"நோ நோ NO No ... நேநோ " சாரு

"நோ நோ NO No ... நேநோ "
சாரு என்ற வேடிக்கை மனிதர்


"அவர் பரிதாபத்துக்குரியவர். தெருவில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவனுக்கு அந்தத் தெருவில் விளையாடுபவர்கள்தான் நாயகர்கள். உலக அளவில் ஆடுபவன் பற்றி அவனுக்குத் தெரிய நியாயமில்லை. என்னுடைய கர்னாடக முரசு, நேநோ, the joker was here, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள் போன்ற சிறுகதைகளின் வாசலைக் கூட அவரால் திறக்க முடியாது. தமிழில் எழுதிய முன்னோடிகளைத் தொடர்ந்து வாசிப்பதன் பயனாக இங்கே உள்ள எல்கேஜி வாண்டுகளுக்குக் கூட அபாரமான தமிழை வெகு எளிதாக எழுதி விட முடிகிறது. அப்படி எழுதத் தெரிந்தவர் அந்த நண்பர். மற்றபடி தமிழின் பத்தாம்பசலித்தனத்தைத் தாண்டி அவரால் யோசிக்கக் கூட முடியுமா என்பது சந்தேகமே. உதாரணமாக, சிங்கப்பூர் இளங்கோவன் பேசும் ஒரு வார்த்தையின் அர்த்தத்தைக் கூட அந்த அன்பரால் புரிந்து கொள்வது கடினம். சினிமா தியேட்டரில் தேசிய கீதம் பாடுவது பற்றிய இளங்கோவனின் காமெண்ட்டைப் பார்க்கவும். இது போன்ற நண்பர்களெல்லாம் நம்மோடு ரெண்டாம் வகுப்பு படித்த பையன்களோடும் பெண் பிள்ளைகளோடும் ஒப்பிடப்பட வேண்டியவர்கள். பாவம்."

- சாரு நிவேதிதா

மேற்படி சாரு நிவேதிதா வேறொரு நண்பரின் கல்வெட்டில் என்னைப்பற்றி  பொதிந்தவை .அவரை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து அறிவேன்.அவர் பொதிந்த இந்த கம்மெண்ட்  அவருடைய நூல் ஒன்றிற்கு எழுதிய என்னுடைய கட்டுரைக்கானது.சென்னையில் அவருடைய "நேநோ"  சிறுகதைத் தொகுப்பிற்கு புக்பாய்ண்ட் அரங்கில்  03  - 07  - 1999 - ல் அவர் ஏற்பாடு செய்திருந்த வெளியீட்டு விழாவில் , அவர் அழைப்பை ஏற்றுக் சென்று படித்த கட்டுரை அது. அம்ருதா வெளியீடாக வந்த என்னுடைய " குழந்தைகளுக்குச் சாத்தான் : குழந்தைகளுக்கு கடவுள் " கட்டுரை நூலில் இந்த கட்டுரையின் முழு வடிவம் இடம் பெற்றுருக்கிறது.காலச்சுவடு இதழ்  எண் - ல் 2000  வெளியான கட்டுரையும் கூட .

இரண்டு  வருடங்களுக்கு முன்னர் எனது முகநூல் பக்கத்தில் அந்த கட்டுரையின் ஒரு பகுதியை போட்டிருந்தேன்.அது மீண்டும் முகநூலில் மிதந்து வர பகிர்ந்திருக்கிறேன்.அவ்வளவுதான் விஷயம்.அதற்கு மீண்டும் ஒரு முறை எதிர்வினையாற்றியிருக்கிறார் சாரு நிவேதிதா .முதல் எதிர்வினை அவர் புத்தகம் வெளியிட்ட அதே நாளில் நடந்தது. மிகவும் சுவாரஸ்யமான அனுபவம் அது.அவர் மிகவும் வெகுளியான மனிதர்.கிண்டல் செய்வதையும் ,நிராகரிப்பதையும் கூட அவருக்கு சொல்லிப்புரிய வைக்க பிறிதொரு நபர் தேவை.இதில் சிரமம் என்னவெனில் புரியாத ஒருவனைத்தான் அவர் உடன் கொண்டலைவார்.எனவே நம்மில் வருகிற எவரேனும் ஒருவர்தான் கிண்டல் செய்கிறார்கள் சாரு என்று அவருக்குச் சொல்லவேண்டும்.அப்போது பெரும்பாலும் எங்களில் பலருக்கு கிண்டலுக்குரிய ஆளாகத்தான் அவரிருந்தார்.அரை டவ்சரில் இலக்கியக் கூட்டங்களில் சுற்றிவருவதே உலகளாவிய இலக்கியத் தகுதி பெறுவதற்கான முன்னேற்பாடு என்னும் எண்ணம் உண்மையாகவே அவருக்கு அப்போதே உண்டு.

ஒரு முறை எங்கள் ஊர்பக்கமுள்ள ஆரல்வாய்மொழிக்கு ஒரு திருமண அழைப்பிற்கு அவருடைய  நண்பரின் அழைப்பின் பேரில் வந்திருக்கிறார்.ஆரல்வாய்மொழி ஊர் மக்களுக்கு சாருநிவேதிதா பிரென்ச் சொசைட்டியில் பிறந்திருக்க வேண்டியவர் என்பது தெரியாதது மட்டுமல்ல , அவர் ஒரு எழுத்தாளர் என்பதும் தெரியாமல் போனதால் சாப்பிடாமல் கிளம்பிவிட்டார் உங்கள் வீட்டிற்கு ஏதும் வந்தாரா ? என்று நண்பர் என்னை தொலைபேசியில் கேட்டார்.இல்லையே ! உண்மையாகவே எனது வீட்டிற்கு அவருக்கு வழி தெரியாது.பக்கத்திலேயே தேடித் பாருங்கள் இத்தாலியன் பேக்கரியில் கேக் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னேன்.  உண்மையாகவே வெளிநாடுகளில் பிறந்திருக்கவேண்டிய ஒரு சிலரில் அவரும் ஒருவர் என்பது அவருடன் பழக்கம் இருந்த தொண்ணூறுகளின் பின்பகுதியிலேயே உணர்ந்திருக்கிறேன்.அவருக்கும் அந்த கவலை இன்றளவும் உண்டு. அவரைபோன்றவர்களும் வெளிநாடுகளில் வாழத்தான் செய்கிறார்கள்.பாரிசில் இவர் பிறப்பை வைத்துக் கொள்வதற்குப் பதிலாக இறைவன் பூக்கடைப் பாரிசில் கொண்டு நட்டு வைத்துவிட்டான்.கோவை சரளாவின் என்னைய திருவண்ணாமையில் கேடாக அமெரிக்காவில் கேட்டாக டைப் வசனத்தை யார் உச்சரிக்கும் போதும் உடனடியாக ஞாபகத்திற்கு வருபவர் சாரு நிவேதிதாத்தான்.அப்படியே பொருந்த துள்ளாத துடிக்க இருக்கிறார்.ரஷ்யாவில்  இப்படியானவர்களை பற்றிய தாஸ்தெவெஸ்கியின் ஒரு பிரபலமான சொற்பொழிவு உண்டு.  தமிழிலும் அது மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது.மிகச் சிறந்த சொற்பொழிவு அது.

எக்சில் இதழில் அவர் எழுதிய கோணல்பக்கங்கள் எனக்குப் பிடித்திருந்தது.ஒரு முறை எழுத்தாளர்களை நடிகர்களோடு ஒப்பிட்டு ஒரு பட்டியல் போட்டிருந்தார்.அது சுவராஸ்யமாக இருந்தது.பிரபஞ்சனை ஜெமினி கணேசன் என்றும் பொன்னீலனை நாகேஸ்வர ராவ் என்றும்  அவர் எழுதியதாக நினைவு .அதில் தன்னை கமல் ஹாசன் என்று சொல்லியிருந்தார்.பிற எல்லாமே சரிதான் சாரு ஆனால் நீங்கள் கமல் ஹாசன் என்றதுதான் தவறு.நீங்கள் கார்த்திக் என்பது ஏன் உங்களுக்கு இவ்வளவு வளர்ந்த பிறகும் தெரியவில்லை என்றேன்.கொதித்துப் போனார்.சாமியாடிக் கொண்டே வந்தார் நாங்கள் செல்லவிருந்த மதுக்கடைநோக்கி .கார்த்திக் ஒரு இடியட் அவனை அப்படி என்னோடு ஒப்பிடலாம் ? என்று கூறி அழாத குறைதான்.இவ்வளவிற்கு வெகுளி அவர். சும்மா வாய்யா...  ஊரையெல்லாம் கலாய்க்கிற   உனக்கு உன்னைக் கலாய்த்தால் ஏன் பொத்துக் கொண்டு வருகிறது என்று கூறி அழைத்துச் சென்றோம்.

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்.நேநோ சிறுகதைத் தொகுதியை சென்னையில் அவர் வெளியிட உத்தேசித்திருந்த போது நான் ஒரு மாலை நாளிதழில் செய்தியாசிரியராக நாகர்கோவிலில் இருந்தேன்.ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் அவரிடமிருந்து தொலைபேசி வரும்.நேநோ வெளியீட்டு விழாவில் கட்டுரை படிக்கக் கேட்டு.முதலில் வேண்டாம் சாரு உங்களுக்கு அது உவப்பாக  இராது.வேறு எவரையேனும் அழையுங்கள் அதுதான் சரியாக இருக்கும் என்றேன்.இல்லை எதிராகவே இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் வாருங்கள் என பல முறை கேட்டு சென்னைக்கான டிக்கட்டும் எடுத்து அனுப்பினார்.அவருடைய வீட்டுக்குப் போய் சேர்ந்தேன்.அப்போதே அவரிடம் ஒரு பெரிய நாய் இருந்தது.நாய் வளர்பவர்களிடம் நாயின் பெருமைகள் கேட்பது எனக்கு மிக்க கடினம்.கோழி வாங்கி அதனை தக்காளி அரிந்து போட்டு ஒருவித சமையல் செய்தார்.மாலையில் இந்த கூட்டம் .கட்டுரையெல்லாம் படித்து கூட்டம் நிறைவு பெற விருந்து உதயமானது.விருந்தில் எவனோ சதிகாரன் ஒருவன் எனது கட்டுரை அவருக்கு எதிரான கட்டுரை மட்டுமல்ல அவரை அது நிராகரிக்கிறது என்பதையும் பொருள் விளங்க அவருக்குப் போட்டுக் கொடுத்து விட்டான்.விருந்து திரு திருவென கண்முழித்தது.எனது வீட்டில் என் கையால் கறிவிருந்து சாப்பிட்டுவிட்டு  எனக்கெதிராக எனது மேடையிலேயே பேசுவாயா ? என சாரு பொங்க ,அது வெறும் சர்க்கரைப் பொங்கல் என்பதால் எழுந்து பக்கத்துக்கு கடையில் போய் குடித்தோம்.இந்த சல்லித்தனத்தை ஒருபோதும் எழுத நினைத்ததில்லை. சில நண்பர்கள் வட்டாரங்களில் சொல்லிச் சிரித்திருக்கிறோம் அவ்வளவுதான்.அவரை சொல்லி சிரிக்க இதுபோல எத்தனையோ விஷயங்கள் உண்டு.

திரும்பிச்   செல்ல வேண்டிய டிக்கட்டை அவர் பின்னர் தரவும் இல்லை . அதனால் நான் திரும்பிப் போகாமலும் இல்லை.திருமணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைப்பது போல.

ஆனால் இன்னும் இரண்டாம் வகுப்புப் படிக்கிற பையன்களையே கட்டுரை படிக்க அழைக்கிறீர்களே  சாரு ... மூணு கழுதை வயசான பிறகும். பாவமும் பரிதாபமும் நீங்களா நானா ? பையன்களா ? "நோ நோ NO No ... நேநோ "

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்