Posts

Showing posts from April, 2022

உடன் பிறந்தவர் - [ ஜெயமோகன் -60 ]

Image
  உடன் பிறந்தவர் - லக்ஷ்மி மணிவண்ணன் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இருக்கும். சுந்தர ராமசாமி பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றினை எதேச்சையாகப் படித்தேன்.யார் எழுதினார்கள் என்பது என்னுடைய நினைவில் இல்லை.ஆனால் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது நினைவில் தங்கியது.சுந்தர ராமசாமியின் மாணவர்கள் இருவர் ,ஒருவர் ஜெயமோகன் .மற்றொருவர் லக்ஷ்மி மணிவண்ணன் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.அப்படிகூட இல்லை.சரியாக சொல்வதாயின் ஜெயமோகன்,லக்ஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் குரு சுந்தர ராமசாமி என்று ஆங்கிலத்தில் அதில் சொல்லப்பட்டிருந்தது.யோசித்துப் பார்த்தால் சுந்தர ராமசாமி தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு துறை சேர்ந்தவர்களையும் என எடுத்துக் கொண்டால் ஐநூற்றுக்கும் அதிகமானவர்களைப் பார்த்திருப்பார்.அதில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு எங்களை ஒப்ப அணுக்கம் இருந்திருக்கும்.பிற்காலங்களில் அவரிடம் ஏராளமானோர் வந்து தங்களை புதிதாகவும் ஒட்டிக் கொண்டார்கள்.அது இயல்பானதும் தானே? அதிலிருந்து எங்கள் இருவரையுமே அந்த குறிப்பை எழுதியவரின் மனம் சேகரித்திருக்கிறது.அடையாளம் கண்டிருக்கிறது.காலம் கண்டறியும் அடையாளம் என்பது இதுதான்.

அவள் மலர்த்தியிருக்கும் பூ - 13 கவிதைகளின் தொகுப்பு

Image
 1 என்னுடைய பதின்ம வயதுகளில் கிறுக்கனாயிருந்தேன் என்பதை இருபதுகளில் கண்டு பிடித்தேன் பதின்ம வயதின் நம்பிக்கைகளை கிழிந்த ஆடைகளைப் போல கழற்றி அதனதன் கள்ள ஆசான்களின் மீது விட்டெறிந்தேன் முப்பதுகளின் தொடக்கத்தில் இருபதுகளில் எப்படி முழு கிறுக்கனாக இருந்தேன் என்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தூக்க மாத்திரை பரிசளித்தேன் நாற்பதில் அதற்கு முன்னர் இருந்ததெல்லாம் கிறுக்கே என்று கத்தத் தொடங்கியது உள்ளத்தில் அமர்ந்து சிரித்த கள்ளத் தெளிவு ஐம்பது வர தெளிவும் ஒரு கிறுக்குதான் என்பது தெரிந்து விட்டது இப்போது காலையில் கிறுக்கு பிடிப்பது மாலையில் தெரிந்து விடுகிறது மாலைக்கிறுக்கு காலையில் தெளிகிறது ஆக கிறுக்கும் தெளிவும் இரண்டு கால்கள் ஒரு கால் முன்னே செல்லும் போது மற்றொரு கால் பின்னால் வருகிறது பயணத்தில் இருப்பவனுக்கு 2 மூக்கில் சிறுகோணல் உதட்டில் சிறுபிளவு பல்லொன்றில் அழகிய ஒடிவு எல்லாம் இணைந்து அற்புதமாய் அமைந்த அழகி இல்லையென மறுத்து இல்லையை அகத்துக்குள் போட்டு கொண்டேயிருந்தாள் உள்ளத்தில் சிறுகோணல், சிறுபிளவு பெரிதாகி ராக்ஷ்த ஒடிவு உடைந்து துகள்துகளாய் தொங்குகிறது சிற்பம் 3 ஆசையின் தலைதான் எவ்வளவு பெ