கவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது

கவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது

சமகால கவிதைகள் என்பவை ஒவ்வொரு மொழியிலும் அதன் அளவு மட்டமாகத் திகள்பவை.ஒரு மொழியின் கூரிய முன்னோட்டுப் பாய்ச்சல்கள் முதலில் கவிதையிலேயே நிகழ்கின்றன.கவிதையில் நிகழும் மாற்றங்களே பின்னர் அந்த மொழியில் முப்பது வருட காலத்திற்கு புனைகதைகளில் ,நாவல்களில் வருகிற போக்கைத் தீர்மானம் செய்கின்றன.ஒரு புனைகதை எழுத்தாளன் தனது சமகால கவிதைகள் புரியவில்லை என்று சொல்வானேயாயின் ,அவன் பழைய பிரதிகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என்பதே பொருள்.கண்ணோட்டங்களின் மூலக் கருப்பொருளை ஒவ்வொரு மொழியிலும் கவிதைகளே முதலில் திறக்கின்றன.அதன் சாரத்தை பிடித்துக் கொள்ளும்  புனைகதையாளன் பின்பு சமகாலத்திற்குள் நுழைகிறான் .கவிதை அறியாமல் எந்த மொழியிலும் அதன் சமகாலத்திற்குள் நுழைவதற்கான கதவுகள் திறப்பதில்லை.

தமிழில்  புனைகதைகளில் புத்துணர்வு குன்றியிருப்பதற்குக் காரணம் ; அல்லது புனைகதைகள் பின்தங்குவதற்கு காரணம் இங்குள்ள புனைகதையாளர்கள் பலருக்கு கவிதையோடு பரிச்சயமின்மையே .பிச்சமூர்த்தியிலிருந்து தொடங்கிய நவீன கவிதைகளின் தாக்கம்  புனைகதைகளில் கடந்த முப்பதாண்டுகளை புனைகதைகளில்  தாங்கிப் பிடித்து நிறுத்தியிருக்கிறது.இன்றைய புனைகதை எழுத்தாளனுக்கு அது உதவி செய்யாது.அவன் புதிதாக எதையேனும் செய்யவேண்டும் என விரும்பினால் கவிதை அறியவேண்டும்.எனது தலைமுறை கவிஞர்களையாயினும்  சரி ,பின் வந்து கொண்டிருக்கிற  தலைமுறை கவிகளையாயினும் சரி ; புரியவில்லை அல்லது ஈடுபாடில்லை என்று ஒரு புனைகதை ஆசிரியன்  சொல்வானேயாயின் அவனுக்கு காலம் விளங்கவில்லை என்பதே பொருள்.தற்கால தமிழ் கவிதைகளை அறிந்து கொள்ள முயலும் புனைகதையாளனே இனி வருகிற முப்பதாண்டுகளுக்கானவன் .

என்னுடைய கவிதைகளிலிருந்தே இரண்டொரு உதாரணங்கள் சொல்கிறேன்.என்னுடைய ஒரு கவிதையின் தலைப்பு "அவன் பெயர் ஆறுமுகம் ;உண்மையில் மூன்று முகம்" என்பது.இதனை ஒருவர் தனது திறனாக கொண்டு ஒரு குறுநாவலாக எழுதிவிட முடியும் .தனக்குள் இருக்கும் நாவலை தூண்டிக் கொள்ளவும் முடியும் .கொடுப்பதற்கு கை நீட்டுகிற அதேசமயத்தில் கொடுக்க விரும்பாத பணம் என்னுடைய ஒரு கவிதையில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக ரயில் வண்டிக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.இதனை யுசுநாரி கவபத்தா அளவிற்குத் திறன் கொண்ட ஒருவன் சிறுகதையாக்கி விட முடியும்.என்னுடைய வீரலட்சுமி தொகுப்பிலுள்ள "ஒரு வீடு பற்றிய வரலாற்று பதிவை "நாவலாக்க முடியும்.அந்த தொகுப்பின் பல கவிதைகளை புனைகதையாக்கத்தில் வீரியம் கொண்டோர் புதிய சாத்தியங்களாகத் திறக்க முடியும்.எனது கவிதைகளில் என்றில்லை .யவனிகாவில்,ஸ்ரீநேசனில் என ஒவ்வொருவரிடத்திருந்தும் இவ்வாறாக பல விஷயங்களைக் குறிப்பிட முடியும்.

ஒரு புனைகதையாளன் சமகால கவிதை அறியமாட்டார் எனில் அவனுடைய உரைநடையில் பழைய வீச்சம் அடிக்கும்.அதனைத் தவிர்க்கவே முடியாது.வைரமுத்து ,மனுஷ்ய புத்திரன் ,அப்துல் ரகுமான் போன்றோரையெல்லாம் சில புனைகதையாளர்கள் கவிஞர்கள் என்கிறார்கள்.அப்படியில்லை .அவர்கள் கவிதையின் மேல் சருமத்தை எழுதுபவர்கள்.ஏகதேசம் பாடலாசிரியர்கள் அவர்கள்.கவிதை என்பது எப்போதுமே அடியாழம்.ஆழம்.அது மேல் நீச்சலில் துலங்காது..அடியாழத்தில் சொற்ப எளிமையிலேயே வெளிப்பட்டு விடும்.சமகால தமிழ் கவிதைகள் மிக மிக எளிமையானவை.இவை உங்களுக்கு புரியவில்லை என்றால் கவிதை பற்றிய உங்கள் மனப்பதிவில் தவறு இருக்கிறது என்றர்த்தம்.பாடலாசிரியர்களைப் பின்பற்றுபவர்கள் ஜன ரஞ்சகக் கதைகளை எழுதலாம்.புதுமை பித்தன் போல மௌனி போல சாராம்சத்தில் செயல்பட சமகால கவிதைகளுடனான பரிச்சயம் மட்டுமே உதவ முடியும்.

கவிதைகளுக்கு ஒருபோதும் புனைகதைகளிடம் சென்று யாசகம் கேட்கும் தேவை முக்கியமானதாக இருப்பதில்லை.ஆனால் புனைகதைகள் கவிதைகளிடம் யாசகம் கேட்டு நின்றே ஆகவேண்டும் .வேறு வழி கிடையாது.ஏனெனில் கவிஞனே  மொழியின் சமகாலத்தின் ஏக முதல்வன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"