தீவிரம் வேடிக்கை வேறுபாடு

வாக்காளர்கள் வாக்களிக்க
பணம் வாங்குகிறார்கள் என்னும் ஊடகமாயை



கழிந்த இருபது வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களின் களப்பணியில் நேரடியாக இருந்த அனுபவம் எனக்குண்டு. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., என பல கட்சிகளுக்கும் கடைசி நேர பரப்புரை உட்பட பூத் முகவர்களை நியமிப்பது வரையில் உள்ள பணிகளை நன்கறிவேன். முன் நின்று செய்திருக்கிறேன்.

கட்சிகளின் நிமித்தம் செய்கிற வேலையில்லை இது. வேட்பாளர்களின் நிமித்தம். அவர்கள் நண்பர்களாகவோ தெரிந்தவர்களாகவோ இருந்து அழைக்கும் போது மறுக்க இயலாமல் செய்கிற பணி இது. எனவே, எந்த கட்சியும் எனது அடையாளமல்ல. கழிந்த தேர்தலில் சுப. உதயகுமாருக்காக நின்றது அணுவுலை எதிர்ப்பின் பொருட்டு. தி.மு.க. நண்பர்கள், “நீங்கள் ஆம் ஆத்மியாக மாறியாச்சா?” எனக் கேட்டு துளைத்து எடுத்தார்கள். காரணம் உதயகுமாருக்காக களத்தில் பணியாற்றிய போது நான் தி.மு.க.வின் எங்கள் பகுதியின் வட்டச் செயலாளர். அதுவும் ஊரிலுள்ள நண்பர் ஒருவரின் வற்புறுத்தலுக்காகத் இருப்பதுதானே தானே ஒளிய வேறு காரணங்களுக்காக இல்லை. நாங்கள் ஆம் ஆத்மியின் உறுப்பினராகவோ பொறுப்பாளர்களாகவோ இணையாமல்தான் உதயகுமாருக்கும் வேலை செய்தோம்.

இந்த முன்னுரை, வட்டச் செயலாளர் என்பவன்தான் கட்சியின் கடைசி நுரை; அவன் அறியாமல் எந்த கட்சியும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவோ பரிமாற்றம் செய்யவோ இயலாது. என்பதை விளக்குவதற்காகத்தான். எனது களஅனுபவத்தில் எந்த கட்சியும் வாக்காளர்கள் அத்தனை பேருக்கும் பணம் கொடுத்ததே இல்லை. கண்டதும் இல்லை. பின் ஏன் இந்த மாயை ஊடகத்தால் உருவாக்கப்படுகிறது?

இரண்டு காரணங்களை உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று: இந்த நாட்டில் நடைபெறுகிற அனைத்து ஊழல்களிலும் வாக்காளர்களையும் இணைப்பது இந்த பொய்க் கருத்துருவாக்கத்தின் நோக்கம். வாக்காளர்களையும் அடித்தட்டு மக்கள் அனைவரையும், அவர்களும் கறைபடிந்தவர்களே என, ஊழலில் அவர்களையும் பலவந்தப்படுத்த இந்த போலிக் கருத்துருவாக்கம் பயன்படுகிறது.

இரண்டு: நமது நாட்டில் நடைபெறும் பணபரிவர்த்தனை முறைக்கு இன்னும் சீரான முறைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் கிடையாது. கிராமங்களில் என்றில்லை சிறுநகரங்கள், நகரங்கள் உட்பட இதுதான் நிலை. வங்கிகளைச் சாராத பணப்பரிவர்த்தனைகள் இன்னும் சிறு வணிகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. இதனைக் குறிவைத்தடிக்க தேர்தல் கமிஷன் இந்த கருத்தாக்க உருவாக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறது. தேர்தல் காலங்களில் தேர்தல் கமிஷனின் அத்துமீறல்கள் அனைத்தையும் சாதகமாக்கும் போலிக் கருத்தாக்கம் இது. தேர்தலின் போது சிறு வணிகர்கள் இழக்கும் பணம், பறிமுதல் செய்யப்படும் பணம் பெரும்பாலும் திரும்புவதில்லை. சிறுவணிகர்கள் முறையான ஆவணங்களைக் கொண்டிருப்பதில்லை என்பதை சாதகமாக்கிக்கொள்ளும் தேர்தல் கமிஷன், இவர்களுடன் டார்கெட் நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தலிலும் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த எழுதப்படாத விதிமீறலும் அடங்கியதே பொதுத்தேர்தல் எனும் அளவிற்கு இது சாதாரணமாகி விட்டது. இந்த கருத்தாக்கம் அவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியது.

அப்படியானால் வேட்பாளர்கள் பணம் செலவு செய்வதில்லையா எனக் கேட்டால் செலவு செய்கிறார்கள். அவை சில ஊர்களுக்குக் கலையரங்களுக்கு , படிப்பகங்களுக்கு என மக்கள் இந்த தேர்தலை முன்வைத்து பெற்றுக்கொள்பவையே அன்றி ஒவ்வொரு ஓட்டிற்கும் இவ்வளவு பணம் என கணக்கு கிடையாது. சில மினுக்கி வேட்பாளர்கள் சில சிறுபகுதிகளில் உள்ள வாக்குகளை பெற, கடைசி நேர வாக்குப்பதிவின் போது சில பண முயற்சிகளைச் செய்து பார்ப்பதுண்டு. ஒவ்வொரு வாக்கிற்கும் இவ்வளவென மக்கள் பணம் பெறுகிறார்கள் என்பதை போன்ற சிந்தை மக்களைத் திட்டமிட்டு இழிவு செய்யும் நோக்கமுடையதே அன்றி உண்மையல்ல. அப்படி மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்பது போல ஒருவர் கற்பனை செய்வாரேயாயின் அவர் மக்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு நேரடியாக சுடுகாட்டில் தூங்கச் செல்வது நல்லது என்றே சொல்வேன். மக்களின் வாக்களிக்கும் தீர்மானங்கள் உறுதியான, ஆனால் சூக்குமமான காரணங்கள் நிறைந்தவை. மக்கள் யார் என்றே அறியாத மத்திய தர வர்க்க போலி அறிவுஜீவிகளின் ஜீரணமாகா மூளையில் தடிக்கும் கருத்தாக்கம் இது.

ஒரு தொகுதியின் வாக்காளர்கள் எத்தனை பேர்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலே என்ன தொகை வரும் என்பதை லேசாகக் கணக்கிட்டுப் பாருங்கள். அதுவே ஆயிரம், இரண்டாயிரம் என கொடுக்கும் தொகை அதிகம் எனக் கொண்டால் என்ன வரும் என்று கணக்கிடுங்கள். அவ்வளவு முடக்கி முதலைப் பெரும் வழியுள்ள தொழிலா அரசியல்? நான் சொல்வதிலுள்ள உண்மைநிலையும் நடைமுறையும் விளங்கும்.

ஒரு கல்யாணம் நடைபெறுகிறது அல்லது ஊரில் திருவிழா என்று வைத்துக்காள்ளுங்கள். பந்தி பரிமாறுகிறார்கள், சாப்பாடு போடுகிறார்கள். மாப்பிள்ளை தெரிந்த நாலு பேருக்குப் பீர் வாங்கி ஊத்துகிறான். சாமியே சில நேரங்களில் ஆவேசப்பட்டு படைப்பிலிருந்து சாராயத்தை எடுத்து சில சில்லறைகளுக்கு எடுத்துக் கொடுத்து விடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்த சோத்திற்காகவும் இந்த சாராயத்தின் பொருட்டும்தான் ஊரே கூடிற்று என்று சொல்ல முடியுமா? சொல்வோமா?அப்படித்தான் இதுவும்.

திருவிழா தன்மையை ஏற்படுத்துகிற வேட்பாளர்களும் இருக்கிறார்கள். இதனை வைத்து வாக்கிற்கு மக்கள் பணம் பெறுகிறார்கள் என்று சொல்வதும் புரிந்துகொள்வதும் மிகையானது என்பது மட்டுமல்ல மக்களை இழிவுபடுத்தும் ஜனநாயக கேவலம். மக்கள் தேர்தல்களில் ஒரு போதும் பணத்தின் பொருட்டு வாக்களிப்பதில்லை. பணத்தை, பந்திகளை அதிகமாகத் துருத்துவதாலேயே மக்கள் எதிராக போய்விடுவதற்கான வாய்ப்பே அதிகம் .

நீங்கள் உங்கள் கல்யாணத்தில் ஆட்டுக்கறி விருந்து போட்டால் எவ்வளவு பேர் வருவார்களோ , அதே அளவிற்குதான் தயிர்சாதம் போட்டாலும் வருவார்கள். வந்து திட்டுவார்கள் என்பது வேறு விஷயம். நீங்கள் ஆட்டுக்கறி விருந்து வைப்பவரா இல்லை ரசச்சோறு போடுபவரா என்பது உங்கள் தன்மையைப் பொறுத்து உள்ள விஷயமே அன்றி மக்கள் கூடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மக்கள் சிறப்புக் காரணங்கள் இல்லாமல் பக்திக்கும் சரி, பங்கேற்பிற்கும் சரி, பாடைக்கே ஆனாலும் சரி கூடுவதில்லை
தோல்விக்கு பொறுப்பேற்கும் குணம் நமது அரசியல்வாதிகள் ஒருவரிடமும் கிடையாது. தோல்வியின் போது மக்களை முட்டாளாகவோ, கறைபடிந்து விட்டார்கள் என்றோ கீழிறக்கும் குணம் கொண்டவர்கள் அவர்கள். தோல்வியின் போது, மக்கள் சரியாக சிந்தித்திருக்கிறார்கள் எனக் கருதும் ஒரு யோக்கியன்கூட அமையப் பெறாத ஊர் இது. மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்பதிலிருந்தே இந்த ஊடக மாயையும் பெருத்து வளர்கிறது. மக்கள் சுயேட்சையான சிந்தனை நிரம்பியவர்கள், தெளிவு கொண்டவர்கள் என்பதை தோல்வியிலும் வெற்றியிலும் ஒப்புக்கொள்ளும் அறிவுநிலைகளும் இப்போதில்லை.

(அம்ருதா, ஜூன் 2016 இதழில் வெளியானது)

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"