ஒரு அன்னையின் மரணம்

                                                   ஒரு அன்னையின் மரணம்



அன்னையாக தன்னை உருவாக்கப்படுத்திக் கொள்ளவே ஜெயலலிதா விரும்பினார்.மக்களும் அவ்வாறே அவரை உருவகம் செய்து கொண்டனர்.கடுமையான தனிப்பட்ட தாக்குதல்கள் ,அவதூறுகள் ,பாலியல் வசைகள் ,அவமானங்கள் இவற்றைக் கடந்து மக்கள் அவரை அன்னையாகவே பாவித்தனர்.பிறர் அளவிற்கு அவர் வஞ்சகம் செய்யமாட்டார் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர்.கழிந்த தேர்தலில் அவர் கொண்ட வெற்றி என்பது கடவுளின்  விதியை மீறிய வெற்றியாகவே இருந்தது. அவரைப்பற்றிய வசைகளை மக்கள் கேட்டார்கள் ஆனால் சொன்னவர்களைப் புறந்தள்ளி அவர்கள் அன்னையின் பக்கமாக நிற்கவே விரும்பினார்கள்.

ஜெயலலிதாவை முன்னிட்டு ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன்.இந்தியாவின் மத்திய அரசாங்கம் அது காங்கிரஸாக இருப்பினும் சரி தற்போதைய பா.ஜ.கவாக இருப்பினும் தமிழ்நாட்டில் இடையூறாக அவர்கள்  கருதுகிற  தலைவர் ஜெயலலிதா மட்டுமே.பிறர் அனைவரையும் அதிகாரத்தால் ,பிறவற்றால் எளிதில் அடிமைப்படுத்தி விடமுடியும் என்பது அவர்களுக்குத் தெரியும் .ஜெயலலிதாவிடம் அவர்களுக்கு  இருந்த இந்த அச்ச உணர்வு பிற தமிழ்நாட்டுத் தலைவர்கள் எவரிடமும் கிடையாது.கழிந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டுவர விரும்பிய , தீவிரவாதத் தடுப்பு மையத்தை அவர் எதிர்த்த விதம் அதற்கு அருமையானதொரு சான்று.மத்திய அரசு திணிக்கும் விஷயங்களை மக்கள் ஏற்கும் விதத்தில் எதிர்க்க அவரிடம் நிச்சயமாக ஒரு மாயாஜாலம் கையில் இருந்தது.

தற்போது பா.ஜ.கவை கீழ்மட்டத்திலிருந்தே மோதி எதிர்த்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா மட்டுமே.மற்றவர்கள் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் வெற்று வாய்ப்பேச்சுகள். ஒவ்வொரு ஊரிலும் பா.ஜ.கவை அவர் கட்சியின் தொண்டர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மோதினார்கள்.வெளிப்படையாகவும் ,பகிரங்கமாகவும் மோதினார்கள்.அவர்கள் கொள்கைகள் ஏதும் பேசி பா.ஜ.கவை எதிர்க்கவில்லை.அடிமட்ட அரசியல்காரியங்களை முன்வைத்து எதிர்த்தார்கள்.பா.ஜ.க தமிழ்நாட்டில் கண் திருங்கி முழித்தது ஜெயலலிதாவிடம் மட்டும்தான்.பா.ஜ.கவினர் கலந்து கொள்ளும் பொது கூட்டங்களில் கூட அ.தி.மு.கவினர் கலந்து கொள்வதில்லை என்கிற அளவிற்கு.பா .ஜ.க வும் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை மட்டுமே தடையாகக் கருதியது.மக்களை இதற்கு எப்படி பழக்கினார் என்பது இப்போதுவரையில் எனக்கு புதிராக உள்ளது.தேநீர்க் கடைகளில் பா.ஜ.கவினருக்கு நெத்தியடி கொடுப்பவர்கள் அ.தி.மு.க தொண்டர்களாக இருந்தனர்.

இங்கே ஜெயலலிதாவின் மறைவை எல்லோரும் அதாவது பிற கட்சிகள் அனைத்துமே ஒருமித்து விரும்பியது போல எனக்குத் தோன்றுகிறது. அது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியது.அவரிடமிருந்த மக்கள் செல்வாக்கு பிறருக்கு இடையூறாக மாறிவிட்டிருந்திருக்கலாம்.பா.ஜ.க இந்த விருப்பத்தில் கொஞ்சம் கூடுதல் உற்சாகம் அடைந்தது போல எனக்கொரு எண்ணம்.அவர் விட்டுச் செல்கிற இடத்தில் தாங்கள் முளைவிடலாம் தமிழ்நாட்டில் என்று அவர்களுக்கு ஒரு கணக்கு இருக்கலாம்.அவர் இருப்பதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடையாது என்கிற தெளிவிலும் அவர்கள் இருந்திருக்கலாம்.ஆனால் இந்த கணக்கு தவறானது.தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு உரிய உருவகம் கொண்ட தலைவர்கள் எவரும் பா.ஜ.கவில் தமிழ்நாட்டில் கிடையாது.

அவமானங்களில் இருந்து உதித்து வந்தவர் ஜெயலலிதா.மக்கள் அவருடைய இந்த இடத்தில்தான் கூடவே இணைந்து நின்றார்கள்.இந்த மன அலைவரிசையின் இணைப்பு மக்களிடம் அவரை ஒட்டி வைத்திருந்தது. இது பிறருக்கு கடைசிவரையில் விளங்காமல் மேலும் மேலும் அவமானப்படுத்த முடியுமா ? என்றே வேலை செய்தனர்.ஜெயலதிதாவை அவமானப்படுத்த பலரும் பேசிய பேச்சுக்கள் அனைவரும் அணிந்திருந்த முற்போக்குக் கொள்கை அங்கியைக் கழட்டி நிர்வாணமாக்கியது. காஞ்சி சங்கர மடத்தைக் கைவைக்க இங்கே வேறு ஒருவருக்கும் தைரியம் கிடையாது.அதில் ஒரு பிராமண எதிர்ப்பும் வெளிப்பட்டது.அவர் பிராமணராக இருந்தே ஏன் பிராமண எதிர்ப்பு கொள்ளவேண்டும்  வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம் ? ஒரு தலைவனின் ஆளுமை உருவாக்கத்தில் இத்தகைய பண்புகள் மிகவும் சூக்குமமானவை.அதேசமயத்தில் ஆன்மீகத்தை அவர் புறந்தள்ளவில்லை.பிராமணத்  தலைமைகள் புனிதர்கள் ஒன்றும் கிடையாது என்பதை அவர் தனது வாழ்விலிருந்தே  புரிந்து கொண்டிருந்தார் என்றே தோன்றுகிறது.

கடைசியில் அவர் உடல்நலிவின் காரணமாக அல்லல்பட்டது மிகுந்த வருத்தத்திற்குரியது.மிகுந்த பூடகத்தன்மையை அது அடைந்தது.மக்களிடம் குழப்பத்தையும் தெளிவின்மையையும் ஏற்படுத்தியது.என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.எந்தத் தலைவனுக்கும் தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படாமல் இனி  கடவுள்தான் காக்கவேண்டும்.

போய் வாருங்கள் அன்னையே அம்மையே ...உங்களை அம்மையே என்று அழைக்க பலசமயங்களில் நான்  விரும்பியதுண்டு.தமிழ் மக்களின் மனதில் அம்மையாக நெடுங்காலம் வாழ்வீர்கள். உங்களுக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி

ஓம் சாந்தி சாந்தி சாந்தி 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"