Posts

Showing posts from October, 2020

கொலையாளி விட்டுச்சென்ற சட்டை

Image
 [ சிறுகதை] கொலையாளி விட்டுச்சென்ற சட்டை  அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது .பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது .தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது .பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது . சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந்த சட்டையை விட்டுச் சென்றான்

கவிதைக்கு இரண்டு ரூபாய் என்று விலை

Image
  என் பணி செய்வது... என்னுடைய கவிதைகளை நானே தொகுத்து சின்ன சின்ன தொகுப்புகளாக நானே வெளியிட்டு விடுவது என முடிவு செய்திருக்கிறேன். கவிதைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமாக எழுதியிருக்கிறேன்.பின்னுக்கு கிளறிச் செல்லச்செல்ல ஏராளம் புறப்பட்டு வருகின்றன.பல கவிதைகள் மனதில் மறந்தவை.யாரோ எழுதியவை என்பது போல வாசிக்க ...ஓ நீ தான் எழுதினாயா ..என்பது போலும் இருக்கின்றன.முற்றிலும் வேறொரு மனம் கொண்டு எழுதபட்டவையாக இவை உள்ளன.கடந்த கால முன்தொகுப்புகளில் இருந்து இவை முற்றிலும்  வேறுபட்டு இருக்கின்றன.ஆனால் முன்தொகுப்புகளின் வழியே ,அவற்றின் மீது ஏறி அமர்ந்தே இன்று இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.அவற்றின் முதுகில் ஏறாமல் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருக்க நியாயமில்லை. ஐம்பது ஐம்பது கவிதைகளாக பின்னிருந்து தொகுத்து வெளியிட வேண்டும்.அதுவே எளிமையானது.ஐநூற்றுக்கும் அதிகமாக எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.பின்னால் செல்லச் செல்ல குகை போல நீண்டு செல்கிறது.ஞானக்கூத்தன், ஒரு கவிஞன் இருநூற்றம்பது கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது என்று சொல்லியிருப்பார்.அது என்ன கணக்கு என்று தெரியவில்லை.ஒருவேள

10 கவிதைகள்

Image
 10 கவிதைகள் 1 பூங்கொடி மருத்துவமனையில் இருந்தாள் மகனுக்கு சர்ஜரி ஐந்து வயது இதயத்தைக் கீறிப் பிளந்து படுத்துக் கிடந்தான் பாலகன் பூங்கொடி கருதியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்குக் காண வந்தார்கள் இல்லையென்று சொல்லமுடியாது இருந்தாலும் பூங்கொடி எதிர்பார்த்த அளவிற்கு கனியவில்லை அவர்கள் எதிர்பார்க்காத ஏதோ போல வந்தார்கள் அவள் எதிர்பார்த்த ஏதோ போல வரவில்லை முக்கியமாக பூங்கொடி வெறுத்து ஒதுக்கி வழிவிட்டோடியவன் இந்த பரிதவிப்பில் வந்து விடுவான் என எதிர்ப்பார்த்தாள் வரவில்லை மொத்ததில் பூங்கொடிக்கு சர்ஜரியில் திருப்தியில்லை இரண்டி வாட்டி ஆயிருச்சும்மா இப்படில்லாம் பண்ணா அப்பா வர மாட்டாருமா இனி தாங்க மாட்டேம்ம்மா.. என்று மெல்ல முனகினான் பையன் "சபாஷ் பேச்சு வந்துருச்சு பையனுக்கு தப்பிச்சிருவான் " தற்செயலான தாதி கடவுளின் பாஷையை பேசிக் கடக்கிறாள் 2 மழை பார்க்க வேண்டுமா அச்சு அசலாக மழை மட்டும் பார்க்க வேண்டும் மழை பற்றின நினைவுகள் நீக்கி மழை பற்றின கவிதைகள் நீக்கி குறிப்பாக காதல் நீக்கி மழை பற்றி சொல்லப்பட்டனவெல்லாம் நீக்கி நீக்கி நின்று மழை பார்க்க வேண்டும் நனையக் கூடாது நனைந்தவன் காண்பது மழை

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

Image
  லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 1 அதோ என் சித்தப்பா இப்போது விலகிச் சென்று விட்டார் நீயும் விலகு இன்னும் இடைவெளி தேவை அதோ என் மாமா இன்னும் விலகு இடைவெளி தேவை அப்பா இல்லை என்பது போலவே போய்க்கொண்டிருக்கிறாரே அவர் தான் அப்பா ஓ அவள் என் மனைவி அவன் என் கணவன் அவர்கள் என் குழந்தைகள் விலகு எனக்கும் உனக்குமே இப்போது இடைவெளி தேவை எனக்கு யாருமே இல்லை அண்ணா விலகு இப்போது உனக்கும் உனக்குமே இடைவெளி தேவை 2 தாலத்தை எடுத்து வையுங்கள் அம்மா பசிக்கிறது தாலத்தில் சோறினை போடுங்கள் அம்மா பசிக்கிறது பிறக்கும் முன்பிருந்தே பசிக்கும் பசி 3 ஹெல்மெற்றுக்குள் இருக்கும் நண்பனுக்கு பல சௌகரியங்கள் முகம் தெரியாது என நினைத்துக் கடந்துவிடலாம் இந்த சனியனா வருகிறான் என ஒதுங்கி விரைந்து விடலாம் தெரியவா போகிறது தெரிந்தால் தெரியட்டுமே காறியுமிழ்ந்து கடக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஹெல்மற்றுக்குள் நண்பனின் தலை வேறொன்றாக இருக்கிறது நாம் பொதுவாக அறியாத வேறொரு தலை அது எல்லா வசதியும் இருந்தும் நெளிந்து வளைந்து இறங்கி நான்தான் என்று ஹெல்மற்றை இறக்கி நின்று கொண்டிருக்கிறான் பாருங்கள் ஒரு நண்பன் அவன்முகத்தில் அவனிங்கே பிழைக்க