இரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்யா

இரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்யா

ஒரு கவிதையை ஏன் உங்களுக்கு பிடிக்காமற் போயிற்று ? எனக் கேட்டு வாசகனை வற்புறுத்த இயலாது.பிரம்பு கொண்டு அடிக்கவும் முடியாது. சிறந்த கவிதைகள் வாசகனுக்கு இயலாமற் போய் விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு.அதனால் சிறந்த கவிதைகள் அத்தனையும் வாசகனுக்கு அந்நியமானவை என்று முடிவு செய்ய இயலாது.பொதுவாக நல்ல கவிதைகளுக்கு தானாக வாசகனைச் சென்றடையும் கரிசனம் உண்டு கால தாமதம் ஏற்பட்டாலும் கூட.. கவிதையின் நடிப்பு காத்திருப்பது அதனையும் நோக்கித்தான்.அது சில வரைபடங்களை வரைந்து வரைந்து சமர்ப்பிப்பது அதன் வினோத நடிப்பை ஏதேனும் ஜீவி அறிந்து கொள்ளும் என்கிற தவிப்பின் அடிப்படையிலேயே.எனவே கவிதையை பொறுத்தமட்டில் உதாசீனமாக கடந்து செல்வது ஆகாத பழக்கம்.வாழ்க்கையின் எந்த துருவத்தில் இருந்தாலும் கூட கவிதை நளினம் செய்வது ,வரைந்து தன்னை வெளிப்படுத்துவது  தொடர்பின் அடிப்படையிலேயே

எண்பதுகளின் கவிஞர்கள் தங்களை மனித குலத்திற்கு விளங்காத அரூபிகளாக  நடித்துக் காட்டினார்கள் .அப்படியவர்கள் நடித்துக் காட்டியமைக்குப் பொருள் கிடையாது என்று சொல்ல முடியாது.சிவாஜி,எம்.ஜி.ஆர்.காலம் அது. ஆனால் அந்த இருள் மனோபாவம் தற்போது தமிழில் காலம் சென்று விட்டது என்று தோன்றுகிறது.அந்த மனோபாவம் நான் மட்டுமே  மேன்மையானவன் என்பதில் அடங்கியிருந்தது.இப்பொது அப்படியான ஒரு மனோபாவமும்,வெளிப்படுத்தும் முறையும் கேலிப்பொருளாகி விடும்  .

"நீயோ நானோ விஷேசமானவர்கள் ஒன்றும் கிடையாது ஆனால் நீ கண்ட விசித்திரத்தை மட்டும் சொல் பீடிகைகளை அகற்று " என்கிற வாசகர்கள் உருவாகிவிட்டார்கள்.இது ஒரு குறிப்பிடத்தகுந்த வாசக மாற்றம் என்றே கருதுகிறேன்.இந்த மாற்றத்தின் உக்கிரத்தைத் தமிழில் அடைந்திருப்பதை கண்டராதித்தனின் சமீபத்திய கவிதைகள்.சபரி நாதனின் லெகு தன்மை ஆகியவற்றினுடே விளங்க முடியும். சிவாஜி கணேசன் போலவே எல்லா காலத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது போலி நடிப்பென்றாகி விடும் .இசை,நடனம் எல்லாமே கால மாற்றம் கொள்வது போன்ற கவிதையில் ஏற்படும்  மாற்றமே இதுவும்.

எனினும் தத்துவத்தின் விசாலமான அறிவு,அனுபவ விசாலம் ,இவற்றையொட்டி கவிதை எட்டுகிற மகா தரிசனம் எல்லாம் கூடி இணையும் போது    கவிதைகள் சிறப்புப் பேறு பெறுகின்றன.சிலர் முக்கி முக்கி எழுதுகிறார்கள் ஆனால் ஒருபோதும் இவர்கள் கவிதைகள் எழுத முடியாது என்பது அவர்கள் எழுதுபவற்றை வைத்து தெரிந்து விடுகிறது.சிலருக்கு கவிதை பற்றின சகல பொருள் விளக்கமும் தெரிகிறது ,கவிதை மட்டும் வரவில்லை .அவர்களிடம் நமக்கு எடுத்துச் சொல்கிற தைரியம் ஏற்படுவதில்லை.உள்ளூர அவர்கள் மிக விரைவிலேயே இவற்றிலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்பதும் விளங்கி விடுகிறது.சிலர் தாங்கள் எழுதுகிற கவிதைகள் மிகவும் சிறப்பானவை என்றோரு துண்டுச் சீட்டும் இணைத்து படிக்கச் சொல்லும் போது ,துண்டுச் சீட்டைப் படித்து விட்டு விலகி ஓடி விடுகிறோம்.பைத்தியங்கள் அபாரமாக எழுதுகின்றன.அதற்காக பைத்தியங்கள் போல நடித்துக் காட்டுபவர்களையும் நம்மால் விலகிட முடியும்.ஒன்றையும் தீர்மானித்துச் சொல்ல இயலாவிட்டாலும் கூட கவிதை என்பதே பெரும் போக்கு,இயக்கம் ஒரு மொழியில் .மனவோட்டத்தின் வெளி.

அண்மையில் வாசித்தவற்றில் ஈர்ப்பை ஏற்படுத்திய கவிதைகளில்  ஒன்று தேன்மொழி தாஸின் "சூனு"  .மற்றொன்று "மரணத்தின் நடனம் " என்கிற சூர்யாவின் கவிதை.

"சூனு " விந்தையும் விசித்திரமும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த கவிதை.இப்படி எவர் ஒருவர் ஒரு மொழியில் சிலவற்றைப் படைத்து  விட்டாலும் அவர் சிறந்த கவி என்பதில் சந்தேகமே இல்லை.இவர்களே படைக்கிற மற்றொரு கவிதை ,  இதன் பக்கத்தில் வைத்தே படிக்க இயலாததாகவும் இருக்கலாம்,அப்படித்தான் இருக்கவும் செய்யும்.எல்லாமே செம்மையாக இருந்தால் அது கவிதையல்ல,செய்யுள் .தமிழ் கவிதைக்கென்று ஒரு பெருந்தொகுதி உருவானால் தேன்மொழி தாஸின்  இந்த கவிதையைத் தவிர்க்கவே முடியாது.இல்லாத கர்ப்பத்தின் மாயை காமத்தில் இழையும் மந்திரம் இந்த கவிதையில் பெரும் உயரம் நோக்கிஎழும்புகிறது.

சூனு
~~~~~
இரும்புக் கதவொன்றில் உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது
சூனு
யாரும் நம்புவதில்லை
எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை
சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க
மூச்சுக் காற்றை ஊதுவது போல்
நீ கதவு திறப்பதை
அம்மா என அழைத்தபடி ஓடிவருவதை
பூக்களால் கன்னத்தில் ஒத்தடமிடுவதை
மணல்களை எனக்கான மாத்திரைகள் என்பதை
இரவை ஊஞ்சலாக்குவதை
எனது கண்களை தசமபாகமாக சிதறவிடுவதை
நித்திரைகளைப் புன்னகையாக்குவதை
நிலத்தின் ஆழத்தை எடுத்து
நீ எனக்குப் பொட்டு வைப்பதை

உனது அப்பாவின் பெயரை ஆன்மாவின் தண்டில் எழுதுவதை
மனதிற்குள்ளும் நஞ்சுக்கொடி வழியாகத்தான் உனக்கு உயிர் தருகிறேன் என்பதை
யாரும் நம்புவதில்லை சூனு


சூர்யா எழுதத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே உயரங்களை சென்றடையும் சில கவிதைகளை எழுதியாயிற்று.குழப்பமான திகட்டல்  ,சஞ்சலம் இவற்றையடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகின்ற சூர்யாவின் சில கவிதைகள் பிரமாண்டமான வீச்சு கொள்கின்றன.தொகுப்பாக கவிதைகள் வெளிவராத நிலையிலேயே வாசகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாக சூர்யாவின் கவிதைகள் உள்ளன.அழுகுணர்ச்சியை நரம்பு வழியே புறமுதுகிலேற்றும் தன்மை இவருடைய "திரு நகத்தழகி " போன்ற சில கவிதைகளில் நூதன வடிவம் பெறுகின்றன.மரணத்தின் நடனம் கவிதையில் ஏராளமான உள் மடிப்புகள்  இயல்பாகவும்,எளிமையாகவும் சிரசிலேறியிருத்தல் விஷேசம்.

தமிழின் உலகத் தரம் இந்த கவிதைகள்.சிந்தை கவிதையானால் சித்திரமும் கவிதையாகும் .

மரணத்தின் நடனம்
-------------------
ஒரு அகதியாக எனை கற்பனை செய்து கொண்டபோது
ஒரு அகதி முகாம் தென்படத் தொடங்கியது
முகாமுக்கு வெளியே பார்த்தேன்
சுதந்திரம் தென்படத் தொடங்கியது
சுதந்திரத்துக்கு வெளியே பார்த்தேன்
போர்விமானங்கள் தென்படத் தொடங்கின
விமானங்களுக்கு வெளியே பார்த்தேன்
பிணங்கள் தென்படத் தொடங்கின
பிணங்களுக்கு வெளியே பார்த்தேன்
ஒரு ம்ருகமனிதன் தெரியத் தொடங்கினான்
அந்த ம்ருகமனிதனுக்கு வெளியே பார்த்தேன்
எண்ணிலடங்கா ஆண்குறிகளுடைய மரணத்தின் நடனம் தெரிந்தது
அந்த மரணத்திற்கு வெளியே பார்த்தேன்
அமைதி மட்டுமே தெரிந்தது
ஆம்
அமைதி மட்டுமே தெரிந்தது

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"