உங்களைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்

உங்களைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்

பாலகுமாரன் உதவி இயக்குனர்களைப் பற்றி ஏதோ  தவறுதலாகச் சொல்லிவிட்டார் என்று ; சேரன் தலைமையில் ஒரு சமயம் பாலகுமாரன் வீடு  நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள்.அப்போது சேரனை நோக்கி கண்ணீரோடு இருகை கூப்பித் தொழுது மன்னிப்பு கேட்கிற அவருடைய  புகைப்படம் ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.அந்த புகைப்படம் என்னை அந்த நேரத்தில் மிகவும் கதிகலங்கச் செய்தது.ஒரு எழுத்தாளன் அப்படி நிற்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது .சேரனுக்கும் பின்னர் அதுபோல பொதுவில் கதிகலங்கி கண்ணீரோடு நிற்கும் சந்தர்ப்பம் வந்தது.இரண்டினையும் இந்த சந்தர்ப்பத்தில் தொடர்புபடுத்தவில்லை . ஆனால் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு  தவிர்க்க இயலவில்லை . மறைய மறுத்து...அந்த புகைப்படமும் எனது மனதில் பதிந்திருக்கிறது.எழுதுகிறவனுக்கு இது போன்ற தண்டனைகளை சமூகம் ஒருபோதும் தரக்கூடாது.அது நிச்சயமாக நல்லதல்ல என்று நினைப்பவன் நான் .

அவருடைய பக்தியெழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.எந்த பிரபல இதழிலோ, சாதாரண பக்தி அல்லது ஜோதிட இதழ்களிலோ கட்டுரைகள் வெளியாகியிருந்தாலும் கூட அவற்றில் ஒன்றிரெண்டு வரிகளில்  மேலான தளத்திற்கு வாசகனை கொண்டு செலுத்த பாலகுமாரன் தவறியதில்லை.இந்த வகைப்பட்ட எழுத்துக்கள் வழியாகவே எனக்கு அவரை அறிமுகம்.யோகி ராம் சூரத்குமாரை நெருங்கியுணர்ந்தவர்.அவருடைய பூஜையறையில் அவரே விரிந்திருந்தார்.

விக்ரமாதித்யன் நம்பி ஒருமுறை என்னை பாலகுமாரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு.பூஜையில் தன்னையிழந்த மனமற்ற நிலையில் உருகி அமர்ந்திருந்தார்.அந்த முன்னறையில் நறுமணப் புகை மூட்டம்.அம்மைகள் அருகிலிருந்தார்கள். அப்போது என்னுடைய "எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் " கவிதைத் தொகுப்பு சந்தியாப் பதிப்பக வெளியீடாக வந்திருந்த சமயம்.நம்பி அதனை அவருக்குத் தருமாறு சொல்ல பாலகுமாரன் கையில் கொடுத்தேன்.ஒரு மகானிடம் தருகிறோம் என்கிற பக்தியுடன் கொடுத்தேன்.பூஜையிலிருந்தே ஐநூறு ரூபாய் எடுத்து கையில் கொடுத்து சிறந்த கவியாக வருவாய் என்று கூறி வாழ்த்தினார்.இந்த பணம் உன்னை எந்த நிலையிலும் பசிநேராமல் காக்கும்.என்னுடைய குரு உனக்கு இதனைத் தருவதாக நினைத்து எடுத்துக் கொள் என்றார் .அந்த பணத்திற்கு ஒரு சக்தியிருப்பதை இப்போது வரையில் உணர்கிறேன்.அது பசி காக்கிறது. அது எங்கோவொரு வற்றாயிருப்பிலிருந்து என்னை வந்தடைந்தது.அது ஒருபோதும் என்னிடம் தீருவதேயில்லை.குரு நேரடியாக பணத்தை கையில் கொடுப்பது அனாதைகளுக்கு மட்டுமே என்பதை இங்கே எத்தனை பேர் அறிவார்கள் ?

எல்லோரும் வந்து சேர வேண்டிய இடத்திற்கு சற்று முந்திச் சென்றிருக்கிறீர்கள் .நன்று      

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"