வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார்

வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார்

எங்கள்  ஊர் பகுதிகளை  ஒட்டித்தான் வெகுகாலமாக வசித்து வருகிறேன்.அங்கே இங்கே போய் வந்ததெல்லாம் மிகவும் சொற்ப காலங்கள்தாம்.எவ்வளவோ மகாராஜாக்கள் ஆண்டிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர்.,கருணாநிதி ,ஜெயலலிதா இப்படி.தமிழ்நாட்டில் ஆளுவோரை மகாராஜாக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.மக்கள் வாக்கிலிருந்து வருகிற மகாராஜாக்கள் .இந்த பகுதிகளை சுற்றி லட்சம் மைல்களுக்கும் அதிகமாக பயணித்திருப்பேன்.வாகனங்களில் வண்டிகளில் என்று பல விதங்களில் .ஏன் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்காக கேரளா எல்லையில் கடற்கரையில் தொடங்கி திருநெல்வேலி எல்லை வரையில் நடந்தும் வந்திருக்கிறோம்.ஆனால் திருடர்களை போன்று போலீஸ்கார்  பொறி வைத்துப் பிடிப்பதை இப்போதுதான் காண்கிறேன்.எல்லோருமே எடப்பாடியை ஒத்த ,பன்னீரை ஒத்த சம வயது தோற்றங்காட்டும் போலீஸ்கார்.முதல் முறையாக மகாராஜா தோரணை அற்ற நடுவயது போலீஸ்கார் தோரணை கொண்ட ஆட்சியாளர்கள் இவர்கள்தாம்.பணிவின் பயங்கரவாதிகள்.

கேரளத்தின் நிலை வேறு .அதனால் தமிழ்நாட்டின் அரசியல் குறைபாடுடையது என்னும் எண்ணம் எனக்கில்லை.இங்குள்ள சுபாவம் இப்படி.மக்கள் மகாராஜா தோரணை இருந்தால் மட்டுமே ஏற்கிறார்கள்.ஆந்திரத்திலும் இவ்வாறே .இங்கெல்லாம் அரசாள ஒரு மீமனித பாவனை அவசியம்.கேரளத்தில் உண்மையில் பழைய மகாராஜாக்களே கூட மக்களை போன்றுதான் இருந்திருக்கிறார்கள்.திருவிதாங்கூரின் புகழ் பெற்ற ஆட்சியாளர் மார்த்தாண்ட வர்மா.அவருடைய புகைப்படங்களை நம் மக்களிடம் காண்பித்தால் பஞ்சாயத்துத் தலைவர் என்று கூட ஏற்க மாட்டார்கள் .இவை எள்ளி நகையாடுதற்கு உரியவை அல்ல .அருகில் அருகில் இருந்தாலும் அவர்கள் உருவாகி வந்த கூறுகளும் நம்முடைய கூறுகளும் வேறுபட்டவை.

கழிந்த வாரத்தில் மண்டைக்காடு   அம்மையைப் பார்ப்பதற்காக சென்று வந்தேன்.மூன்று இடங்களில் நிறுத்தி போலீஸ்கார் சோதனை நடத்தினார்கள்.சுசீந்திரம் எல்லையைத் தாண்டி ஈத்தாமொழி ,போலீஸ்கார் சரகம் தாண்டி ராஜாக்கமங்கலம்.ராஜாக்கமங்கலம் போலீஸ்கார் இருட்டுக்குள்  நரிகளைப்  போன்று நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் நின்ற இடம் அவர்களுக்கே பாதுகாப்பற்ற இடம்.ஏராளம் சுடலைகளும் பழைய அறுபத்தியேழு தலைப்பாகை கட்டிகளும் ஒடுக்கம் கொண்டிருக்கும் களம்.

ஆவணங்கள் அத்தனையும் சரியாக இருக்குமேயாயின் போலீஸ்கார் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் நேசமணி நகர் போலீஸ்காரிடம் மாட்டிக் கொண்டேன்.ஹெல்மட் அணிந்திருந்தேன்.அனைத்து ஆவணங்களும் வாகனத்தில் உண்டு.கால்களை  அகட்டி ஒரு போலீஸ்கார் நடுரோட்டில் வண்டியை நிறுத்தினார் .என்ன விஷயம் என்று கேட்டேன்.சில கணங்கள் என்ன விஷயம் என்று அவருக்கும் சொல்லத் தெரியவில்லை.எனக்கும் நிலை விளங்கவில்லை.தலைவிளக்கில் ஒரு கறுப்புப் புள்ளி வைக்க வேண்டும் என்றார்.அப்படியா ? என்று கேட்டேன்.அப்படித்தான் என்று சாலையில் ஒதுங்கி கொண்டார்.பின்னால் அமர்ந்திருந்த என்னுடைய மகளுக்கு எதுமே விளங்கவில்லை.

நேற்று எங்கள் வீதியில் வாகன சோதனை .வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் வாகனங்களை ஹெல்மட்  சோதனை  இடக்கூடாது, செய்யக் கூடாது என்றுதான் சட்ட புத்தகத்தில் இருப்பதாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.சட்ட புத்தகத்தில் இருக்கட்டும்.இவர்களுக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது ? அரசாங்கம் டார்கெட் கொடுத்து வேலைவாங்குகிறது என்கிறார்கள் சிலர் .அரசாங்கத்திற்கு டாஸ்மாக்கையும் ,இப்படியான வழிப்பறி வசூலையும் விட்டால் வேறு வழியில்லை என்பது புரிகிறது.என்றாலும் எல்லாவிதமான வழிப்பறி யுக்திகளையும் சாதாரண ஜனங்களிடம்தான் காட்ட வேண்டுமா என்ன ? உண்மையில் வருமானப் பிரச்சனை அரசாங்கத்திற்கு என்றால் முறைப்படி மக்களிடம் தானம் கோரலாமே ? மக்கள் தரமாட்டேன் என்றா சொல்லப்போகிறார்கள் ? தானம் கேட்பது குற்றமொன்றுமில்லை தமிழ்மரபில். நான் அந்த ஆய்வாளரிடம்   அய்யா நீங்கள் நின்று கொண்டிருப்பது ஒரு வீட்டின் முற்றம்.இந்த வீதியின் பெயர் சித்திரை வீதி என்று சொன்னேன்.வீதியா வீதியா என்று ஈகோ முறிந்து புலம்பிக் கொண்டு நின்றவரிடம் "மாக்கோலம் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்" என்று காட்டிக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

ராகு கேது பெயர்ச்சி வரையில் இப்படித்தான் இருக்கும் என்று அண்ணாச்சி விக்ரமாதித்யன் சொன்னார்.எனக்கு சரி .ஊருக்கெல்லாமே ராகு கேது சிக்கலா என்ன ? ராகுவும் கேதுவும் எப்போது பெயரும் ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்