அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்

அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்

அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்.அதிகமாக உண்ணும் உணவும் , அதிகமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஜீரணமாவதில்லை.புத்தக வாசிப்பு இயல்பானதாக இருக்க வேண்டும்.உங்களை ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருக்கும்.அந்த புத்தகத்தை நீங்கள் சென்று சேர வேண்டும்.புத்தகங்களில் வியப்புணர்ச்சி கொள்பவர்கள் மிக விரைவாகவே வாசிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.காரியத்திற்காக வாசிக்கிறவர்களும் வெளியேறுவர்.புத்தகப் பழக்கமே இல்லாத ஜீவராசிகளை எழுச்சி கொள்ளச் செய்வதற்காகவும் நான் இதனைச் சொல்லவில்லை.

அதிகம் புத்தகம் படிப்பதால் அறிவு வளர்ந்து விடும் என்பது தலை சிறந்த மூட நம்பிக்கைகளுள் ஒன்று.அதிகமாக சிறந்த சினிமா பார்ப்பவர்கள் சிறந்த திரைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்பதனைப் போன்ற மூட நம்பிக்கை இது.இது உண்மையானால் திரையரங்குகளில் படங்களை ப்ராஜெக்ட் செய்பவர்கள் எவ்வளவு திரைப்படங்களை தந்திருக்க வேண்டும் ? உங்களுக்குள் இல்லாத ஒன்றை புத்தகங்கள் ஒருபோதும் தருவதில்லை.மொழி வடிவமற்ற நிலையில் உங்களுக்குள் உள்ளடக்கம் ஏற்கனவே இருக்குமேயாயின் புத்தகம் அதனை உயிர்ப்பிக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் நிர்ப்பந்தம் தராத நூல்களை வாசிப்பதில்லை.நண்பர்கள் தருகிற அவர்களுடைய நூல்களை வாசிப்பது நிர்பந்தத்தில் வராது.கரகோஷம் செய்து ஓங்கி நிறுத்தப்படும் புத்தகங்களை நான் திரும்பிப் பார்ப்பது கூட கிடையாது.மன அமைதியில் இருந்தே கொந்தளிக்கும் நூல்களானாலும் அணுகுவேன்.தற்போது தமிழில் பெரும்பாலும் மதிப்புரைகளின் காலம் இல்லை.சக நண்பர்களிடமிருந்தே நிர்பந்திக்கிற நூல்களை பற்றி அறிய வேண்டும்.அவர்கள் ஒரு விஷயத்தை எவ்வாறு அணுகுவார்கள் ,வெளிப்படுத்துவார்கள் என்பதிலிருந்தே எனது படிக்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து கொள்வேன்.சிலர் எல்லாவற்றையுமே நூறு மடங்கு பெரிதுபடுத்திச் சொல்பவர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்,அந்த புத்தகத்தை நூறு கொண்டு வகுத்து விடுவேன்.பின்னரும் ஐம்பது சதமானம் தேறி விடுவதற்கான உத்திரவாதம் உண்டெனில் தேடத்  தொடங்குவேன்.தமிழிலிருந்து நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின் அருகில் கூட நான் செல்வதில்லை.அப்படி பரிந்துரைக்கப்படுகிற இடங்களில் இருந்து ஐநூறு கிலோமீட்டர் தூரம் எனக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

சு.சமுத்திரம் பற்றிய பேச்சு ஒருமுறை எழும்போது சுந்தர ராமசாமி  ஒரு கருத்தைச் சொன்னார்.அது நல்ல கருத்துதான்.மோசமான எழுத்தாளர்களாக இருப்பவர்களே ஆயினும் ; அவர்களுடையதில் சிறந்தது என்று ஒன்று இருக்கும்.அதனைப் படித்து வைத்திருக்க வேண்டும் என்பதே அந்த கருத்து.சு.சமுத்திரத்தை நான் வாசித்ததே இல்லை.சிறந்த கருத்துகளையெல்லாம் பராமரிக்க வேண்டியது பெரியவர்களின் பொறுப்பு என்பதை நான் அறிய மாட்டேனா என்ன ?

தாஸ்தாவெஸ்கியின்  அனைத்து புத்தகங்களையும் ஆங்கிலப் பதிப்புகள்  என்னுடைய கல்லூரி முடிந்த காலத்தில் வாங்கினேன்.புனைவுகளை ஆங்கிலத்தில் படிக்க எனக்கு வராது.வீடு மாறும் போது கவனமாக அவற்றை மட்டும் எடுத்துக் கொள்வேன்.அவை இல்லையெனில் கால் ஒடிந்து போல இருக்கும்.இத்தனைக்கும் புத்தக சேகரிப்பாளன் கிடையாது.இன்றும் எழுதும் மேஜையில் இருப்பது அவருடைய ஆங்கில புத்தகங்கள் தான்.தமிழில் படித்த பிறகு அவற்றை வாசிக்க முயன்றிருக்கிறேன்.ஏற்கனவே வாசித்து விட்டோம்,பிறகு ஏன் மெனக்கெட வேண்டும் என்று தோன்றி விடும்.எவ்வளவு சிக்கலான கட்டுரைகளாக இருப்பினும் ஆங்கிலத்தில் படிப்பதில் எனக்கு யாதொரு பிரச்சனையும் கிடையாது.தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நூலை சுசிலா அவர்களின் மொழிபெயர்ப்பிலேயே முதன் முறையாகப் படித்தேன்.கட்டுரைகளை பொறுத்தவரையில் ரொமேன்டிக் பெல்லோஸ்சின்  தாறுமாறான தமிழ்  மொழிபெயர்ப்புகளை படித்து வீணாகப் போவதைக் காட்டிலும் மூலத்துக்கு சென்று விடுதலே நலம்  .ஆங்கிலத்தில் புனைவுகளை வாசிப்பவர்கள் எனக்கு ஆச்சரியமானவர்கள்.விக்ரமாதித்தன் நம்பி குறிப்பிடுகிற அனைத்து நூல்களையும் படித்து விட வேண்டும்.ஜெயமோகனின் கண்ணீரை பின் தொடர்தல் நூலில் மிகச் சிறந்த நூற்பட்டியல் உண்டு.சி.மோகனின் காலம் கலை கலைஞன் நூலும் இது போலவே.அவருடைய கதை மொழிபெயர்ப்புகள் சுயேட்சையானவை.

டிரண்டியான நூல்களை வாசிப்பவர்களும் உருப்படமாட்டார்கள்;எழுதுவோரும் அவ்வாறே.

உங்களுடைய புத்தக வரிசையில் பிறர் உங்களிடமிருந்து அறிந்து கொள்ளும்படியான பத்து புத்தகங்கள் உங்களுக்கென பிரத்யேகமாக  இருக்குமேயானால் நீங்கள் சரியானவர்.நாநூறு புத்தகங்கள் தமிழில் படிக்க வேண்டியவை.பின்னர் அமைவது உங்கள் யோகம் போல.இந்த நாநூறு புத்தகங்களையும் குறுகிய காலத்தில் வாசிக்க அமைவது சிறப்பு.பின்னர் உள்ளவற்றை அவை அழைத்துச் சென்று காட்டித் தரும். 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"