பண்பாடு என்பதே கலப்பது

                                                பண்பாடு என்பதே கலப்பது



ஒவ்வொரு பண்பாடும் மற்றொன்றுடன் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் கணம் தோறும் கலந்தபடியே இருக்கிறது.தவிர்க்கவே இயலாத இயக்கம் இது.அது எப்படி கலக்கிறது ? தாழ்வு மனப்பான்மையால் கலக்கிறதா, மேலாதிக்கத்தின் விளைவாக கலக்கிறதா, மோஸ்தரின் விளைவாகக் கலக்கிறதா ,மேலோட்டமாகக் கலக்கிறதா ,இயல்பாகக் கலக்கிறதா ? இவையெல்லாம் பின்னர் எழுகிற விவாதங்கள்,அறிந்து கொள்ள விளையும் ஆண்களின் முயற்சிகள். ஆர்வங்கள்.
பெண்மையும் அதன் மனவெளியும் எப்போதும் பிறவற்றுடன் பிற பண்பாடுகளுடன் கலந்து கொண்டேயிருப்பது.சந்தேப்பது அதே அளவிற்குக் கலக்கவும் முயல்வது.கலப்பதில் மகிழ்ச்சி கொண்டது.கலப்பை முன்னெடுப்பது.அதன் இயல்பு அதுவே.இதனை புரிந்து கொண்டால் பல விஷயங்களும் எளிமையாகும்.கலக்காத மனமும் அறிவும் பாழ் .கலக்காத சமூகம் உருப்படாது.
எவ்வளவு தூரத்திற்கு நாம் குளோபல் ஆகி கொண்டிருக்கிறோமோ, அதேயளவிற்கு நமது தொல்குடியின் ஆழங்களுக்குள்ளும் ஒரேநேரத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.வாழ்க்கை விரிவடையுந்தோறும் வேர்களில் ஆழம் அதிகப்பட வேண்டும்.ஏன் ? தேக்கு மரம் தட்டையானது.நவீனத்துவம் போல வேரில்லாதது .இறுக்கிச் சுழன்று காற்றடித்தால் வீழும் .பனை போல, அரசு போல , ஆல் போல வானத்திற்கும் பூமிக்கும் ஒரேநேரத்தில் பயணம் மேற்கொள்ளுதல் சிறப்பு. .தொல்குடிகளின் ஆழ்மனதிற்கு நீரூற்றப்படவில்லையெனில் மனம் அழியும்.அது அழிந்தால் எப்படி விரிந்தாலும் நிறைவும் பரிபூரணமும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் பிராமணர்கள் மட்டுமே தெளிவாகவோ, மங்கலாகவோ இந்த விஷயத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் . அவர்களுக்கு ஐரோப்பியவாதத்தை எதற்கு செலவழிக்க வேண்டும் எவ்வளவு செலவழிக்க வேண்டும் ? எதில் கைவிட வேண்டும் என்கிற விஷயங்கள் மிக நன்றாகத் தெரிகிறது.புறத்தில் ஐரோப்பா,உள்ளில் தொல்குடி.நவீனமடைந்திருக்கும் அதேவேளையில் தொல்குடி மனப்பாங்கை சுத்தமாக தக்க வைப்பது எப்படி என்பது தெரிந்தவர்கள் அவர்கள் . அவர்களை சதாகாலமும் தாக்குவதிலேயே சக்தியை விரையப்படுத்தும் சமூகங்கள் எவ்வளவோ விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதை அறியாதிருக்கிறது.
நவீனமடையாமல் தொல்குடியிலேயே ஜீவிப்பவன் மிருகம்.நவீனத்தால் தொல்குடி மனதை இழப்பவன் பிராந்தன்.வானமும் விரிவும் சரியாக இருப்பது போலவே நீரும் வேரும் சேர்ந்திருக்கத் தெரியவேண்டும்.எதை வெட்டிக் கொண்டு பிளவுற்றாலும் அகம் பிளவு படும்.கலப்பு என்பது சரிவிகித கலப்பு.
கலக்காத எதற்கும் கல்வியில்லை.கலையில்லை. அதிகாரமில்லை ,அதிகாரத்தால் உண்டாகும் பவுசுகள் ஏதுமில்லை.
கலக்காத அதற்கு சம்மதிக்காத இனம் என்று நாம் அன்றாடம் காண்கிற ஒரு இனம் உண்டு.நரிக்குறவர்கள் இனம் அது.அவர்களை மேலேற்ற பல முயற்சிகள் நடக்கின்றன.சில மாணவர்கள் படித்து வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள்.இனி அது கலக்கும். என்றாலும் உதாரணமாக கலக்காத ஓரினத்தை காலம் எங்கே வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கலக்கவே கூடாது என இறுகிய அறிவுரைகளை வழங்குகிற அரசியல்வாதிகளாக இருக்கட்டும் ,மத குருமார்களாக இருக்கட்டும்,சுய சாதித் தலைவர்களாக இருக்கட்டும்,மீண்டும் மீண்டும் உங்களை நரிக்குறவர்களாக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஐரோப்பியவாதத்தை நோக்கி மட்டுமே தள்ளுகிறவர்கள் உங்கள் வேர்களையும் இந்திய தன்மையையும் அறுத்துவிடுகிறார்கள். உங்களிடம் இந்தியத்தன்மையை பல்வேறு காரணிகளை,கருவிகளை வைத்து துண்டிக்கச் செய்பவர்கள் ; வெறுப்பையும் பிளவையும் அதிருப்தி மனோபாவத்தையும்,இணக்கமின்மையையும் உங்களில் ஏற்படுத்திவிடுகிறார்கள்.
தொல்குடித்தன்மையிலேயே இருக்கச் சொல்பவர்கள் உங்களைக் காட்டுமிராண்டிகள் ஆக்குகிறார்கள்.
இவர்களையெல்லாம் கடந்து நலமாக இருப்பதும் நன்றாக, இணக்கமாக இருப்பதும் எப்படி என்பதை புத்தியுள்ள பிள்ளைகள் இந்த சிக்கலான சூழலில் தானாகவே விழிப்புணர்வு மூலமாக கற்றுக் கொள்ளவேண்டும்.
தெளிவு குருவின் திருமேனி
புகைப்படம்- Ahiles Kanesa

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"