தை தைக் கவிதைகள்

தை தைக் கவிதைகள்  



1
கலங்கிக் கிடந்த மன ஆழத்திலிருந்து
ஒரு பறவையை உருவியெடுத்தேன்
கலங்கியிருக்கும் போதும் அது உள்ளேதானிருந்தது என்பதைத்
தெளிய வைத்து
அதன் மடியிடுக்கில் எனது ஒரு ஆசையை சொருகி விட்டேன்
ஆறாம் இறகென அதனை அது எடுத்துக் கொண்டோடியது

கலக்கம் கொஞ்சம் தெளியலாயிற்று

காணுமிடம் அத்தனையிலும் ஆசையை சொருகிக் கொண்டே செல்லச் செல்ல
ஆசையாய் ஜொலிக்கிறது ஆகாசம்
தாவரத்தின் கொண்டையில் சூரியனாக
குழந்தையின் கையில் நீர்ச்செம்பாக
பிட்டத்தில் சொருகிக் கொண்ட ஆசை பூமலர்,புது மலர் கொத்தாக

துள்ளித் தெளிகிறது
கலங்கித் தெளிகிறது
வைகுண்டத்தில்
என் பறவை.
பறவைக்கு ஒரு துளி ஆசை என்பதுதான் முழுப் பெயர்

2

கடல் பார்க்க வந்தேன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

மலைகள் காண்பதென் தொழில்
பழகிக் கொண்டிருக்கிறேன்

பார்த்து முடிந்தால் பழகி உணர்ந்தால்
பணி முடியும்

பறவைகளின் பேச்சு பிடிபட்டுக் கொண்டிருக்கிறது
பாதிப் பாதி செய்கையில் கலந்து கொள்கிறோம்
காகங்கள் வந்து கைச்சோறு எடுக்கின்றன

வேறு என்னென்னவோ செய்கிறேனே
எல்லாமிதன் பொருட்டே
புணர்தலும் இதன் பொருட்டே
புசித்தலும்
கவிதை வடித்தலும்
எல்லாம் இதன் பொருட்டே

உங்களை பார்க்கத்தான் வந்தேனென
எண்ணியிருந்தால்...
உங்களைத் தான்
சற்றே எண்ணத்தை
மாற்றிக் கொள்ளுங்கள்

3

என்னிடமிருந்து எதையெடுத்துக் கொண்டீர்களோ
அது உங்களுடையதாகிறது.

அன்பின் ஊற்றையெடுத்துக் கொண்டால் குளம் பெருகும்
இடைவெளியை எடுத்துக் கொண்டால் சுற்றிச் சுவரெழும்பும்

மீண்டும் மீண்டும் கூர்வாளினை எடுத்துக் கொள்வீரேயாயின்
உடலெங்கும் அறுத்துக் கொண்டு சாவீர்கள்

வதந்தியை எடுத்தாட் கொண்டால்
உடல் பிசித்து
மனம் கிலேசம்

ஒரு ஐஸ் பெட்டியை ,களிமண் பொம்மையை
ஒரு குட்டிச் சாத்தானை ,குழந்தையை,பறவையை என்ன
ஒரு பெருச்சாளியைக்கூட எடுக்க முடியும்
எது உங்களுக்குத் தேவைப்படுகிறதோ
அதற்கேற்றார் போலே

உங்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பெருச்சாளி
உங்களை போலேயிருக்குதென்று
எங்களிடம் ஏனப்பா கோபம் ?

தவற விட்ட தேவதையின் கெக்கலிச் சிரிப்புதான் இது
பராதியொன்றுமில்லை.
போய்வாருங்கள் தேவதையைத்
தவற விட்டோரே !

4

முச்சந்தியில் மூன்றுநாளாக
நின்று பார்க்கிறேன்.

அவன் பொண்டாட்டி இவன் பைக்கில் போய் கொண்டிருக்கிறாள்
இவன் பொண்டாட்டி அவன் காரில் அமர்ந்திருக்கிறாள்
அவள் ஏற்று நடப்பாள் வேறு ஒருவனோடு
இவள் விதியும் அவ்வாறே.

ஒருவரும் ஓரமைதியில் இல்லை.
ஆண்டாள் எப்படித்தான் இப்படியெல்லாம் ஓரிடம் நோக்கித் திறந்தாளோ ?

நான்காவது நாளில் அனைவரையும் இடைமறித்து நிறுத்தி
அவளை இவன் பைக்கிலும் ,இவளை அவன் காரிலும்
மாற்றியடுக்கி அனுப்பினேன்

ஐந்தாம் நாளில் வந்து நிற்கிறார்கள்
முன்னதிலும் கேவலமாக.

5

அல்லி மலர்ந்ததும் பின்
தணுத்ததுமென நீ தந்த நகரா நதிக்காட்சிகளை
கைத்தடியூன்றி கடந்து செல்கிற இப்பயணத்தில்
பனிக்காய்ச்சல் போல கடக்கின்றன பிறக்காட்சிகள் எதிர்படும் ஒளியில்

இதில் அல்லி மலர்ந்ததுதான் உண்மையா
தணுத்தது உண்மையா ?

பனிக்காய்ச்சலா
எதிர்பட்ட ஸ்படிக ஒளியா
எது உண்மை ?

பிறக்காட்சைகள் எல்லாம் பிரேமையா ?
நீ கொத்தித்தின்ற என் உள்ளுடல் காட்சியெல்லாம் மாயையா ?

6

பறந்து கொண்டிருக்கிறது கழுத்திலும் வாலிலும் கறுப்பு கொண்ட நாரை

அக்கரையிலிருந்து இக்கரைக்கு நீஞ்சிக் கடக்கும் பசுவின் முதுகில்
இளையராணியின் பல்லக்கு

நீர்ப்பரப்பில் அலையெழுப்பி நகர்ந்த வெண் கொக்கு

வான்பரப்பில் அலை எழும்பும் கருடன்
சுற்றுவட்டப்புதிர் பாதையில் பறந்து கொண்டிருக்கிறது
படித்துறையிலிருந்து கிளம்பி வந்து
வெகுநேரம் ஆனபின்னாலும்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"