ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது

ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக ரஜினி காந்த் மக்களால் தேர்வு செய்யப்படுவார் எனில் ; தமிழ்நாட்டின் அடுத்த முப்பதாண்டு காலம் தொடங்கி விடும்.தமிழ் நாட்டு மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட பிரபலமும் ,புகழும் ,மக்கள் சக்தியும் அவசியம்.வெற்று தொழில் அதிபர்கள்,வியாபாரிகள் ,கல்வியாளர்கள் அதிகாரத்தில் துணையாக பங்கு பெற முடியுமே தவிர , தானைத் தலைவனாகவோ தலைவியாகவோ ஆக முடியாது.வெற்று தொழில் அதிபர்களையும் ,வியாபாரத்தின் பின்னணியிலிருந்தும் மேலதிக அரசாங்கம் பந்தாடுவதை நாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் சக்தி அவர்களிடம் இல்லை என்பதே அதற்குக் காரணம்.

ப.சிதம்பரம் வரையில் வேட்டையாடப்படுகிறார் என்றால் நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.ப.சிதம்பரம் சாதாரணப்பட்ட ஆளில்லை.ஆனால் சுயசாதிப் பின்னணி கூட சரியாக அமைய பெறாதவர். மக்கள் சக்தியற்றவர்.பீட்டர் அல்போன்ஸ் மட்டும்தான் அங்கே பொய் நிற்க முடிகிறது. ஆனால் அவரை வேட்டையாடுபவர்களுக்குத் தெரியும், அவருக்கும் தங்களை மீண்டும் வேட்டையாடுவதற்காக வாய்ப்புகள் மீண்டும்  வரக் கூடும் என்பது. மட்டுமில்லாமல் தமிழ்நாடு ,ஆந்திரம் போன்ற பெரிய தேசிய இனங்களைக் கொண்ட மாநிலங்களுக்கென்று பிரத்யேகமான சில பண்புகள் உள்ளன.அவற்றை என்ன என்று விசாரிப்பது இப்போதைய என்னுடைய நோக்கமல்ல.

ரசிகர்கள் மத்தியில் இன்று ஆற்றப்பட்ட  ரஜினியின் உரை மக்களின் முன்பாக பேசப்பட்ட மிகவும் நூதனமான ஒரு உரை.உள்ளடுக்குகள் நிறைந்தது.மிகவும் தெளிவான ஒரு அரசியல் உரை அது.எல்லாவிதமான தமிழ்நாட்டு அரசியல் கிளைகளையும் முன்வைத்து ஆற்றப்பட்ட உரை அது. இந்த உரையைக் கேட்டதிலிருந்து தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக வரக் கூடிய ஒருவரின் சப்தம் அது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.ராமதாஸ் உட்பட,சீமான் உட்பட பிரதிநிதித்துவம் கொண்ட எல்லோரையும் கருத்திற்கொண்டு அவர்  உரை அமைந்திருந்தது . பிராமணர்களையும் அனுசரிப்பேன் என்பதின் பொருட்டே சோ.ராமசாமி அவர் பேச்சில் இடம் பெற்றார்.பிராமணர்களின் சாய்வு இல்லாமல் தமிழ்நாட்டில் காமராஜ் உட்பட எவருமே  முதல்வர்கள் ஆனதில்லை.பிராமணர்களில் அன்றாட பிராமணர்கள் ராஜாஜியை ஆதரிப்பவர்களாகவும் ,முற்போக்கு பிராமணர்கள் காமராஜை ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள். திருமாவளவன்  பேரில் ரஜினிக்கு உள்ள மதிப்பு என்பது எப்போதும் தலித்துகளுக்கு சாதகமற்றுப் போகாது என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறது.இது மிகவும் குறிப்பிடத் தகுந்த விஷயம்.

தமிழ்நாட்டில் முன்னைக் காட்டிலும் சாதி பிளவுகள் கூர்மையடைந்திருக்கின்றன.தமிழ்நாட்டின் எந்த குறிப்பிட்ட சாதியிலிருந்து ஒரு தலைவன் வந்தாலும் ,அவன் தற்போது அந்த குறிப்பிட்ட சாதியின் அடையாளமாகத் தான் பார்க்கப்படுவானே அன்றி , பொதுமக்கள் தலைவனாக தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் ஏற்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.ஒவ்வொருவரையாக மனம் எண்ணி யோசித்துப் பார்த்தால் இது விளங்கும்.அப்படி யாரும் இல்லை என்பதும் தெரியும்.சட்டியில் இருப்பதிலிருந்துதானே அகப்பையில் வரும்.இல்லாததை பேசுவதில் ஒரு பலன் கிடையாது.நடைமுறையிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் அனுசரிக்கும் பண்பு கொண்ட ,மக்கள் சக்தி மிக்க தலைமையே தமிழ்நாட்டிற்குத் தேவை.அது ரஜினியிடம் இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக அல்லாத ஒருவரையே வெகு மக்கள் தமிழ்நாட்டில் விரும்புகிறார்கள் என்பதற்கும் சமூகவியல் காரணங்கள் நிறைய உள்ளன.

மற்றபடி ரஜினி முதல்வர் ஆவதை தனிப்பட்ட முறையில் விரும்புவார்களா? என  நீங்கள்  கேள்வி எழுப்புவீர்களேயாயின் "ஆம் "என்றே பதில் சொல்வேன் நானொரு கமல் ரசிகன் என்றாலும் கூட.எல்லாம் நானோ ,நீங்களோ விரும்புவது  மட்டுமே உலகத்தில் நடக்க வேண்டுமாயின் ,தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு குகைகளுக்குள்தான் செல்ல வேண்டியது வரும்.அரசியல் என்பது இப்போது சக்தி மிக்கதாகவும் ,அனைவரையும் அனுசரித்துப் போகும் தன்மை நிரம்பியதாகவும்  இருக்க வேண்டியது அவசியம்.அது ரஜினி ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும் இங்கே என்று உறுதியாக நம்புகிறேன்.குறிப்பாக மத்திய அரசாங்கத்திற்கு வீட்டிற்குள் நுழைந்து ரைடு நடத்தும் தைரியம் வரவே கூடாது.மற்றபடியுள்ள காரியங்களேயெல்லாம் வகுத்தது வகுத்தபடி நடக்கும் .எடப்பாடிக்கு பா.ஜ.க சாய்வு ஏற்படுவதற்கும் ,ரஜினிக்கு பா.ஜ.க சாய்வு ஏற்படுவதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வேறுபாடுகள் உண்டு.ரஜினியை மத்தியில் இருந்து ஓரளவிற்கு மேல் யாரும் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.மக்கள் பின்னிருக்கும் போது கிடைக்கிற பலம் அது.

கொள்கை பேசிகள் ஐம்பது வருடத்திற்கு பழமையானவர்கள்.நிலவுடமை மனோபாவம் கொண்டவர்கள்.நிலவுடைமைவாதிகள் அனைவருமே சாதியை மேல்புறமாக எதிர்த்து கோசங்கள் எழுப்பினாலும் சாதியவாதிகளே. நேரடியாகவே இங்குள்ள நவீன தலைவர்கள் பலரை  அறிவேன்.அவர்கள் பனங்காடுகளிலிருந்தே இன்னும் வெளியேறத் தெரியாமல் பரிதவிக்கும் நரிகள் என்பதை. பழைய தலைமுறை இருபுறமும்  சாய்ந்து விட்டதுதான் அனைவருக்கும் தெரியுமே?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்