நான்கு கவிதைகள்

நான்கு கவிதைகள்







1

தனக்கு ஒவ்வாதவர்களைப் பார்த்து தெருவில் இறங்கி

மனம் குரைக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
தனக்கு இசைவானவர்களை நோக்கி
இளிக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
இச்சை இனாமென்று ஓடும் அதனை
திருப்பித் திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
ஒருபோதும் நாற்காலியில்
நானிருந்தேனில்லை.

2

என்னுடைய அப்பைய்யா
என் வழியாகத்தான்
பறவைக்குரல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்
எதன் குரல் எதுவென அவர் பிரித்துக் கொள்வார்
அவருக்கு அது தெரியும்
என்னுடைய அப்பம்மை பொங்கி எழும்
கடல் நாதம் காண்பது என் வழியாகவே...
அறிந்து கொண்டிருக்கிறாள்
அது கேட்பதல்ல
காண்பது
என்னுடைய தெய்வங்கள்
என்னுடைய நாவிலிருந்து
பதனீரின் கருப்பட்டியின் ருசியை
எடுத்துக் கொள்கின்றன
என்னுடைய மூச்சை இழுத்து எடுத்து
அமரர் மேடைக்குள்
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்னுடைய அன்னை
சுவாசித்துக் கொண்டிருக்கிறாள்
ஒரு காலத்திற்குள்ளிருந்து வேறொரு காலத்திற்குள்
தானியங்களை நீட்டும்
நீள் அலகு என்னுடையது

3

தந்த தானியத்தை
அங்கு கொண்டுபோய் நட்டீர்கள்
அப்போதும் நீங்கள் அந்த தானியத்துக்கு
உடமஸ்தன் கிடையாது
விளைந்தது
அறுவடை செய்தீர்கள்
அப்போதும் நீங்களொன்றும்
தானியத்திற்கு உடமஸ்தன்
கிடையாது
வெந்த தானியத்தை
உண்டு திளைத்தீர்கள்
அப்போதும் தானியத்திற்கு நீங்களொன்றும்
உடமஸ்தன் கிடையாது
ஒவ்வொரு தானியமும்
முளை கீறும் சூரியன் உடைத்து
எப்போதும் தானியத்திற்கு நீங்களொன்றும் உடமஸ்தன் கிடையாது

4

பாண்டம் எதனால் நிரம்புகிறது
1
பாண்டம் எதனால் நிரம்புகிறது
தன்னையே போட்டுப் பார்த்தாலும்
தன் பாண்டம்
நிரம்பாது
2
குறை
இருந்த இடத்திலேயே
இருக்கும்
3
பாத்திரம் பாதி நிரம்பியிருந்தால்
பாதியே
அதன் கொள்ளளவு
மீதி நிரம்பாது
4
மிச்சம் இருக்கும் வரையில்
மறுபிறப்பு
5
மீண்டும் மீண்டும் பிறப்பவன்
மிச்சமுள்ளவன்
6
ஒருத்தியெடுத்து
பிரித்து வெளிப்படுத்தினாள்
பிரித்து பிரித்து
பார்த்துக் கொண்டேயிருக்கிறது
மனக் குரங்கு
7
இந்த நிலவை நேற்று நான்
பார்த்ததில்லை
இந்த தண்ணீரை நேற்று நான்
குடித்ததில்லை
8
யாதும் ஊரே என்றவன்
எவ்வளவு பெரியவன்
9
இங்கேயிருக்க முடியுமானால்
உன்னால்
எங்கேயும் இருக்க முடியும்
10
இருப்பது என்பது இருப்பது
தேனில்
இருப்பது
தித்திப்பது
11
தித்திக்கத் தெரியாதவனுடன்
தொலைதூரம் செல்லாதே
திக்கே தெரியாதவனுடன்
சிறுபொழுதும் சேராதே
12
வள்ளலார் மூப்பா வைகுண்ட சாமி மூப்பா
நாராயண குரு மூப்பா நாராயணன் மூப்பா
கிடந்து அல்லாடும் பேதையர்
உலகம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"