ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது

ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது


பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய மாடல் அது.பலரும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்கையில் அவர் மாற்றி கொள்ளவில்லை.எனக்கு அவர் அதனைக் கையில் கொண்டிருக்கக் காண மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.ஊரே ஒரு விஷயத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது என்றே கருதுவோம்.நாம் அதற்கு மாறுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பதில் தெளிவு இருக்குமேயானால் வாழ்வின் முதல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டதாகக் கருதலாம்.பிரபலத்தில் ஒதுங்கியிருந்து ஒரு நாடார் தேநீர் கடையில் நின்று சுவைக்கத் தெரிந்து விடும்.இது தெரியாதவர்கள் ஆயுள் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.பிறர் எப்படி நிம்மதியாக இருக்கிறார்கள் என்று திகைக்கிறார்கள்.பேஷனை நோக்கி நீங்கள் விரட்டிப் பிடிக்காமல் உங்கள் தேர்வை செலுத்த தெரிந்தவராயின் கொஞ்சம் கொஞ்சமாக நீங்களே பிறருக்கு பேஷன் ஆகிவிடுவீர்கள்.
ஒருமுறை அவரை நான் பார்க்க சென்றிருந்த சமயம் டி சர்ட்டை மாற்றி அணிந்திருந்தார்.நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.இன்று யாரும் அதனை அவரிடம் சுட்டிக் காட்டி அவர் சரியாக திருத்தாதிருக்கட்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். டி சர்ட்டை மாற்றியணிந்ததால் அவர் ஜெயமோகன் இல்லையென்று ஆகிவிட மாட்டார்தானே ! பிரபலத்தின் பேரில் கவனம் நமக்கு ஏற்படாதிருக்க வேண்டும்.அப்படியிருப்பது பெரிய கலை.இதனை விழிப்பு கொண்டு செய்ய இயலாது.உங்களுடனேயே இந்த பண்பு இருந்தாலொழிய இயலாது.நான் பெரிய நாகரீக பேர்வழிகளை சந்திக்கச் செல்வதாக இருப்பின் ஒரு பழைய வேட்டியை எடுத்து உடுத்துக் கொண்டு சென்று விடுவேன்.மோஸ்தரில் கரையேறுதல் முதல் படி.
நம்மில் பலபேருடைய வாழ்நாள் பிரச்சனை சமூகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதுதான்.உண்மையான கலைஞன் முதல் அடியில் தாண்டுவதே இதைத்தான்.என்னுடைய பெண் நண்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டு வருகிற போது சரியாகத் தான் பேசிக் கொண்டு வருவார்.வேற்றாள் ஒருவர் இருக்குமிடமாயின் போதும் வேறு விதமாகப் பேசத் தொடங்கி வருவார்.பொது இடங்கள் எனில் கேட்கவே வேண்டாம் ,பிறருக்காக மட்டுமே பேசிக் கொண்டு வருவார்.முதலில் எனக்கு இது விளங்கவில்லை.அவருக்கு ஏதேனும் மனநலப் பிரச்சனைகள் இருக்கக் கூடும் என நினைத்தேன்.பயணம் சென்றால் சக பயணிகள் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று பிரச்சனை ,கடைக்குச் சென்றால் கடைக்காரர் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று சிந்தை .சாப்பாட்டில் அமர்ந்தால் இவர் சாப்பிடுவதை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று பிரச்சனை ,பிறர் எல்லோரும் சரியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவரை ஒத்தவர்கள் மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது பெரிய அவஸ்தை.இந்த அவஸ்தையிலிருந்து கொண்டு எதையேனும் செய்ய இயலுமா ? ஊரே இவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க அவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா ? இந்த அவஸ்தையை மட்டும் இறக்கி வைக்க இயலுமெனில் உடலுக்கு எவ்வளவு எடை குறையும் யோசித்துப் பாருங்கள்.தன்னை மையமாக வைத்து சிந்திப்பதை நிறுத்தாத வரையில் இந்த அவஸ்தை கழியாது.
மலையாள மொழி விமர்சகர் ஒருவரின் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தேன்.பலமுறை சென்றிருக்கிறேன். அவர் எனது நெருங்கிய நண்பரும் கூட.அந்த முறையில் அவர் சட்டையேதும் போடாமல் மேனியோடு இருந்தார்.அவரது மனைவி இப்படித்தான் இவர் சட்டையில்லாமல் இருப்பார் என்று கசந்து கொண்டேயிருக்க ,சட்டைக்காக அவர் இரண்டு முறை உள்ளே ஓடி போய் பதற்றத்தில் விழப் பார்த்தார்.சட்டை போட்டாலும் அவர்தான் வர போகிறார் சட்டையில்லையென்றாலும் அவர் தான் வர போகிறார்.அவர் நிர்வாணமாக வந்தாலும் கூட அவருடைய எழுத்துக்களின் வழியாகத் தான் அவரை எனது கண்கள் பார்க்கப் பழகியிருக்கிறதே தவிர ,சட்டையணிந்ததால் மதிப்பில் அதிகமுண்டாகப் போவதில்லை.குறைவதும் இல்லை. நான் அவருடைய மனைவியிடம் ,அவரும் எனக்கு நண்பரே ,நண்பரின் பெயரைச் சொல்லி ,சட்டையணிந்தாலும் அவர் தானே வருவார் ? இல்லை அவரிலிருந்து வேறு எவரேனும் வந்து விடுவார்களா ? எனக் கேட்டேன்.அவர்தான் வருவார் இருந்தாலும்... என்றார் அவர்.
எனது நண்பர் ஒருவரின் நண்பரின் மனைவி.கிராமத்தில் வளர்த்தவர்.கணவர் பெங்களூரு .அங்கேயே படித்து அங்கேயே வேலை பார்த்தவர்.திருமணம் முடிந்து அவர்கள் இருவருமாக பெங்களூரு சென்ற பிறகு சேர்ந்து வாழ்ந்தது வெறும் பதினைந்து தினங்களுக்கும் குறைவான நாட்கள்.சென்றது முதல் இருவருக்கும் ஒருவார காலமாகச் சண்டை நடந்திருக்கிறது.ஆக வெறும் சல்லிப் பிரச்சனை.வீட்டில் நிக்கர் அணிய வேண்டும் என்பது மனைவியின் கோரிக்கை.அவனுக்கு சுற்றுலாக்களுக்குச் செல்கையில் நிக்கர் தான்.வீட்டில் அது ஒவ்வாதது.மனைவி பெங்களூருகாரரைத் தேர்வு செய்ததே வீட்டில் அவர் நிக்கர் அணிவார் என்ற நம்பிக்கையில்தான் என நினைக்கிறேன்.அவர் கற்பனையில் இடி விழ, வேட்டி, நிக்கர் பிரச்சனையில் அவர் அங்கிருந்து கிளம்பி ; சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குத் திரும்பி விட்டார்.மாமனார் வீட்டிலும் இப்படி திரும்பி வந்து விட்டாள்,நீங்கள் நிக்கர் அணியலாம்தானே என ஆலோசனை செய்யவில்லை.அவள் இங்கே வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.இவன் கிறுக்கு பிடித்து பெங்களூரு நகரம் முழுதும் சுற்றியலைந்திருக்கிறான் .பின்னர் தகவல் கேள்விப்பட்டு வருகிறேன் எனக் கூறி ஊருக்கு வந்தவன்;ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய ஏராளமான நிக்கர்களை கொண்டு வந்து அவளுக்குப் பரிசளித்து விட்டு திரும்பிச் சென்று விட்டான்.வாழ்வின் காரணங்கள் அறியாமலே பிரிந்து விட்டார்கள்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முச்சந்தியில் அண்ணாச்சியொருவர் கடை போட்டிருந்தார்.பல்வேறு குளிர்பானங்கள் மவுசு காட்டிய காலம்.விளம்பரங்களில் குளிர்பானப் புட்டிக்குள் கவர்ச்சி நிரம்பிய நடனங்களை ஆடி காட்டுவார்கள்.ஒரு விளம்பரத்தில் குளிர்பான புட்டியை உடைத்து குடித்த பின்பு குடித்தவன்,மின்சார ஒயர்களை எடுத்து இடுப்பில் சொருகிக் கொள்வான்.மற்றொரு விளம்பரத்தில் குடித்ததும் தலையை பிய்த்துக் கொண்டு ஒருவன் ஆடுவான்.இவற்றிற்கு பயந்தே பேய்கள் நடனமிடும் புட்டிகளுக்குள் நான் தலைமறைவாகியிருந்த காலம்.வீட்டில் விருந்தினர்கள் வந்தால் அப்போதெல்லாம் அந்த குளிர்பானங்களை வாங்க ஓடுவார்கள்.அதுதானே மவுசு.ஆனால் முச்சந்தி அண்ணாச்சி இவையெதையுமே பொருட்படுத்தியதில்லை.குளிர்பான புட்டிகளை தலைகீழாக சணலில் கோர்த்து வெயிலில் தொங்கவிட்டிருப்பார்.எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனதற்கு வேறொரு காரணமும் கிடையாது.இந்த புட்டிகளுக்கெல்லாம் விளம்பரத்திற்கு எவ்வளவு பணம் செலவாகிறது தெரியுமா ? அண்ணாச்சி நீங்கள் தலைகீழாக உரித்துத் தொங்க விட்டிருக்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறேன்."நமக்கு இட வசதி இல்லலா புள்ளோ"என பதில் சொல்வார்.எங்கள் பகுதியில் இளநீர் வியாபாரத்தைப் பெருகச் செய்தவர் அவரே.ஆனால் அவருக்கு ஏன் இளநீர் விற்கிறது என்பது விளங்கவில்லை.வெள்ளந்தி வியாபாரம் அது.
பொதுவாகவே ஒவ்வொரு விஷயத்திலும் ஆண்களின் கோணமும் பெண்களின் கோணமும் முற்றிலும் வேறு வேறு.திருமணமான பின்னர் பதினைந்து ஆண்டுகள் வரையில் ஆண்கள் தங்கள் கோணத்தோடு ஒன்றித்தான் அவளும் சிந்திக்கிறாள் என நினைத்துக் கொள்வார்கள்.பெரியவன் பிளஸ் 2 போன பின்னர்தான் லேசாக இல்லை என்பது விளங்கும்.அதன் பிறகு அதனை எப்படியேனும் ஒன்றாகிவிட இருவரும் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.அடுத்த பத்தாண்டுகள் இப்படியே போய்விடும்.ஜவுளிக் கடைகளில் பெண்களுடன் உடன் செல்லும் ஆண்கள் ,அவர்களுக்கு தேர்வு செய்யத் தெரிவதில்லை என்று நினைக்கிறார்கள்.அதனால் அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.இதில் புத்திசாலியான ஆணென்றால் இந்த போட்டிக்கே செல்லாமல் ஒதிங்கிக் கொள்ள வேண்டும்.தற்காப்பு அது ஒன்றுதான்.பெண்கள் ஜவுளிக் கடைகளுக்குச் செல்லும் போது,திருவிழாக் கடைகளை சுற்றி பார்க்கும் குதூகுலத்துடன் செல்கிறார்கள்.உடனடியாக தேர்வு செய்து விட்டேன் பார் புத்திசாலி என்னும் ஆணை அவர்கள் வெறுக்கிறார்கள்.பண்டிகையை இவ்வளவு விரைவாக முடிக்கிறானே என நினைக்கிறார்கள்.இரண்டு விஷயங்களை அவர்கள் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள்.இரண்டுமே முக்கியம்.அதனால் பண்டிகையை கொண்டாடட்டும் நான் தேர்வுக்கு உதவாமல் சும்மாயிருக்கலாம் என்றாலும் நடக்காது.இதெல்லாம் நல்லகடை சிப்பந்திகளுக்குத் தெரியும்.ஒருத்தி நுழைந்த உடனேயே ,இவள் எத்தனை ஆடைகளை எடுத்து உதறியெறிவாள் என்பதை முன் அனுமானிக்க முடிந்தால் அவனே நல்ல சிப்பந்தி.
பெண்கள் எதனால் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள்,விலகுகிறார்கள்,உண்மையில் விலகுகிறார்களா என்பதெல்லாம் மிகவும் ஆழமான ரகசியங்கள்.
இருப்பதில் முரண்படுதல் பிரதானம்.ஆனால் அது ஒரு பாவனையே.ஆழமான பற்றுறுதிகளில் சமரசமற்றவர்கள்.அதனை அவர்கள் இன்று நேற்று பெற்று வரவில்லை.ஆண்களுக்கு பற்றுதிகளில் சமரசம் உண்டு.பெண்களுக்கு பெரும்பாலும் இல்லை.ஆண் தெய்வங்களைக் காட்டிலும் பெண்தெய்வங்களை அணுகுவது சிரமமாக இருப்பதும் அதனாலேயே.பெரும்பாலான மிகை உணர்ச்சிகளில் மோஸ்தர் தளங்களில் ஆர்வம் கொள்பவளாகவும் ,நடைமுறையிலிருந்து அதனை விலக்குபவளாகவும் அவள் இருக்கிறாள்.
அந்த பையன் நிக்கரை அணிந்து தொலைத்திருக்கலாம்,அப்படியணிந்து தொலைந்திருந்தால் இரண்டொரு நாட்களிலேயே இது என்ன கோமாளி வேஷம் ? வேட்டியைக் கட்டு என்று கூட பணித்திருக்கலாம் யார்
கண்டார்கள் !.இதையெல்லாம் தாண்டி ,இந்த மோஸ்தர்களில் அகென்று பற்றுறுதி கொண்ட ஆண்களை அவளுக்கு அடையாளம் காணவும் தெரிகிறது.
எழுத்தாளனைப் பொறுத்தவரையில் தனது பொருளடக்கம் வழியாக உருவம் பெற வேண்டும்.அவனுடைய பற்றுறுதி அதனால் ஆனது.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"