சித்ரா பௌர்ணமியை என்னதான் செய்து விட முடியும் ?
சித்ரா பௌர்ணமியை என்னதான்
செய்து விட முடியும் ?
1
வாழ்வென்பது போர்
என்பதை அறிந்த வினாடியில்
ஆயுதங்கள் அனைத்தையும்
கீழே போட்டேன்
ஏனெனில் இந்த போருக்கு
தனியாக
சென்றாக வேண்டும்
ஆயுதங்களோடு அல்ல
2
அகந்தைதான்
அனைத்து ஆயுதங்களாகவும்
இருந்தது
3
நீயெடுக்கும்
அனைத்து ஆயுதங்களும்
என்னிடமும்
இருந்தவைதான்
4
ஆயுதங்களை
கீழே போடுவதற்கு முன்னர் ஒரு
நானிருந்தான்
அவன்
அகந்தையின்
நான்
ஆயுதங்களை கைவிட்ட பிறகு
ஒரு நானிருக்கிறான்
அவன் தன்னுடைய
நான்
5
ஆயுதம் பிரயோகிக்கத் தெரியாதவனுக்கு
ஆயுதக் கவர்ச்சி
அதிகம்
6
ஆயுதங்கள் ஒருபோதும்
அடுத்தவனைக் கொல்வதில்லை
7
கத்தியிருக்கிறது என்று
நினைத்துக் கொண்டிருப்பது வரையில்
கத்தி இருக்கும்
நீ இருப்பதில்லை
8
ஒருவரையும் நீ ஒன்றுமே
செய்ய முடியாது
9
அகந்தையால் செய்வதெல்லாம்
பாவமாக பின் வந்து நிற்கும்
கதறியழுதாலும் கரையாமல்
10
சூதில் பெற்ற வெற்றி எதிராளிக்கு
எல்லா காலத்திலும்
பகவானைப்
பரிசாகத் தந்து விடுகிறது
11
சூது அகந்தையின்
விஷ மலர்
பழிவாங்கல்
விஷமுலை சுரப்பி
12
விஷமுலை சுரக்கத் தொடங்கும் பெண்
பேயுரு பெறுகிறாள்
13
பால்சுரக்கும் முலை பகவானுடையது என்றால்
விடம் சுரந்த முலை
சுரந்த இடத்திற்கே சொந்தம்
14
அனாதை ஆனபின்னரே
வாழ்க்கை தொடங்கும்
15
எவ்வளவு அகந்தையை தேற்றியெடுத்து
இடுப்பில்
கொண்டு நடந்தாலும்
சித்ரா பௌர்ணமியை
என்னதான்
செய்து விட முடியும் ?
16
அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு
ஓடி வருகிறானே
என்று பதறி விடாதீர்கள்
வழி விடுங்கள்
தன்னைக் கொல்வதற்கு
சென்று கொண்டிருக்கிறான்
அவன்
17
நியாயங்கள் பேசிக் கொண்டிருக்கும்
வரையில்
நியாயங்கள்
இருப்பதில்லை
18
அகந்தையை தோலுரித்து அகற்ற வேணும்
பகவான்
ஆடையாக
வேண்டுமென்றால்
19
எத்தனை முறை தோற்றதிந்த ஆயுதம் ?
என்பதே
அகந்தைக்கு
பொருள்
20
ஆயுதத்தை வெல்ல முடியுமானால்
அதுவே
வெற்றி
21
அகந்தையின் மீது படுத்துறங்கிப்
புரள்வோனை
அம்புப் படுக்கைக்கு உருட்டி விடுகிறது
பிரபஞ்சம்
#####
ஆனை நடந்தால் குழந்தையாவேன்
1
எத்தனையோ வாகனங்கள் கடக்கின்றன
சாலை அழுத்தமாக இருக்கிறது
கனரக வாகனம் கடக்கும் போதும்
ஒன்றுமே சொல்லாத
சாலை
கோபத்தில் வந்தவனின்
சிறு விபத்தில்
ஓ ...
வலிக்கிறது
என்கிறது
2
பள்ளிக் குழந்தைகள்
ஊளையிட்டுச் செல்கிற
சுற்றுலா
வாகனம்
குதூகலமடைகிறது
சாலை
3
விடியலில் சாலை வேறு விதம்
பகலில் சாலை வேறு விதம்
சாயுங்கால சாலை வேறு விதம்
நள்ளிரவின் சாலை
இருதயம்
4
நாய் சிறுநீர் கழிப்பதும்
பையன் சிறுநீர் கழிப்பதும்
சுவை ஒன்றுபோலில்லை
என்பதும்
சாலை தான்
5
இந்த பஜாரில்
குடல் போலும்
நடுவில்
படுத்திருக்கிறது
நெடுஞ்சாலை
6
கடைகள் அடைத்துவிடுவார்கள்
நான் வீட்டுக்குச் சென்று விடுவேன்
பின்னர் இரவில்
என்ன செய்வீர்கள்
என்றேன் சாலையிடம்
ஆகாயத்துக்குச் சென்று விடுவேன்
என்கிறது சாலை
7
மன நிம்மதியோடு இருக்கும் சாலையை காண
ஒரு நாள் முழுதும் காத்திருக்க வேண்டும்
8
மனிதர்களை இஷ்டத்திற்குப் பிடித்துப் போயிருக்கிறது
இந்த பஜார் சாலைக்கு
9
உறங்குவீர்களா என்றேன்
பகலில் தூங்கி விடுவேன்
இரவில் விழித்திருப்பேன்
என்கிறது சாலை
10
அப்படியானால் நீங்கள் யார் சாலையாரே ...
பஜாரில் உள்ள அத்தனைபேருக்கும்
நானே
வயிறு
11
கோபுர விளக்கொளியில்
கனவு காண்பேன்
ஆனை நடந்தால் குழந்தையாவேன்
ஸ்கூட்டியோட்டிக் செல்லும் யுவதியின்
பின்னிருக்கையில்
ஏறி அமர்வேன்
அதனால்தான் அவள் அத்தனை அழகு
ரோட்டோரத்தில்
கடை வைத்திருப்பவன்
நண்பன்
சந்தில்
கடை வைத்திருந்தால்
காதலி
நன்றி சாலையாரே ...
Comments
Post a Comment