இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ?

இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ?


எந்த ஒன்று இருந்ததோ ,எந்த ஒன்றை ஒட்டு மொத்த சமூகத்தின் கண் முன்பாக இடித்துத் தள்ளினீர்களோ அதனை மீண்டும் கட்டித் தருவதுதானே நியாயம் ? இல்லாததற்கு துடிப்பது எதனைக் காட்டுகிறது ? வரலாற்று காரணிகள் வழியே ,சாதுர்யமான வாதங்களின் மூலமாக ,விலைக்கு வாங்கப்பட்ட எதிர்தரப்புகளின் ஒப்புதலைக் காரணம் காட்டி மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்ட முயற்சிப்பது எந்த வகையான நியாயம் ? இதற்கு நீங்கள் நம்புகிற ராமன் சம்மதிக்கிறானா ?
எனக்குத் தெரிந்த ராமன் தந்தையின் வாக்குறுதிக்காக பதினான்கு வருடங்கள் வனவாசம் சென்றவன்.நீதியின் பிம்பம்.நியாயங்களை வளைத்து அநீதி நிறுவப்படுதலை அவன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டான் என்றுதான் நினைக்கிறேன்.இல்லை ஒருவேளை நீங்கள் செயற்கையான வரலாற்றுக் காரணிகளை முன்வைத்தும் ,வாத சாதுர்யங்களை முன்வைத்தும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றால் ,இந்தியா முழுமைக்கும்; இதுபோன்ற செயற்கையான வரலாற்று காரணங்களும் ,வாத சாதுர்யங்களும் கிடைக்கும் பட்சத்தில், இங்கே இருப்பவற்றை இடித்து விட்டு மறுகட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? இது ஒரு முறையற்ற செயல்.
இந்தியா முழுமைக்கும் இந்து பழமைவாத ,அடிப்படைவாத சக்திகள் ,பசுக் குண்டர் குழுக்கள் பா.ஜ.க அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள்.சிவ் சேனா போல பல அதிருப்திகள்.ஏற்கனவே இந்த குழுக்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கி சிறுமையான அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களை பா.ஜ.க வால் சமாளிக்க இயலவில்லை என்பதே உண்மை .ராமர் கோவிலை சாதுர்யமாக எழுப்பி விடுவதன் மூலமாக இந்த பழமைவாத , அடிப்படைவாத இந்து தரப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பா.ஜ.க குறுகிய கணக்கு போட்டுப் பார்ப்பதையே ,இந்த ராமர் கோயில் மும்முரம் காட்டுகிறது. அதற்குரிய வியூகங்கள் தயாராகின்றன . மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை சுமூகத் தீர்வாக கருதி "இந்து தமிழ்" நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.சுமூகத் தீர்வு ஒருபோதும் ராமர் கோவில் கட்டுவதாக இருக்க முடியாது இந்தியாவில் .
மசூதி இடிக்கப்பட்டதிலிருந்தே பழமைவாத ,அடிப்படைவாத இந்து தரப்பினரால்; "இடிக்கப்பட்டது பழுதடைந்த கட்டிடம்தானே அன்றி மசூதியல்ல" என்ற ஒரு புத்திசாலித்தனமான வாதம் இனிக்க இனிக்க முன்வைக்கபட்டுக் கொண்டே இருக்கிறது.இந்த வாதத்திறமைக்கு முன்பாக நான் எழுப்புகிற ஒரேயொரு எளிமையான கேள்வி,வழிபாடு நடைபெறாதவை எல்லாம் வெற்றுக் கட்டிடங்கள் என்றால் இந்தியா முழுவதிலும் இது போன்ற ஏராளமான வெற்றுக் கட்டிடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இடித்து நொறுக்கி விடலாமா என்ன ? மாவட்ட வாரியாக , மாநிலங்கள் வாரியாக வழிபாடற்ற கட்டிடங்கள் ஏராளம் உள்ளன.எப்படி வசதி ?
சாட்சியங்களை மறைத்தோ ,ஒளித்தோ வைத்துக் கொள்வதற்கு ; பாபர் மஜித் ரகசியமாக ஒன்றும் இடிக்கப்படவில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த மனங்களின் மீது,இறையாண்மை மீது பகிரங்கமாக மோதி, கண்காட்சி செய்து , அது இடிக்கப்பட்டது.அது இடிக்கப்பட்டதை போலவே , இடித்தவர்களின் நோக்கமும் இந்திய இறையாண்மைக்கும் நீதிக்கும் எதிராக பகிரங்கமாக வெளிப்பட்டது.அவர்கள் இந்தியாவை இந்து ராஜ்யமாக மட்டுமே கருத்தில் கொள்கிற, இன்றைய சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானவர்கள். இந்தியா பல மதங்களின் தாய் வீடு என்பதறியாத பழமைவாதக் குழுக்கள் அவை.
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதே நியாயம்.பாபர் மஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.இந்திய முஸ்லீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திய நிகழ்வு அது.பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய இறையாண்மை,மாண்பின் மீது நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதல் அது.அவர்கள் அனைவரும் இந்தியாவை இந்து ராஜ்யமாக கற்பனை செய்பவர்கள்.அந்த தாக்குதலை அவ்வாறே ஏற்பது இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து.
இந்திய இறையாண்மை என்பது எந்த குறிப்பிட்ட ஒரு மதத்துடனும் தொடர்புடைய ஒன்று அல்ல.அது பன்முகத்தன்மையின் மீது எழுந்து நிற்பது.எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இந்தியாவின் இறையாண்மை அவ்வாறே பாதுக்காக்கப்படுத்தலில் மட்டுமே அதன் உயிர் அம்சமும் , பெருமையும் , ஜனநாயகத்திற்கான நீடித்த உத்திரவாதமும் அடங்கியிருக்கிறது.
இடித்த இடத்தில் மசூதியை கட்டுங்கள் அதுவே சாலவும் சிறந்த செயல்,இல்லையெனில் இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றும் விதமான நினைவுச் சின்னங்களை அங்கே நிறுவலாம்.ராமர் கோவிலை அதில் கட்டியெழுப்புதல் ராமனுக்கும் தகாது,இந்தியாவின் இறையாண்மைக்கும் கேவலம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"