அய்யா வைகுண்டர் இதிகாசம் -14

அய்யா வைகுண்டர் இதிகாசம் -14


அய்யா வைகுண்டசாமியின் காலம் 1809 முதல் 1851 வரையிலானது.வட இந்தியாவில் முன்னோடியாக வருபவர் ராஜா ராம் மோகன் ராய்.இவருடைய காலம் 1772 முதல் 1833 வரை.பிரம்மசமாஜத்தை ஏற்படுத்துகிறார்.அவரைத் தொடர்ந்து மும்பையில் ஆத்மராம் பாண்டுரங் 1867 ல் பிரார்த்தனை சமாஜம் உண்டாக்குகிறார். சாமி தயானந்த சரஸ்வதி காலம் 1824 முதல் தொடங்கி 1883 வரை.ஆரிய சமாஜம் இவரால் உருவாகிறது.ராமகிருஷ்ண பரமஹம்சர் 1826 முதல் 1886 வரையில் தன்னுடைய தரிசனங்களை மிகவும் எளிய முறையில் மேற்கு வங்க மக்களிடம் எடுத்துச் சென்றார்.இந்த காலம் இந்துசமய மறுமலர்ச்சி காலமாகக் கொள்ளத் தகுந்தது.இது இந்தியா முழுமைக்கும் யாரோ ஒருவரின் செல்வாக்கின் பேரிலோ அல்லது யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலோ நடைபெறவில்லை.இந்த காலகட்டத்தின் முக்கியத்துவம் இத்தகைய திட்டமிடல்கள் அற்ற தன்னிச்சையான எழுச்சிகளிலேயே அடங்கியிருக்கிறது.

தென்னிந்தியாவில் நெல்லை,குமரி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அய்யா வைகுண்டரின் செல்வாக்கு உறுதியானது.இதனையொட்டி கேரளா முழுவதிலும் நாராயணகுருவின் செல்வாக்கு உறுதிப்பட்டிருக்கிறது.வட தமிழ்நாடு வள்ளலாருக்குரியது.கேரளாவில் தலித் மக்களிடையே அய்யங்காளி தோன்றி பணிசெய்தார்.தென்னிந்தியாவின் இந்து சமய மறுமலர்ச்சியின் முன்னோடியாக அய்யா வைகுண்டசாமிகளே திகழ்கிறார்.சட்டம்பி சாமிகள்,நாராயண குரு,அய்யங்காளி ஆகியோர் வைகுண்டரைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் தோன்றிய மகான்கள்.

இந்த மகான்களை அறிந்து கொள்வதில் நமக்கு இதுவரையில் தடைகளாக முன்னிற்பவை ஆங்கிலேயர்களின் அணுகுமுறைகளால் உருவாக்கப்பட்ட பார்வைகள்.ஆய்வுகள் அதன் நிமித்தம் உண்டான வரலாறுகள்.ஆரம்ப காலங்களில் இந்திய மகான்களின் வரலாறு பெரும்பாலும் அவர்களால் ,அவர்கள் சார்ந்த மதத்தவர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய கண்ணோட்டங்களால் உருவாக்கப்பட்டன.அவர்கள் தங்களுடைய இந்துமத வெறுப்பையும்,பிளவு செய்தலையும் குறிகோளாகக் கொண்டே எந்தவொரு வரலாற்றையுமே உருவாக்கம் செய்தார்கள்.மார்க்ஸிய வரலாறுகள் வெள்ளையர்களின் ஆய்வுகளை முன்னோடித் தரவுகளாகக் கொண்டு பார்க்கப்படுபவை.முன்னோடி ஆய்வுகளாகக் கொண்டு தொடரக் கூடியவை.பிளவு நோக்கம்,ஆதிக்க நோக்கம் போன்றவற்றின் செல்வாக்கு அறிவுத் துறைகளில் பெரும்பாலும் உண்டு.இன்று இத்தகைய ஆய்வுகளும் பொருளடைவுகளும் அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டிருக்கின்றன .எனவே இன்று அவை பொருட்படுத்தத் தக்கன அல்ல.ஆனால் இந்திய ஆன்மீக ,இந்து ஆன்மீகச் செல்வங்களை புரிந்து கொள்வதில் அதனை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்கும்,இந்திய மார்க்ஸிய அறிஞர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

எனவே மகான்களை சீர்திருத்தவாதிகளாக ,மறுமலர்ச்சியாளர்களாக மட்டுமே பார்ப்பதற்கு அவர்களால் முடிந்தது.இந்திய பண்பாட்டில் ,இந்து பண்பாட்டுமரபில் இவர்கள் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டேயிருப்பவர்கள் என்பதை அறிய அவர்களால் இயலவில்லை.ஒருவிதத்தில் இந்திய மரபும் அதன் சமய ரகசியங்களும் அவர்களுக்கு பிடிபடவில்லை என்றே சொல்லலாம்

இவர்கள் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் உண்டாக்கியிருக்கும் மாற்றங்கள்.ஒரு என்ஜீஓ திட்டம் வழியாக மாற்ற இயலாதவை.இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே எனில் என்ஜீஓ பரப்புரைகளின் வாயிலாகவே இந்த மாற்றத்தினை ஏற்படுத்த முடிந்திருக்க வேண்டும்.

2

தென்னிந்தியாவின் தோன்றிய இந்த மகான்கள் .வைகுண்டசாமி நாடார்,நாராயணகுரு ஈழவர்,அய்யங்காளி தலித்.வட இந்திய இந்துமத சமயக் குரவர்கள் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் எனில் தென்னிந்தியாவில் இவர்கள் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்தவர்கள்.அந்த மக்களிடமிருந்தே உருவாகி வந்தவர்கள்.இது வட இந்திய இந்துமத சமயக் குரவர்களுக்கும் தென்னிந்திய சமயக் குரவர்களுக்கும் இடயிலுள்ள பிரதான வேறுபாடு.இவர்கள் எவருமே இந்துசமய எதிரிகளோ ,இந்துசமயங்களுக்கு எதிரானவர்களோ இல்லை.வேறு திசைவழியில் இருந்து உருவானவர்கள்.சமகாலத்தலர்களே என்றாலும் கூட ராமகிருஷ்ண பரஹம்சரும் அய்யா வைகுண்டசாமியும் அனுபவ மற்றும் சமூகவியல் களங்களால் வேறுபட்டவர்கள்.

முக்கியமாக வெள்ளை மார்க்கிஸிய அறிஞர்களின் ஆய்வு முறைகள் ஒவ்வொரு ஆய்விலும் இந்துவுக்கு எதிராக சமணம்,இந்துவுக்கு எதிராக பௌத்தம்,இந்துவுக்கு எதிராக நாட்டார் வழக்காறுகள்,இந்துவுக்கு எதிராக மறுமலர்ச்சி என்று பிரித்ததைப் போன்ற கண்ணோட்டங்களுக்கும் இந்த மகான்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.அதுபோலவே உயர்வகுப்பிலிருந்து உருவான மகான்களிடமிருந்து வைகுண்டசாமி,நாராயண குரு,அய்யங்காளி ஆகியோர் மாறுபட்டவர்கள்

எளிய சம்பள ஆய்வுகள் உருவாக்கிய வரலாறுகளில் இருந்து விடுபடுதலே ,இவர்களை இவர்களின் மெய்மையை கண்டடைவதற்கான வழி.

வைகுண்டசாமியை பற்றியை வரலாறுகளும் ,உருவாக்கமும் கிறிஸ்தவர்களாலும் அதனை அவ்வாறே சந்தேகமின்றி விரும்பிப் பின்தொடர்ந்த இந்திய மார்ஸியர்களாலும் உள்ளடங்கி நிற்பவை.ஒடுக்குமுறை அரசியல்,விடுதலைக் கருத்தாக்கம் இரண்டையுமே இந்த தரப்பினர் வினோதமாக தங்களுக்கு பயனுள்ள விதத்தில் வரலாற்றில் வைத்துக் கையாண்டார்கள்.கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.இந்த கட்டில் இருந்து அவிழ்க்க வேண்டியிருப்பது வரலாற்றுத் தேவை

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"