R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ?

R .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன ?

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து தடியடி நடத்திய கையோடு R .S .S பேரணி நடத்தியிருக்கிறது.அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் 144 தடை அமலில் இருக்கும் காலத்தில் சென்னையில் இந்த பிரம்மாண்ட பேரணி நடைபெற்றிருப்பதுதான் வியப்பை தருகிறது.

வழக்கமாகவே எந்த அரசு அதிகாரத்திற்கு வருகிறதோ அந்த காலங்களில் அந்த அரசுகளின் கடைநிலைக் குழுக்கள் கால்களை கொஞ்சம் அகட்டிவைத்து  வேகமாக ஆட்டி நடப்பது வழக்கம்.இந்த கடைநிலைக் குழுக்கள்தான் பலசமயங்களில் அதிகாரத்தின் மூளையாக ,அதிகாரத்தை இயக்குபவர்களாக இருப்பார்கள்.இது அனைத்து விதமான கட்சிகளுக்கும் பொருந்தும்.தி.மு.க வந்தால் வட்டச் செயலாளரின் வயிறு பெருப்பதை போல .அ .தி.மு.கவில் புரோக்கர்கள் சட்டைக் காலரை கொஞ்சம் தூக்கி விட்டுக் கொண்டு அலைவார்கள்.கேரளாவில் பிரணராயின் கம்யூனிஸ்ட்கள் வந்ததிலிருந்து கட்சி மாபியாக்கள் தலை தூக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாமே வழக்கமான நடபடிகள்தாம் .வழக்கமாக காணும் அனுபவிக்கும் காட்சிகள்தான்.

ஆனால் பாருங்கள் பா.ஜ.கவின் ஆட்சியொன்றும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஆட்சி நடைபெற்றால்தான் பேரணி நடைபெற வேண்டும் என்பதில்லை . ஒரு பிரச்சனையின் தடைக்காலத்தில் இவ்வளவு கௌரவமாக அனுமதித்து அழைத்துச் செல்கிறார்களே அதுதான் விளங்கவில்லை.சில கலவரங்களுக்குப் பின்னர் போலீஸ் மார்ச் நடைபெறுவதுண்டு.நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று பிரகடனம் செய்யவும் ,மக்களை பீதிக்குள்ளாக்குவதையும் நோக்கம் கொண்டவை அவை.தொழில் பாதுகாப்புப் படையினருக்கும் இந்த ஜோலி உண்டு.மார்ச் முடித்துவிட்டு முந்தின நாள் சுட்டுக் போட்ட புரோட்டாக்களை ஒதுங்கிய கடைகளில் உட்கார்ந்து சவைத்துக் கொண்டிருப்பார்கள்.

இதுபோல இந்த பேரணியின் கோலாகலத்தைக் கண்ட போது R.S.S இயக்கத்தை ஆட்சியாளர்கள் எப்போது துணை ராணுவப் படையாக்கினார்கள் ? என வியந்தேன்.ஜல்லிக்கட்டின் மனோபாவத்திற்கு நேரெதிரான மனோபாவம் கொண்ட உங்களுடைய பேரணி அதே சாலையில் வலம் வரும் போது நீங்கள் எவ்வாறு நினைத்து புல்லரிப்பிற்குள்ளானீர்கள் ? ஒரு பன்னீரையோ,சந்தனத்தையோ,களபத்தையோ  சாதித்துவிட்டதால் உங்கள் அகண்டபாரத குகை கோஷத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டிருக்க கூடும்தானே ?

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே கேரளா பவன் வரையில் போலீஸ் அதிகார துணையுடன் கம்பு சுற்றினீர்கள்.இப்படி கம்பு சுற்றக் கூடாது என்பதை அறிவதற்கே காலம் பிடித்தது .வடமாநிலங்களில் தலித்துகளின் மீதான தாக்குதல்களில் மோடி என்னைத் தாக்குங்கள் தலித்துகளைத் தாக்காதீர்கள் என்று செல்லக் குழந்தைகளிடம் கெஞ்சுவது போன்று உங்களிடம் இரைஞ்சினார். பிற கட்சிகளிடம் உள்ள கூறு கொண்ட உருபடிகளின் அளவிற்கு கூட உங்களிடம் உருப்படியானவர்கள் குறைவு.

ஒரு குரல் தவிர்த்து பிற குரல் அறியாதவர்கள் நீங்கள்.நீங்கள் சார்ந்திருக்கும் சாதிகள் தவிர்த்து பிற சமூகங்களும் சாதிகளும் கூட இந்தியாவில் வாழ்கிறார்கள் என்கிற உண்மைகளைக் கூட உங்களில் பலர் அறியமாட்டீர்கள்.ஓர்மைக்  குறைவும் அதிகம்.அஞ்சிய கலாச்சார தன்னிலை உங்களுடையது.அதிகாரத்தைக் காட்டினால் மக்கள் அஞ்சுவார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்களுக்குத்தான் பொருந்தும் அல்லாது மக்களுக்குப் பொருந்தாது .எத்தனைவிதமான கம்பு சுழற்றல்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மக்கள் ?

இந்தியா முழுமையும் பிளவு அரசியலால் சாதித்து  விடமுடியும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதை  உங்கள் அன்றாட நடவடிக்கைள் உணர்த்துகின்றன.பிளவு அரசியலை ,மாநிலங்களில் தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால் நீங்கள் வருகிற காலங்களில் மண் தின்பது உறுதி. சகல தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு தலைவனையேனும் முதலில் சாதிக்கப் பாருங்கள்.அது எவ்வளவு கடுமையானது தமிழ்நாட்டில் என்பது விளங்கும்.

இணக்கத்தை கற்று கொள்ள இப்போது நீங்கள் தொடங்கினால் கூட உங்களுக்கு இன்னும் நிறைய காலம் பிடிக்கும். இந்தியனாக இருப்பது பற்றியெல்லாம் நீங்கள் யாருக்கும் பாடம் நடத்தாதீர்கள்.உங்களிடம் போதனைகள் கேட்கிற நிலையில் இங்கே யாருமே கிடையாது

தடியால் அடித்து யாரையும் இந்தியனாகவும் ஆக்கமுடியாது .தமிழனாகவும் மாற்ற முடியாது. ஆதிக்கம் பிரயோகித்து உங்களை ஜனநாயக பூர்வமானவர்கள் என்று நம்ப வைக்கவும் முடியாது.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்பதை கருடன் நினைவில்தானே கொண்டிருக்கும் இல்லையா ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"