ஓ ... வேலைக்காரியா வரட்டுமே !

ஓ ...  வேலைக்காரியா வரட்டுமே !



எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி ?
சசிகலா வரும் தேர்தலில் வெற்றி பெற பரப்புரை தொடக்கி விட்டது.

சசிகலா ஒரு வேலைக்காரியா ? அப்படியானால் அதுதானே நல்லது.மக்களுக்கு வேலை செய்வதற்குத்தானே இங்கே ஆட்களும் அதிகாரமும் வேண்டும் ? வேலைக்காரி என்று திட்டும்போது மக்கள் இப்படி மாற்றி சிந்திப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கெல்லாம் தெரியவில்லை ?

எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்க வேண்டும் ? பாலியல் வசைகள் ,வேலைக்காரி பட்டங்கள் என்று சசிகலாவுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி இனிதே தொடங்கியிருக்கிறது.இப்படியே போனால் தமிழ் நாட்டில்  அடுத்தடுத்து வருகிற இரண்டு தேர்தல்களை சசிகலா அடைத்து நிற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.கீழிருந்து வருகிறார்கள் என்கிற கோணத்திலோ அல்லது தகுதியற்று வருகிறார்கள் என்கிற கோணத்திலோ விமர்சனங்கள் வருமாயின் மக்கள் அந்த தரப்பே தங்களுக்குகந்தது என்று தேர்வு செய்வார்கள்.மக்களுக்கு எல்லோருடைய தகுதிகளும் தெரியும். பொதுவாக இது போன்ற ஒரு அணுகுமுறையை சாதாரணமானவர்கள் சொல்லும் போது அதில் காரியமில்லை.ஸ்டாலின் போன்றவர்கள் இதனை வெளிப்படுத்தும் போதும் அதில் பிறழ்வே வந்து விழுகிறது.

மோடிக்கு எதிராக "டீ"விற்றவன் என்கிற விளம்பரத்தை மார்க்சிஸ்டுகள் பரப்பிய போது ,அவர்கள் அதனை என்ன நினைவில் செய்தார்கள் என்றே விளங்கவில்லை.ஆனால் மோடியின் பி.ஆர்.ஓ கம்பனி இந்த மக்கள் பண்டத்தை  சிறப்பாகக் கையாண்டு அதனையே குப்புற கவிழ்த்தி மக்கள் செல்வாக்காக மாற்றினார்கள்.ஒரு மனிதனை கீழிறக்க சொல்லப்படும் அனைத்துமே மக்களிடம் மேலுயர்த்தவே வழி வகுக்கும்.கீழிறக்க பேசப்படும் பிறழ் மொழிகள் மூலம் இவன்தான் மேலுயர வேண்டியவன் என்பதனை மக்கள் கற்கிறார்கள். ஒருவகையில் எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி என்பது இது போலத்தான்.பி.ஆர்.ஓ.கம்பெனிகளுக்குத் தெரிந்த இந்த ரகசியங்கள் கூட வெகுமக்கள் தலைவர்களுக்கு தெரியாமல் இருப்பதைத்தான் விளங்க இயலவில்லை.

ஜெயலலிதாவை தெருக்களில் ரசம் சொட்ட எதிராளிகள் திட்டுவதிலிருந்துதான் மக்கள் அவர் பக்கம் ஏன்   நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள் . ஒவ்வொரு கூட்டத்திலும் பத்து கேவலமான காரணங்கள் சொல்லித் திட்டும் போது நூறு நூறு வாக்குகளாக சேகரமாகி விடுகின்றன.மக்கள் எங்களுடைய பேச்சுகளுக்குக் கை தட்டினார்களே என்றால் தட்டினார்கள்.ரசித்தார்கள்.ரசம் சொட்டும் அனைத்தையும் மக்கள் ரசிப்பார்கள்.அதில் சந்தேகமில்லை.ஆனால் அதிலிருந்துதானே அதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவும் மக்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.எதிராளிகளிடமிருந்து மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டியவரை அறியும் வழியறிந்தவர்கள்.

சசிகலாவை எதிர்ப்பது என்பது ஒருவருடைய உரிமை.அதில் ஒன்றுமில்லை.வேலைக்காரி போன்ற பதங்கள் எதிராளிக்கான பரப்புரைகள்.வேலைக்காரி என்று திட்டும் போது வேலைக்காரிக்கு அதனால் ஒன்றுமில்லை.டீ மாஸ்டர் என்றால் உண்மையில் டீ மாஸ்டருக்கு ஒன்றுமில்லை .நீங்கள் ஒரு டீ மாஸ்டர் அதிகாரத்திற்கு வருவதையோ,ஒரு வேலைக்காரி ஆட்சியில் அமர்வதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.உங்களிடம் இருக்கும் இந்த எண்ணம் மக்களை உங்களிடமிருந்து துண்டிக்கும். உங்களின் இந்த எண்ணத்திற்கு எதிராக மக்கள் முடிவு செய்கிறார்கள்.ஒரு டீ மாஸ்டர் வந்தால் என்ன ? ஒரு வேலைக்காரியா வரட்டுமே ! அவர் ஒருவேளை எங்களை உணர்ந்து ஆட்சி செய்யலாமில்லையா ? நீங்கள் டீ மாஸ்டர் இல்லை சரிதான்.ஆனால் இதைக்காட்டிலும் கேவலமாகத் தானே ஆட்சி நடத்தினீர்கள்? நீங்கள் ஜமீன் என்றே வைத்துக் கொள்வோம் .ஏன் பிறகு கேவலமாக நடந்து கொண்டீர்கள் ? உங்கள் ஆட்சிகள் மகா கேவலமாகத் தானே இருந்தது ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்