நீருக்குள் இருக்கிறது கடல்

நீருக்குள் இருக்கிறது கடல்
1
என்னைப் பற்றி 
எழுதுவதாக சிலர் 
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் பற்றியெழுத என்ன இருக்கிறது
உங்களிடம் இல்லாதது ?
என்னைப் பற்றியெழுதும் போதும்
என்னைப் பற்றியல்லாத
ஒன்றே
என்னில் இருக்கிறது
2
எதையேனும் கற்று வைத்திருந்தால்
கழற்றி வைத்து விட்டு
குளத்தில் இறங்குங்கள்
தண்ணீருக்கு உங்களோடு பேச
வேண்டும்
என்கிற ஆசை
உண்டு
3
ஒரு பறவைக்கு
தானியமிட்டீர்கள்
அனைத்து பறவைகளும்
நீங்கள் யார் என்பதை
அடையாளம் கண்டு கொண்டன
4
ஒருமுறை அந்த பறவையின் இசையைக் கேட்டீர்கள்
பின்னர்
உடல்
உயிருள்ளவரையில்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
5
ருசியெல்லாம்
பரந்தாமனே
6
குளிக்கிற படித்துறையில்
சேர்ந்து ஒரு எருமையும் குளித்துக் கொண்டிருந்தால்
அது எவ்வளவு பெரிய
ஆசிர்வாதம்
7
படித்துறை என்பது பெருங்காலம்
அதில்
இன்று
நான்
குளித்தேன்
8
இந்த பக்கம் முழுக்க வயல்கள்
அந்தப் பக்கம் முழுக்க வயல்கள்
நான் பகவானைப் பார்க்க சென்று கொண்டிருக்கிறேன்
அவர் என்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்
9
நீருக்குள்
இருக்கிறது கடல்
10
பத்து குழந்தைகள் குளத்தில்
இறங்கி விளையாடத் தொடங்கினால்
யார் குளம் யார் குழந்தைகள்
என்பதே
குழம்பி விடுகிறது
11
குளத்தில் சற்று நேரம் மூழ்கியிருந்தேன்
குளத்திற்கு கரைகள் கிடையாது
என்பது
தெரிந்து விட்டது
12
இந்த உடலைக் கொண்டு
அறிய முடிந்ததெதுவும்
உடலில்
இல்லை
வேறெங்கோ இருக்கிறது

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"