நானென்பதற்குள் எவ்வளவு அர்த்தங்கள்...

செயல் வேதத்திலிருந்து வருகிறது

1

பறக்கைக்கு வடகிழக்கு
ஆசாரிமார் தெருவிற்கு தெற்குப்பக்கம்
செட்டியாரை
காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன்

தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் தா ...
என நேற்று கேட்டு வந்தவள்
இசக்கி என்பது விளங்க எனக்கு
இன்று இந்நேரம் வரையில்
ஆகியிருக்கிறது

2

நான் மாரியம்மனாக்கும்
என்று
தாணுமாலயன் சன்னதி முன்னின்று ஒருத்தி
சொன்னாள்
இல்லையென்று நினைத்து
திரும்பி விட்டீர்கள்

அழுதரற்றி சொன்ன கணத்தில்
அவள்
அம்மனாகத்தானிருந்தாள்

3

வேறொரு இடத்தில்
வேறொருவருக்கு
வாழ்க்கைப்பட்டிருக்கிறேன்
என்னையே நினைத்துக் கொண்டிராதே
என்கிறாள் பாருங்கள்
அது
தேவ பாஷை

4

பகவான் பிச்சைக்காரன் வேஷத்தில் வருவாரா
என்று நினைப்பதற்குள்
அவர்
படியிறங்கிப் போய்விட்டார்

5

செயல் வேதத்திலிருந்து வருகிறது
வேதம் பரம் பொருளிலிருந்து வருகிறது
நீயோ நானோ
பொறுப்புதாரி ஆவது
விளைவிற்கு
மட்டுமே



###

நேற்றிருந்தவன் இன்றில்லை - லக்ஷ்மி மணிவண்ணன்

1

நேற்று எனக்குள்ளிருந்தவன்
முசுடாக இருந்தான்
அவனுக்கு என்ன பிரச்சனை என்பதே விளங்கவில்லை
தூக்கமின்மையை பிராண்டிக் கொண்டிருந்தவனை
கடைசியில்
கனவின் குகைக்குள் புதைத்தேன்

இன்று காலையிலேயே புத்துணர்ச்சியுடன் இருந்தவன்
ஏராளம் வேலைகள் செய்தான்
புத்தம்புதிதாய் பிறந்த பெண் குழந்தையை பார்த்து விட்டு
வந்தான்
அறிமுகமற்ற தாதியரிடன் நலம் விசாரித்துக் கொண்டான்
சலிப்பே இல்லாமல் பேசிக் கொண்டேயிருக்கிறான்

நாளைக்கு வருகிறவன் எப்படியிருப்பானோ
தெரியவில்லை
எப்படியிருந்தாலும்
இடுப்பில் கொண்டு நடக்கத்தானே
வேண்டும் ?

இப்படியிருந்தாலே
சில நேரம் அலுக்கிறது

எப்போதும் ஒருபோல இருப்பவனை
சுமந்து திரிபவர்கள்
எப்படித்தான்
வாழ்கிறார்களோ
புரியவில்லை

2

நான்
கண்ணாடி பார்ப்பது
இன்று இவன் யாராக இருக்கிறான்
என்பதைத்
தெரிந்து
கொள்வதற்காகத்தான்

3

நேற்று உங்களை சந்தைக் கடையின்
மாடியில் பார்த்தேன்
என்றான் ஒருவன்
அவனை அங்கேயே
விட்டு விட்டு வந்து விட்டேன்
வேண்டுமானால் அங்கே போய்
அவனைப் பார்
என்றேன்
அவனிடம்

4

நீங்கள் யாரையோ போல இருக்கிறீர்கள்
என்கிறாள் மனைவி
அப்படியென்றால் சரிதானே
என்னைப் போலத்தானே
இருக்கிறேன் ?

5

முன்னர் சிலகாலம் உன் அப்பாவைப் போல
இருந்தேன்
பின்னர் சிலகாலம் உன் காதலனைப் போல
இருந்தேன்
பிறகு கணவனைப் போல
இருந்தேன்
இப்போது
என்னைப் போல
இருக்கிறேன்

இருந்ததில் இதுதான்
எளிதாக இருக்கிறது

6

எதிரி எதிரி என்கிறார்கள்
நாளைக்கே நமக்குள்
அவன்
நுழைந்து விட்டால்
என்ன செய்வது ?

###


பறவைகளிடம் இயங்கும்  காலத்திற்கு  அவ்வளவு  துல்லியம்

1

ஒவ்வொரு நாளையும்
ஏதேனும் அபூர்வம் நடக்கும் நாளாகவே
எதிர்கொள்கிறேன்
அது
சட்டைப் பையில் ஒரு வெட்டுக்கிளி
வந்து அமர்வதாகவும்
இருக்கலாம்
களங்கமற்ற புன்னகையைத் தந்து
நீ திரும்பி
செல்வதாகவும்
இருக்கலாம்

2

இரண்டாவது முறை நீ
திரும்பி பாராமல்
போவதால்
முதல் முகம்
அழுத்தமாக பதிந்து
விடுகிறது

3

பறவைகளிடம்
இயங்கும் காலத்திற்கு
அவ்வளவு
துல்லியம்

உன் பிரியத்தின்
வாள்முனை போல

4

தரையெல்லாம் ஊர்ந்து கொண்டிருக்கும்
தீனியெறும்புகளை
தலையில் மிதிக்காமல்
தாண்டித் தாண்டி
வந்து கொண்டிருப்பதெல்லாம்
நான்
உன்னிடத்தே சென்று சேரத்தானே
தாயே

5

அன்பெல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாகவோ
தேன் மதுர பூக்களாகவோ
மாறிவிடுகின்றன

6

எட்டாத உயரம் என்று ஒன்று
உண்டு
அதுதான் நீ
எட்டுகின்ற
உயரம்

###

சாமியென்றுணர்ந்தால் வணங்கு

1

மிகுமனிதனாய் எழுந்து
வந்திங்கு சேர்வதெல்லாம்
அந்தந்த குலங்களின்
ஆதிச் சாமிகளே

ஆண்சாமியாயிருந்தாலும் சரிதான்
பெண் சாமியாயிருந்தாலும் சரிதான்

2

சாமிகள் சாமியை
சரியாக
அடையாளம் கண்டுகொள்கின்றன

3

சாமிகள் எதுவும்
தனது ஆயுள் காலத்தில் இருந்து மட்டுமே
உருவாகி எழுவதில்லை

அதற்கு முன்னும் பின்னும்
அவற்றிற்கு ஆயுள்

4

அந்தரங்க பற்றுதி
சாமியின் உடல்

5

ஒரு சாமிக்கு செய்யும் இடரில்
மற்றெல்லா சாமிகளுமே
பங்கேற்கும்

6

எப்படியிருந்தாலும்
மாநிலத்திற்கு பத்து நூறு சாமிகள் தான்
உண்டு

மற்றெல்லாம் சராசரிகள்

7

சராசரியாயில்லாததெல்லாமே சாமிகள்

8

சாமியென்றுணர்ந்தால்
வணங்கு

9

அடிக்க அடிக்க தாங்குகிறதே என்று
சாமிகளை தாக்கிக் கொண்டேயிராதே
முதுகெல்லாம்
கோடுகளாகி விடும்
தலைமுறைக்கும் அகலாது

10

சராசரியும் பற்றுறுதி பூண்டால்
சாமியாகி விடும்

11

சாமி உத்திரத்தில் இருப்பதில்லை
உன்னுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்

12

பேய்களுக்குத்தான் கால்களில்லை
சாமிகளுக்கு கால்களுண்டு

13

சாமிகளை அறியத் தெரியாதவனை
கடவுள் கணக்கிலேயே கொள்வதில்லை

14

மஹா விஷ்ணுவுக்குள்
எவ்வளவோ கால சாமிகள்
அடக்கம்

15

சிதம்பரம் நடராஜனின் நடனம்
பிரபஞ்ச பேருரு
திருக்கோலம்

###

நானென்பதற்குள் எவ்வளவு அர்த்தங்கள்

1

ஓரிடத்தில் இருக்க முடியவில்லையே
என்றிருந்த கவலை
ஊர் சுற்ற முடியவில்லையே
என்பதாக மாறியிருக்கிறது

2

ஊரூராய்ச் சுற்றி பின் வந்தமர்ந்தால்
இருந்த இடத்தைச் சுற்றிலும்
நின்று கொண்டிருக்கின்றன
எல்லா ஊர்களும்

3

ராமன் எங்கிருக்கிறான் என்றான்
அவனும் உன்னிடம்தான் இருக்கிறான் என்றேன்
அப்படியானால்
ராவணன் எங்கிருக்கிறான் என்றான்
அவனும் உன்னிடம்தான் இருக்கிறான் என்றேன்

ராமனாக இருக்கையில் ராமன்
ராவணனாக இருக்கையில் ராவணன்

அப்படியானால் சீதா எங்கிருக்கிறாள் என்றான்
ராமனாக இருக்கையில்
காதலில்
ராவணனாக இருக்கையில்
அசோகா வனத்தில்

4

மாதவி தெய்வம்
கண்ணகி தெய்வம்
மணிமேகலா
பெருந்தெய்வம்

5

என்னை நிலை நாட்டுவதற்கெல்லாம் ஒன்றுமில்லை
தெய்வங்களின் சூதாட்டம்
நான்

6

பிரித்துப் பிரித்துப் பார்த்தால்
நானென்பதற்குள்
எவ்வளவு
அர்த்தங்கள்

7

நானை விட்டு வெளியேறிய பின்னர்
நானை பார்த்துக் கொண்டிருப்பது
பயங்கர
வேடிக்கை

###

ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு
இந்த வீதியில் நடப்பவளால்
வீதி நிறைகிறது

அப்புறம்
இரண்டு குழந்தைகளை
கைகளில் பிடித்துச் செல்கிறாள் வேறொருத்தி
மனம் நிறைகிறது

நாலு குழந்தைகளுக்கு மேல்
வாரிச் செல்பவளின் முகத்தில் பார்க்கிறேன்
நல்லத்தங்காளின்
ரேகை

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"