"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

 "புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"


நான் சந்திக்கிற இளைஞர்களில் பத்தில் ஏழுபேர் சொல்லுகிற குறை மிகவும் பொதுவானது." என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்று சொல்கிறார்கள்.பெரும்பாலும் அவர்களிடம் உங்களை எதற்காக பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? என்றே திருப்பி கேட்கிறேன்.நீங்கள் யார் யாரை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? இருக்கட்டும் .பிறர் உங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் யார் ? ஏதேனும் கறவை மாடுகள் வைத்து விவசாயம் செய்கிறீர்களா ? இல்லை வாத்து மேய்க்கிறீர்களா ? எதற்காக உங்களைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? நீங்கள் யார் ?
இப்படி கேட்பதால் பெரும்பாலும் அவர்கள் அகம் உடைந்து போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.பிறகு இப்படி அகம் உடைப்பவனோடு வாழ்நாள் முழுதும் பகையாகவே இருப்பார்கள்.தமிழில் இப்படித்தான் நடக்கிறது.ஏனெனில் இது அகம் உடைகிற இடம் மட்டுமல்ல அகந்தை உடைகிற இடமும் கூட .
பெரும்பாலும் இந்த குரல் செயலின்மையின் குரல்.நான் எதுவும் செய்ய மாட்டேன் ஆனால் என்னை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படி நடக்கும் ?
எதையேனும் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள் எனில் நீங்கள் ஆற்றும் செயலை வைத்து உங்களை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் ஏதுமின்றியே புரிந்து கொள்வார்கள்.செயலே நீங்கள் யார் என்பதைக் காட்டும் .மற்றபடி யாரும் இங்கே அதிதேவதைகள் கிடையாது.அதிதேவதைகள் என்றால் அதற்குரிய காரியங்களை ஆற்ற வேண்டும்.
ஒரு கணம் உங்கள் இருப்பின்மையை யோசித்துப் பார்ப்பீர்களேயாயின் இது அப்பட்டமாக விளங்கும்.நீங்கள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த நிலை ஒரு சிற்றெறும்பிற்கேனும் உங்கள் தேவையை உணர்த்துமாயின் நீங்கள் எதையோ செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.அதுவே நீங்கள்.செய்ய வேண்டும்.செய்யாது எதுவுமே திரும்பி வருவதில்லை.
தொழில் செய்யுங்கள் ,கவிதை எழுதுங்கள் ,அரிய நாடகங்களை தேடிச் சென்று பாருங்கள் ,அரிய நூல்களை அறியுங்கள் ,ஏன் ஏதேனும் பறவையை வேண்டுமானாலும் பின் தொடர்ந்து பாருங்கள் . சாலையோர மரக்கன்றிற்கு தண்ணீர் விட்டுப் பாருங்கள்,அறியாதவர்கள் அல்லல்களில் உடன் நின்று பாருங்கள்.நீங்கள் உணரப்படுவீர்கள்.
செய்வது என்பதற்கு தொடர்ந்து செய்வது என்று பொருள்.செய்யாமல் வாய்ப்பேச்சு நோய்.விடாது. உடலுக்கும் அது நோய்.மனதிற்கும் அது நோய் .செயலில்லாத வாய்ப்பேச்சு சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்.எச்சரிக்கையாக இதன் பொதுத் தன்மையிலிருந்து விலகிவிடுங்கள்.எதையாவது செய்து கொண்டே இருங்கள்.உடலுறவாக இருந்தால் கூட நீ செய்ய வேண்டும்.அதிலிருந்தே அவள் உன்னைப் புரிந்து கொள்வாள்.செய்யாமல் அவள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் சென்று விடுவாள்.இது கடினமாக உதாரணமே.வேறு வழியில்லை.
எத்தனையோ தலித் ஆதரவு வேஷம் போடும் நண்பர்களை நான் அறிவேன்.அவர்களிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு தலித் ஏழை குழந்தையை கூட தத்தெடுத்து படிக்க வைத்திருக்க மாட்டார்கள்.அதில் மனோலயம் கொண்டவர்கள் அல்லர்.வெறும் வாய்ப்பேச்சாளர்கள்.நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள் என்பதன் அடையாளம் செய்வதுதானே அன்றி பாவனை புரிவதல்ல.பாவனையாளர்களே பெரும்பாலும் "என்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்கிற குறையை முன்வைக்கிறார்கள்.
தினந்தோறும் நாம் ஆற்றுகின்ற காரியத்தில் மனமும் உடலும் நிறைவடைய வேண்டும்.அதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.உண்ணும் சோற்றுக்கு பங்கம் வரக் கூடாது.அது நம்மைப் பார்த்து சாபமிடக் கூடாது.எதுவும் ஆற்றாமல் என்னை "அள்ளியெடுக்கிறாயே" என்று சோறு சொல்லக் கூடாது.சோறு அவ்வாறு சொல்லக் கூடியது.சொல்லுமென்று என்னுடைய தாத்தா ஆதி நாராயணன் நாடார் சிறுவயதிலேயே படிப்பித்திருக்கிறார். ஒரு கவிதை எழுதி விட்டு சாப்பிட உட்கார் தவறில்லை.ஒரு நூலைப் படித்து விட்டு தாயே என கூக்குரலிடு,அன்னபூரணி அன்னத்தோடு காத்திருப்பாள்.அன்னத்தில் செய்கிற அலட்சியம் இருக்கிறதே அது அனைத்திலும் தொடரும்.எச்சரிக்கை எச்சரிக்கை.
தொழில் செய்.எனக்குத் தொழில் கவிதை.உனக்குத் தொழில் வேறொன்றாக இருக்கலாம்.பணம் கிடைக்கிறதா ,பலன் கிடைக்கிறதா என்பதெல்லாம் இரண்டாவது.முதலில் ஓயாமல் தொழில் செய்.தொழிலுக்கு உடந்தையாயிரு.காரியமாற்று . காரியத்திற்கு உடந்தையாக நில்.கலைமகள் துணையிருப்பாள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்