ஊழில் விலகுதல்

ஊழில் விலகுதல் 



அத்தனைக்கு எளிமையான காரியமில்லை அது.கடுமையான பிரயத்தனம் உள்ளும் புறமும் இருந்தால் சாத்தியமாகும் காரியம் இது. இருவேறு மனிதர்களாக நாம் இருக்கிறோம் எண்ணம் செயல்கள் வழியே ஊழைப் பின் தொடர்வோராக மட்டுமே இருப்பவர்கள் முதல் வகை.பெரும்பாலும் இவர்களே அதிகம்.எங்கு கொண்டு விட்டாலும் திரும்பி நினைவின் திண்ணையில் வந்து படுத்திருக்கும் நாயைப் போல இவர்கள் ஊழில் புரள்வோர். ஊழில் மட்டுமே புரண்டு கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஊழில் விலகத் தெரிந்தவன் தன்னைச் சுற்றி அனைத்தையும் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறான்.
யோகம் ஒரு வழிமுறை.படைப்பு மற்றொரு வழிமுறை . குப்பைகளை விலக்குவதற்கு இவையிரண்டும் கற்றுத் தருவதால் இவை ஊழை விலக்குவதற்கும் உதவுகின்றன. பிறவழிகள் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை.பின்னாட்களில் உங்களுக்கு உபயோகப்படுவேன் என்கிற பாவனையோடே குப்பைகள் நம்மைப் பற்றிப் பிணிக்கின்றன.உண்மையில் தற்போது உதவாத எதுவுமே பின்னாட்களில் உதவாது .குப்பை இந்த பண்பு கொண்டு நம்மைப் பிணித்து ஊழில் கொண்டிணைக்கிறது.
ஊழில் நம்மைப் பற்றி பிணைக்கும் இரண்டு மிருகங்கள் நாயும் பன்றியும்.எவற்றில் நீங்கள் விலக வேண்டுமோ அவற்றில் கொண்டிணைப்பதில் கை தெரிந்தவை இந்த இரண்டு மிருகங்களும்.எவ்வளவு தூரத்திற்கு விலகி பயணிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.நாயே ஊழின் தவக் கோலந்தான்.நாய் தன்னிலையை அதன் சொரூபத்திற்கு எளிதாகவே மாற்றும் தன்மை கொண்டது.நாய் பிரியர்களாக விலகி நடந்தால் பிரச்சனை இல்லை.தங்களில் வலிந்து ஏவிக் கொண்டே இருக்கக் கூடாது.அதில் கசிந்து உருகுதல் தன்னை நோக்கி ஏவுதலே அன்றி வேறில்லை.உங்கள் வினைப்பயனின் நெடுங்காலத்தை நாய் அறியும் தன்மை கொண்டது.ஊழின் மிருகம்.பன்றியும் குறைவில்லை.நாயும் பன்றியும் பொதுவாகவே நாம் வாழும் காலத்தில் மட்டும் வாழும் பிராணிகள் அல்ல.நெடிய காலத்தின் மீது படுத்துறங்கும் தன்மை கொண்டவை.எதிருணர்ச்சி நிரம்பியவை. பன்றியை இஷ்டப்பட்டீர்கள் எனில் அது உங்களை பன்றியாக்கி விடும்.
புதுப்பிப்பது எப்படியென தெரிய வேண்டும்.உள்ளிலும் வெளியிலும் முழுதுமாக நீங்கள் மாறிவிடுதலையே அது குறிக்கிறது.அப்படியே இருந்து பொருகுகளை சொரிந்து சுகம் காண்பதை சுட்டவில்லை . உங்கள் புராதன முகத்துடன் தொடர்பிலும் இருக்க வேண்டும்.அதே சமயத்தில் அதன் குரல்களை உங்களில் எதிரொலிக்க விடக் கூடாது.ஒவ்வொன்றையும் நீங்கள் உருமாற்றம் செய்து விட வேண்டும்.உங்கள் சொந்த பாரம்பரியத்தில் இருந்து ஒன்றைக் கூட நீங்கள் அது போன்றே பயன்படுத்தக் கூடாது.
தொல்குடி தான் நமது எல்லோருடைய உண்மையும்.அது நம்மில் நவீன தன்மை அடைய வேண்டும்.பழைய சாமானாக இருக்க கூடாது.முடியுமா என்றால் முடியும்.
குடியெச்சங்களை சேகரித்துக் கொண்டேயிருந்தால் அதன் இடத்திற்கு உங்களை அழைத்துச் சென்றடைந்து விடும் . முயற்சியில் இருப்போருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது விளங்கும்.
முயற்சியில் இருக்கும் போது அத்தனை பேய்களும் எழுந்து வந்து உன்னைக் கொன்று விடுவேன் என்று கத்தும் .நீங்கள் பின்னோக்கிப் பார்க்கவே கூடாது.புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"