தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன்

தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன்

நவீனத்துவத்தின் எல்லைகளை ராட்சஷ பலத்துடன்  அவர் கடந்து சென்றிருக்கிறார்.இது ஒரு விஷேச நிகழ்வு . அதற்குரிய பாதைகள் ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை.சில தெறிப்புகள் மட்டுமே இருந்தன.தானாகவே அவர் அப்பாதைகளை உருவாக்கிய வண்ணம் படைப்பு வெளியை அதிகப்படுத்தியிருக்கிறார்.இதனை வெறி கொண்ட சாகசத்தால் சமைத்திருக்கிறார்.வரும் தலைமுறை படைப்பாளி அதனை வெட்டியோ,ஒட்டியோ அதில் கடக்க முடியும் .அவருடைய கண்ணோட்டங்களை ஏற்று வெட்டியோ ஒட்டியோ பயணிக்க அவனுக்கும் வெறி கொண்ட பலம் தேவை.எளிய இலக்கிய காரியங்களை அவருடைய இயக்கமும் எழுத்தும் புறக்கணிக்கின்றன.படைப்பாளி மிக பெரிய கனவுகளைக்  காண்பவனாக உருக்கொள்வதற்கான அரிய முன்னோட்டம் இது.உண்மை அடையும் படைப்பு ரூபம்  .இதனை எய்த வெளிப்படைத்தன்மையும் திறந்த அகமும் அவருக்கு பேருதவி செய்திருக்கின்றன.

அவருடைய பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரும் குழந்தைகளும் ,வாழ்க்கைத் துணையும் உடல் நலம் , நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க வளமுடன்

படைப்புகளின் இயக்கத்திலிருந்தே ,தொடர் சிந்தனையிலிருந்தே அவர் தரிசனங்களை கண்டடைகிறார் .மெய்மை அமர்ந்திருக்கும் இடம் அவருக்கு இவ்வாறாக புலப்படுகிறது.இது மெய்மை, தானே இழுத்துச் சென்று கொண்டு விடுகிற இடம் .உண்மையை காணும் போது அதற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுக்க ஆசைப்பட்டால் இயலவே இயலாது.நபகோவ் ,லாரன்ஸ் போன்றோரை சிறிய எழுத்தாளர்கள் என்று கண்டடைவதற்கான படைப்பு வெளியை அவருடைய இயங்கு தளமே அவருக்கு  அளிக்கிறது.ஆலன் ராப் கிரியே என்னும் ஜெர்மானிய எழுத்தாளன் தாஸ்தெவெஸ்கியை
வெறும் விவரிப்பாளன் அவர் என்கிறான்.எனக்கோ அவர் பிதாமகன் .என்ன செய்வது ? ஆனால் காப்கா ,காம்யூ போன்றோருடன் ஆரம்ப காலங்களில் எனக்கிருந்த சூடு இப்போது சுத்தமாக இல்லை.அவர்கள் எனக்குள் வற்றி விட்டார்கள்.காப்கா வெறும் நோயாளி என்றே இப்போது எனக்குத் தோன்றுகிறது.காலப்போக்கில் இயக்கமே இதனை அறியத் தருகிறது. ஒரு பெரிய படைப்பாளியை நிராகரிக்கும் போது ,நிராகரிக்கிற படைப்பாளியின் படைப்புகளின் வழியே சென்று காண வேண்டும்.

இன்று ஒரு வாசகன் அவரை நெருக்கமாக புரிந்து கொள்வான் எனில் அதனையே ஒரு தகுதி எனக் கொள்ளலாம் .பெரும் படைப்பாளிகளின் படைப்புலகத்தின் வாசலை திறந்து காண்பது அடைப்படை தகுதி . முரண்பாடுகளின் இடத்தில் அது மையம் கொள்வதில்லை.ஏற்பின் இடத்தில் அது அமர்ந்திருக்கிறது.

அவருடைய படைப்புக் கண்ணோட்டங்கள் புறந்தள்ள இயலாதவை.அவை அவரிலிருந்து உருக்கொள்கின்றனவே அன்றி அவர் உருவாக்குவதல்ல.அவருடைய கண்ணோட்டங்கள் அதனாலேயே வாசகனின் பகுதியாகி விடுகின்றன.அதனை இணைத்துக் கொண்டுதான் அவன் மேலும் சிந்திக்க முடியும்.ஏற்பின்றி இது சாத்தியமற்றது.அவர் எதற்கும் ஆதரவாகவும் இல்லை,எதிராகவும்  இல்லை.அவர் கண்டடைபவற்றை காட்டித் தருகிறார்.

ஜெயமோகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"