இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்

முத்தாரம்மன் கோவில்கள் என்பது இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்


இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் என்னும் மக்கள் அமைப்பு முத்தாரம்மன் கோவில்களை முன்வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றியது . நானூறு, ஐநூறு ஆண்டுகாலப் பழமை கொண்டது இந்த அமைப்பு.பின்னர் தோன்றிய பல சமூக அமைப்புகளிடமும் இந்த அமைப்பின் தாக்கம் உண்டு எனினும் இதைப் போன்று அவற்றிடம் கச்சிதம் குறைவே.இந்து நாடார்கள் சமூகம்,அரசியல் ,பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட இந்த அமைப்பு பெரிதும் உதவிற்று.

முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு தோன்றுவது வரையில் கிராம தெய்வங்கள் ,வாதைகள் வழிபாடு,இசக்கி வழிபாடு போன்றவை தனிக் குடும்பங்களின் செல்வாக்கில் இருந்தவை.பெரும்பாலும் அவை இன்றும் கூட சில விதிவிலக்குகளைத் தவிர்த்து தனிக்குடும்பங்களைச் சார்ந்தே உள்ளன.

முதன்முதலாக நாடார்கள் தங்கள் சமூகத்திற்குள் கண்டடைந்த ஜனநாயக பூர்வமான அமைப்பு இந்த முத்தாரம்மன் கோவில்கள்தான்.தனிக்குடும்பங்களின் அதிகார ஆதிக்கம்,நிலச்சுவான்தார்களின் தான்தோன்றித்தனம் ,திருவிதாங்கூர் மகாராஜாக்களின்  வரி  முகவர்களின் அத்துமீறல்கள் போன்ற தீமைகள் முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு மூலமாகவே நீங்கிற்று.


இந்த அமைப்பு தோன்றுவது வரையில் இந்து நாடார் ஊர்கள் என்னும் அமைப்பு உருவாகவில்லை.மக்கள் பல்வேறு தோட்டங்களில் குடியிருந்தார்கள்.இந்த தோட்டங்கள் விளைகள் என்று அறியப்பட்டன.உதாரணமாக பன விளை,மங்கா விளை , பிலாவிளை இவ்வாறாக . தொழிலின் நிமித்தம் இடம்பெயர்வதும் மீண்டும் திரும்புவதும் இவ்வாறாக .நிலசுவான்தார்கள் மட்டுமே நிரந்தர வீடுகளில் குடியிருந்தார்கள் .

முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகமுறை உருவானதும் இரண்டு முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன .முதலில் அது தனிமனித செல்வாக்கை ,ஆதிக்கத்தை சமூகத்திற்குள் குறைத்தது.நிலசுவான்தார்களின் ,
வரி  முகவர்களின் நிகரற்ற அதிகாரத்தை பணிய வைத்து ; அதிகாரத்தை மக்களின் பக்கமாகத் திருப்பியது.இரண்டாவதாக இந்த அமைப்பு சமூகத்திற்குள் இருந்த உபசாதிகள் அனைவரையும் ஊரென்னும் அமைப்பிற்குள் திரட்டி இணைத்தது.பல உபசாதிகளாகப் பிரிந்திருந்த நாடார்கள் இந்த அமைப்பின் மூலம் இணைந்தார்கள்.சாணார்களுக்கும் , புழுக்கைச் சாணார்களுக்கும் மற்றும் நாடார்களுக்கும் இடையில் இருந்த மாயக்கோட்டை இந்த அமைப்பே அகற்றியது.

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இது யாரோ சிலரால் திட்டமிட்டு உருவாக்கியதல்ல என்பதில் அடங்கியிருக்கிறது,மக்கள் தங்களின் தேவையை முன்னிட்டு இந்த அமைப்பை சாதித்தார்கள்.ஊருக்கு ஊர் மக்களாகவே முன்னின்று உருவாக்கிக் கொண்டார்கள்.இதுபோல எனது அறிதலுக்கு எட்டியவரையில் ; மக்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவும் ,தங்கள் உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை சமூகம்,அரசியல் , பொருளாதாரம் போன்றவற்றில் உந்திக் கொள்ளவும் தாங்களாகவே கண்டடைந்த பிற அமைப்புகள் எதுவும் தமிழ்நாட்டில் கிடையாது.

தங்களுக்கு உரிமையற்ற உயர் பொருட்கள் எதுவாக இருந்தாலும் ,அது தங்களுக்குத் தேவையற்றது என்கிற குணத்தை நாடார்கள் கண்டடைய இந்த அமைப்பே உதவியது.உயர் பொருட்கள் தங்களுக்குத் தேவை என கருதுமிடங்களிலும் கூட நாடார்கள் , அதிகாரத்தை அந்த உயர்பொருளுடன் தொடர்புடைய தனிநபர்களிடமோ,சமூகத்திடமோ விட்டுத் தருவதில்லை.அதனை விலைக்கு பணம் கொடுத்து வாங்கிவிட முடியுமா என்று யோசிப்பார்கள்.அல்லது அதுபோன்ற ஒன்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள்.

அதுபோலவே தங்களைத் தாழ்வானவர்களாகக் கருதும் , கணக்கிடும் மத அமைப்புகளிடம் அதிகார நிறுவனங்களிடம் தொழில் நிமித்தமாக அன்றி பிற விதங்களுக்காக போய் நிற்பதில்லை.தங்களுக்கு உரிமையை,பங்களிப்பை மறுக்கும் ஏதுவும் தங்களுக்கு அவசியமற்றது என்பதை முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம்தான் கற்றுத் தந்தது.பிற அதிகாரத் தரப்பிடம் சென்று சரணடைவதில்லை.

பிற அதிகார நிறுவனத்தில் தொழிலின் நிமித்தம் கடைசியாளாக வேலை செய்யும் ஒரு இந்துநாடார்: ஊர் நிர்வாகத்தின் தலைவராகக் கூட பல சமயங்களில் இருக்கும் வாய்ப்புண்டு.அவரது அதிகாரத்தை நிறுவனத்தால் சுருக்க முடிவதே இல்லை.

உரிமையற்ற இடங்கள் அவை சொர்க்கத்தையே பரிசளிக்கிறோம் என்னும் உத்திரவாதத்தைத் தருபவையாக இருப்பினும் கூட, அவற்றை நாடார்கள் புறக்கணித்து விடுவதைப் போல ,அல்லது அதிலிருந்து விலகிச் சென்று விடுவதைப் போல உரிமையிருக்குமேயானால் விழுந்து கிடந்து வேலையும் செய்வார்கள்.உதாரணமாக இன்றும் முத்தாரம்மன் கோவில்களில் அய்யர்களை வைத்து பூஜை செய்கிற ஊர்கள் உண்டு.ஆனால் அய்யர்கள் அங்கு ஒரு மேல்நிலையை பிரதிநிதித்துவம் செய்கிறவராகவோ,மக்களிலிருந்து ஒரு படி மேலே எனவோ கணக்கிடப் படுவதில்லை.மக்கள்தான் பெரியவர்கள்.பின்னர்தாம் எல்லாமே.அய்யர்கள் பூஜையில் வேலையாட்கள் என்பதற்கும் மேலே கடுகளவு கூட போற்றப்படுவதில்லை.வேலையை செவ்வனே செய்யாமல் போகும் பட்சத்திலும் சரி,அதிகார ஆசையில் ஊசலாடும் போதும் சரி அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம் .

முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாக அமைப்பு ; இந்து மத அமைப்பு மட்டுமே என்பது போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் கூட ,இது கிளர்ச்சிகரமான மக்களின் உளவியல் சார்புநிலையைத் தன்னகத்தே கொண்ட மக்கள் அமைப்பு முறை ஆகும்.திருச்செந்தூரை நிராகரித்து விட்டு உவரி சுயம்புலிங்கசாமி கோவில் உருவான திக்கும் திசையும் இதுவே .மக்களைப் புறக்கணிக்கும் தெய்வங்களுக்கோ , சாமிகளுக்கோ வேலையில்லை என்னும் குணத்தை சகல பண்புகளிலும் கண்டடைய உதவிய , மக்கள் உளவியல் பின்புலம் கொண்ட அமைப்பு முறையே முத்தாரம்மன் கோவில் வழிபாடும்,ஊர் நிர்வாகமும்.நிறுவனத்தில் தன்னிடம் கடைநிலை ஊழியனாக வேலை பார்ப்பவனின் வீடு நோக்கி அரசியல் தலைவர்கள் வந்து செல்வதை ;முதலாளி கண்டு திகைக்கும் இடத்தில் இந்த முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில் இந்த அமைப்பு நிலச்சுவான்தார்களிடமிருந்தும் , ஆதிக்க சக்திகளிடமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள போராட வேண்டியிருந்தது .இந்த போராட்ட கூறு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது . "எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? அவ்வளவிற்கு பெரியவர்களாகி விட்டீர்களா ? என்பது போன்ற ஆதிக்கச்  சப்தங்களை "கணக்கு வழக்கை யாராக இருப்பினும் பொதுவில் வைத்து விட்டு பேசு " என்கிற எதிர்வினை முலமாக ஸ்திரபடுத்தியது.

கணக்கு கேட்டல் என்பதே இந்த அமைப்பின் ஜனநாயகத்தைக் கட்டிக் காத்தது.
இறப்புச் சடங்குகளில் மக்களின் செல்வாக்கை இந்த அமைப்பு உறுதி செய்தது.இந்த அமைப்பை உதாசீனம் செய்பவர்கள் கூட இறப்புச் சடங்குகளின் போது இந்த அமைப்பின் முன்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என்பது இன்றுவரையில் கடைபிடிக்கப்பட்டு வருவது.

முத்தாரம்மன் கோவில்கள் என்பதும் .இவை கொண்டியியங்கும் நிர்வாகமும் வெளியே தெரிவது போன்ற வெறும் பஜனை மடங்கள் அல்ல.மக்கள் தங்களைக் கண்டடைந்த பாதை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"