போராட்டங்கள் பற்றி...

போராட்டங்கள் பற்றி...

எந்த சமுதாயம் பொருளாதாரத்தில் தங்கள் நிலை எழும்பிய பின்னரும் அரசியல் அதிகாரம் பெறுவதில் பின்னடைவு கொண்டிருக்கிறதோ ,அந்த சமுதாயமே இந்திய சமூகத்தில் போராடுகிறது.அனைத்து சமூக மக்களின் சம நிலையான அரசியல் அதிகார பங்கேற்பிற்கும் ,வளர்ச்சிக்கும் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து தேவையாகவே இருக்கின்றன.போராட்டங்களை இழிவுபடுத்தும் போது ,இழிவு படுத்துவோருக்கு பிற சமுதாயங்களின் நலங்கள்,வளர்ச்சி ,அரசியல் உறுதித்தன்மை ஆகியவற்றின் பேரில் நம்பிக்கையில்லை  என்பதே தெளிவாகிறது.ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோரும் ,அதற்கு சற்று மேம்பட்ட நிலையில் இருந்த சாதியினரும் போராடினார்கள் என்றால் இப்போது தலித்,மீனவர்கள் , சிறுபான்மையோர் ஆகியோர் இந்தியாவில் போராட வேண்டியிருக்கிறது.இப்படியில்லாமல் இந்தியாவில் சமநிலை சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்,உண்மை நிலை. போராடும் மக்களின் அரசியல் அதிகாரத்தை வெறுப்பவர்களே தொடர்ந்து இந்தியாவில்  போராட்டங்களை இழிவுபடுத்துகிறார்கள்.

இந்தியா முழுவதிலுமுள்ள நிலை ; ஒரு சமூகம் வளர்ச்சியடையும் போது ; பிற சமூகங்கள் பல அதற்கு கீழே கீழே என்று இருக்கின்றன.போராடி அரசியல் உறுதித்தன்மையை அடைந்த சமூகங்கள் பின்னர் போராடுவதில்லை.பின்னர் அவை வளர்ச்சியுற்ற சமூகங்களுடன் இணைகின்றன.பிறரின் போராட்டங்களை இழிவுபடுத்த தொடங்குகின்றன .இன்று பிற்படுத்தப்பட்ட  சாதியினர் தங்கள் வகித்த கடந்த கால போராட்டங்களை மறந்து உயர் சாதியினருடன் அங்கம் வகிக்கிறார்கள் .இந்தியாவில் பெருவாரியான மக்கள் குழுமமான பிற்படுத்தப்பட்டவர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவதன் காரணமாக அதன் சப்தம் உரத்துக் கேட்கிறது.போராட்டங்களை இழிவுபடுத்தும் குரல்களின் சமூகக் காரணிகளை ஆராய்ந்தால் இந்த உண்மை பட்டவர்த்தனமாக விளங்கும்.

ஐம்பது  வருடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த இணைப்பு போராட்டமாக இருந்தாலும் சரி ,பிற போராட்டங்களாக இருப்பினும் சரி ; அதனை முன்னின்று நடத்தியவர்கள் பெரும்பாலும் நாடார் சாதியைச் சார்ந்தவர்கள்.நாஞ்சில்  நாட்டு வெள்ளாளர்களுக்கு ஆரம்ப காலங்களில் போராட வேண்டிய தேவை இருந்தது.அவர்களும் இத்தகைய போராட்டங்களில் குறைவான அளவிற்கு இணைந்திருந்தார்கள்.விவசாயக் கூலிகளாக இருந்த நாஞ்சில் நாட்டின் வெள்ளாளர்களின் ஒருபகுதியினரே ஜீவா பிரநிதித்துவம் செய்த கூலி வெள்ளாளர்கள்.அவர்களுக்கும் அன்று போராடும் தேவை இருந்தது.பிரச்சனை என்னவென்றால் தங்கள் சமூகங்களுக்கு அரசியல் உரிமைகள் ,உறுதி நிலை ஏற்பட்டபிறகு பிற சமூகங்களுக்கு அது தேவையற்றது என்றே இங்கே சகல சாதியினரும் நினைக்கிறார்கள்.

"நாங்கள் போராடும் போது எங்கே போயிருந்தீர்கள் என்று குரல் கேட்கிறதல்லவா ?" அது சாதியின் குரல்.இங்கே அப்படித்தான் இருக்கும் . இதுவொரு யதார்த்த நிலை.இதனை மறக்க தேவையில்லை.போராட்டங்களில் சாதிய உள்முகம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.போராடி ஒரு சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறவனே இங்கே அந்த சமூகங்களின் மக்கள் தலைவன் ஆகிறான்.

பொதுவாக அரசியல் உரிமைகள் மற்றும் அதன் உறுதித்தன்மை ஆகியவை ஒரு நாட்டில் தானாகவே வந்து சேர வேண்டியவை.ஆனால் இந்தியாவில் அவ்வாறு நடப்பதில்லை.அப்படியானால் போராட்டங்களும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கருவியாக விளங்குவதை தடை செய்ய இயலாது.அது மிகவும் முக்கியமானதொரு செயல்.வளர்ச்சி நிலையை அடைந்த சமூகங்கள் பிற சமூகங்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது மிகவும் துரஷ்டவசமானது.

போக மாணவர்கள் ,எழுத்தாளர்கள் போன்ற தரப்பினரும் மக்களுடன் இணைந்து போராடும் நிலை ஏற்படுகிறதென்றால்  ;அந்த அரசு ஜனநாயகத்தை இழந்து இழிநிலை அடைய தொடங்குகிறது என்பதே அர்த்தம்.அது அரசுக்குத்தான் இழிவே அன்றி போராடுபவர்களுக்கல்ல.

நமது அரசுகளை இருதயசுத்தியை நோக்கி நகர்த்த வேண்டியது மிகவும் முக்கியமான பணி.நமது எல்லோருடைய அரசியல் குரல்களும் இன்று பொய்மைகள் நிறைந்திருக்கின்றன.அவை வேறு வேறு காரணங்களுக்காக குரல்களை எழுப்புகின்றன.உண்மை சார்ந்தது பேசத் தொடங்குபவர்கள் அரசியலில் பங்கேற்பது வரையில் இந்தியாவில் தீமையை யாரும் அகற்ற இயலாது.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்