்விதத்தில் இப்போது போலவே எப்போதும் நெருக்குகிறது .அதே சமயத்தில் வருங்காலத் தலைமைகள் வடக்கின் லகானுக்குள் முடங்காத தன்மை பெற வேண்டியதும் அவசியம்.நம்முடைய அரசியல் என்பது தேசியத்தைப் புறக்கணிக்காத; அதே சமயத்தில் தமிழ் நாட்டின் தனித்தன்மைகளை விட்டு தராத பண்பு பெற்றிருத்தல் அவசியம்.
அ.தி.மு.க ; தி.மு.க இரண்டு கட்சிகளையும் இணைத்து தேசியக் கட்சிகளை எதிர்கொண்டால் இப்போது கூட தமிழ் நாட்டில் மிகச் சிறந்த ஏற்பாடு கூடிவிடும்.இது ஒரு கற்பனையாக இருப்பினும் கூட. பிராமண எதிர்ப்பு ,பகுத்தறிவு வாதம் இவையெல்லாம் கதைக்குதவாதவை.பழமையானவை.பிராமண எதிர்ப்பிற்கு திராவிட இயக்கங்களின் சைவ பின்புலம் காரணமாக இருந்ததையும் உடைத்துப் பரிசீலிக்க வேண்டும். மாநில உரிமை பாதுகாப்பே இப்போது பிரதானம்.ஆனால் அதனை தேசிய எதிர்ப்பாக வெளிப்படுத்தவும் கூடாது.திராவிட இயக்கங்கள் நவீனமடையாமல் இவையெதுவும் சாத்தியமல்ல.நவீனமடையாவிட்டால் திராவிட இயக்கங்கள் மத்திய அதிகாரத்திடம் விலை போவதையும் சிறிது காலம் தவிர்க்க இயலாது என்றே தோன்றுகிறது.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.தற்போதைய நிலை உண்மையாகச் சொல்லப்போனால் பின்நவீனத்துவ நிலை.சரியாக எதிர்கொண்டால் சிறப்பு இல்லையேல் துர் மரணம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"