கன்னியாகுமரி பகவதி தேவியலங்காரம்

1

இருநூறு வருட ஜமீன் வீடு
சாலையில் பத்தடிக்கு தாழ்ந்து கிடக்கிறது
ஆனால் ஜமீன் வீட்டு மாடுகளுக்கு ஆயிரம் வயது
அவை சமவெளியில்தான்
மேய்கின்றன
தாழவில்லை

ஒவ்வோர் ஆண்டும் மணல் அள்ளிப் போட்டு
ஜல்லியடித்து
உயரும் தார்ச்சாலைகளை
பள்ளத்துக்குள்ளிருந்து
தலைநீட்டி
எம்மாம் பெரிய ரோடு
என வியக்கும்
சின்ன ஜமீனுக்கு
இன்றைய தேதியில்
துணை
பக்கத்தில் வாழும்
பொய்முலை
இசக்கி

2

காந்திமதியம்மன் இரட்டைச் சடை பின்னல் போட்டு
நகரப்பேருந்தின் ஜன்னலோரம்
தூங்கிக் கொண்டிருக்கிறாள்
தலையசைந்து மோதி மீட்டும்
துயில்

பிறைவடிவ மல்லித் தொடர் கூந்தல்

திரையிசைப் பாடல்களுக்கு ஏன்
பாடிக் கொண்டிருக்கிறோம் ? என்னும் திசைக் குழப்பம்

உச்சி வெயிலில்
நெல்லையப்பர்
நடையடைத்திருக்கிறது

3

அபிராமி துவைத்துக் போட்ட ஆடைகள்
மேல்மாடிக் கொடியில் ஆடுவது பார்த்து
திரும்பிக்
கொண்டிருக்கும் தம்பி

நேற்றே குளியலறையில் யாருக்கும் தெரியாமல்
சோப் திருடிய திருடருடன்
சென்றிருக்கிறாள்
திரும்பி வர நாளாகும்

அபிராமிக்கு மட்டும் பின்புறம் எப்படி
கச்சிதமாய் அமைந்திருக்கிறது
என்று வியக்கும்
பேய்முலைகள் கண்ட
கவிஞா

கோடி பிரகாசக் குழந்தையை
எடுத்துக் கையில்
வைத்துக் கொள்ள விரும்பும்
ஞானக் குருவே

கோமளவல்லி நீங்கள் தொட்டதும்
இறங்கி
ஓடுகிறாள்
பாருங்கள்

மென்முலைதான்
எடுத்தால்
கற்சிலை

கற்சிலைதான்
அப்பாமல்
நின்றாலோ
ஆனந்த வல்லி
அபிராம சுந்தரி

4

கட்டிடத்தில் நுழைந்தேன்
வேலைப்பாடுகள் ,நுட்பங்கள் ,நறுமணம்
எல்லாம் உணர்ந்தேன்
பின்பு கட்டிடத்திலேயே உட்கார்ந்த போது
எதையும்
காணவில்லை

நானிலத்தின் நகரும் சமவெளி
எவ்வளவு தினுசு ?
எல்லையில்லா தூரம்
பின்பு அருகிருந்தேன்
எதையுமே
காணவில்லை

சுகந்தம்
களபம்
சாமியின்
வாசனை
சுற்றித் திரவியம் எடுப்பதற்குள்
காலியாயிற்று
குடுக்கை

அப்படியானால் முதலில் இருந்தவன்தான்
நான் என்று சொல்லலாமா
என் செல்ல மாணவர்களே ?

இரண்டாவதுதான் நீ என்பவர்கள்
துரிதமாக
வந்து சேருங்கள்
நாமினி
புதிய இடம் நோக்கிப்
புறப்படுவோம்

5

கன்னியாகுமரி பகவதி தேவியலங்காரம்

மெல்ல புலரியின் இருள்மேனி திறக்க
அம்மை நின்று கொண்டிருக்கிறாள்
கடலடி சத்தத்தின் மேலே

பாலாபிஷேகத்தில் முலையிடை வழியாக
நழுவிய
என் மனம் துயில் எழும்புகிறது
மேற்கு மலைகளில் சூரிய பிரகாசம்

நீதானே அழைத்தாயம்மா
ஏனென்று சொல்லேன் ?

மலைகள் துயில் எழ
இருள் மத்தியில் இருந்து
நுரைக்கும் கடலில்
என் மேனி மலர்வதைக் கண்டாயா ?

எத்தனை முறை தவற விட்டேன் அம்மா
சோர்வால் ஒரு முறை
அழுத்தத்தால் ,கொடும் அகந்தையால் பல முறை
துக்கத்தில் தூக்கத்தில் என என

சந்தனம் முகத்திலேறி
வைரம் ஜொலிக்க
பட்டிற்குள் சிறு முலைகள் மறைந்து கொள்ள
கண்ணாடி பிம்பத்தில் சிறுமிக்கு
மேக்கப் முடிவுறுகிறது

கருவறையிலிருந்து வெளியேறி திறந்து
கைபிடித்து
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
முதல் சூரியோதயத்தை
இணைந்து

[ தேவிக்கு சமர்ப்பணம் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"