அமிழ்து போன்றோர் பனம்பழம்

அமிழ்து போன்றோர் பனம்பழம்

என்னுடைய கடுமையான காலங்கள் அவ்வப்போது வந்து வந்து செல்பவை.இனி நிம்மதியாகவும் அலப்பில்லாமலும் இருக்கப் போகிறோம் என்று தோன்றும் போது கடுமையான காலங்கள் வந்து முன்னுதிக்கும்.ராத்தங்கும்.அவற்றை எவ்வாறு  எதிர்கொள்கிறேன் என்பது அது கடந்து சென்ற பின்னர் யோசிக்க திகிலாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பது.கடக்கும் போது வலிதான்.இந்த கடுமையான காலங்கள் எல்லோருடைய வாழ்விலும் வரக்கூடியவைதான்.அவரவருக்குத் தக்கபடி.நீங்கள் ஜோதிட சீகாமணிகளை போய் சந்தித்தாலும் வரும் சந்திக்காவிட்டாலும் வரும் .வாழ்வின் சுழற்சியின் நியதி இது தப்பவே முடியாது.சாமியை கும்பிட்டாலும் வரும் கும்பிடாவிட்டாலும் வரும்.தக்கபடி தக்கபடி .இந்த காலங்களில் மெய்வருத்த கூலி கிடைக்கும்.மெய் வருந்த கடவுள் இரங்குவான்.இவனைப் போட்டு படாதபாடு படுத்துகிறோமே என்று அவனுக்கு தோன்றிவிடும்.சலிக்கும்  .திருவள்ளுவர் பெருமான் தெய்வத்தாற் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி  தரும் என்று இதைத்தான் சொல்கிறார்.இதில் "முயற்சி தன் மெய்வருத்த" என்பதே பாடம்.அது விளங்க வேண்டும்.அரசனானாலும் ஆண்டியானாலும் இதில் விதிவிலக்கில்லை.அரசன் நினைத்துக் கொள்வான் இது ஆண்டிக்கு இல்லை போலும் என்று.ஆண்டிக்கு சிலசமயங்களில் தெரிந்திருக்கலாம் அரசனுக்கும் இதே நிற்காது ; தோன்றும் என்பது.

பொதுவாக எவர் ஒருவருடைய செயல்களையும் பராது சொல்ல வாழ்வு சார்ந்தது முயற்சிப்பதில்லை.சில சமயங்களில் சொல்லியிருக்கிறேன்.சொல்லி இரண்டொரு நாட்களில் அதனை நான் செய்யும் படியாக நேர்ந்துவிடும்.இப்படி அனுபவப்பட்டு பட்டே வாழ்வின் கதிநிலை பேரில் பராது முன்வைப்பதைக் கைவிட்டேன்.இப்படி நடக்கிறானே? என்பவர்கள் ,இப்படி ஏன் நடக்கிறான் என்பதையும் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும்.கடுமையான காலங்கள் எல்லாவற்றிலும் கடுமையான உழைப்புதான் மாமருந்தே .எல்லோருமே கைவிட்டு விட்டார்களா ? நல்லது .அனாதை போன்று எண்ணம் வந்து விட்டதா ? அது மிகவும் நல்லது.மெய் வருந்தும் போது பராசக்திக்கு பட்டினி போட துணிச்சல் குறைவு.ஆனாதையாகிவிட்டோம் என்கிற எண்ணம் வாழ்வில் அவ்வப்போது வரும்படியான வாழ்க்கை வாழ்வதே தலைசிறந்த வாழ்க்கை.அகந்தையின் அத்தனை அழுக்கையும் அது அடித்துக் கொண்டு போகும்.அனாதை ஆகிறவனின்  அருகிலேயே ஆண்டவன் எப்போதும் உடனிருக்கிறான்.எனது அனுபவம் கற்றுத் தந்த உண்மை இது.

பராசக்தி எது பற்றாக்குறையாக ஒருவருக்கு இருக்கிறதோ அதை ஈடுகட்ட இன்னொரு விதமான  பற்றாக்குறையுடன்   இணைப்பாள்.இரண்டும் சேர்ந்தால் முழுமையாகி விடும்.ஆனால் இதனைக் காணத் தெரிய வேண்டும் .இந்த அருள் அவளால் வருவது என்று அறியத்  தெரியாதவர்களை அவள் அகன்று விடுவாள்.பின்னர் குறை பேசி பலனில்லை.பற்றாக்குறை  அனைத்துமே பட்டினிதான் என்பது அவளுக்குத் தெரியும் .  பற்றாக்குறையும் மற்றொரு விதமான  பற்றாக்குறையும் இணையும் போது அமிழ்தாகிவிடும்.ஆனால் அவள் உண்டு பண்ணும் காரியத்தை புலனறியத் தெரியவேண்டும். அலட்சியத்தால் கடப்பவர்களுக்கு இது விளங்காது .அலட்சியத்தைப் போன்றதொரு பேரிடர் வேறில்லை.ஒருசமயம் கடும் பசி.காட்டில் இருக்கிறேன் ஒரு சாமியாரோடு.நாராயணா... என்றதும்  அமிழ்து போன்றோர் பனம்பழம் அப்படியருகில் ஓசையுடன் வந்து விழுந்தது  .அந்த பனம் பழம் உடலில் இறங்கி உயிரானது. அதன் இனிப்பையும் சுவையையும் சொல்லித் தரமுடியாது.நெய்விளக்குப் போல உடலை எரியச் செய்கிற சுவை.  அப்போது நான் இது எனக்கான உணவில்லையே நாராயணா ? சங்கரன்கோவில் பிரியாணியல்லோ எதிர்பார்த்தது என்றிருந்தால் பராசக்தி கைவிட்டுப் போயிருப்பாள்.

பொதுவாக எனக்கு பசி பொறுக்க முடியாது.சிறுவயதில் பட்ட பசி தந்த அனுபவங்கள் அப்படி.வீட்டில் சாப்பிட வரும்போது கழுவி மூடி இல்லையென்கிற நிலையில் வைத்திருந்தால் எனக்கு கொலைக்கோபம் உண்டாகும் . இந்த இடத்தில் பசிக்காது என்பது உறுதியாகிற இடங்கள்  மட்டுமே எனக்கு நிம்மதியானவை .ஒருமுறை ஒரு திரைப்பட இயக்குனரோடு வேலை செய்த போது என்னை இரண்டு நாட்கள் பட்டினி போட்டான்.இவ்வளவிற்கும் சோறு தவிர்த்து வேறு ஊதியம் ஏதுமற்ற வேலை அந்த பிரபல இயக்குனரிடம் நான் பணியாற்றியது.உத்திரவாதங்கள் அனைத்தையுமே காற்றில் பறந்தபோதும் கூட உடன்தானிருந்தேன்.ஏழைகளுக்குத் தருகிற உத்திரவாதங்கள் கடவுளுக்கு தருகிற உத்திரவாதங்களைப் போன்றவை.தன்னிடம் காட்டப்பட்ட உத்திரவாதக்கேடுகளை விடவும் அவன் சந்தர்ப்பம் பார்த்துத் தகித்திருப்பது ஏழைகளுக்கு கொடுக்கப்பட்ட உத்திரவாதங்கள் நலிவடையும் போதுதான். இரண்டு நாள் பட்டினிக்கு அந்த சீமான் என்னிடம் வந்து பேசிய தர்க்கம் கொலைவெறியை ஏற்படுத்தியது.பசிக்கு முன்பாக ஒரு தர்க்கமும் செல்லுபடியாகாது.நமது தர்மங்கள் அத்தனையிலும் பசிக்கு முன்பாக எது செய்தாலும் நியாயம் கண்டு விடும்.திருவள்ளுவரிலிருந்து,பாரதி வரையில் பலர் இதனைச் சொல்லியிருக்கிறார்கள்.அப்போது வேலைபார்த்த அலுவலகம் கவிஞர் கனிமொழியின் வீட்டுக்கு அருகில் இருந்தது.சி.ஐ.டி காலனியிலிருந்து மியூசிக் அகாடமி வரையில் அந்த சீமானை கத்தியை கையில் வைத்துக் கொண்டு விரட்டினேன்.பின்னர் ஒரு ஆட்டோவிற்குள் சீமான் குதித்ததால் கடவுள்  என்னை அன்று கொலையிலிருந்து காப்பாற்றினார்.இப்படி பலமுறை அவர் காப்பாற்றியிருக்கிறார்.

இப்போதைய கடுமை வேறுவிதமானது.இதுவரையில் கண்டிராதது.எல்லாமே நன்மைக்குத்தான். இதனை ஏன் சொல்ல வந்தேன் என்றால் கடுமையான காலங்களிலேயே நான் அதிகம் எழுதியிருக்கிறேன்.சமயங்களே இல்லாது வாதை செய்யும் .இனி நாம் எழுதமுடியாமல் ஆகிவிடும் என்கிற பதற்றம் இருக்கும்.நான் குறைவாக எழுதியிருப்பவற்றில் அதிகம் எழுதியது இப்படியான காலங்களில் தான்.ஒவ்வொரு நாட்களுமே எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை உணரச் செய்யும் காலம் இது.இப்போதும் அது போன்றதொரு நற்காலம்.எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"