தன்னை அழகியென்றுணர்ந்த அழகியின் பிரச்சனைகள்

தன்னை அழகியென்றுணர்ந்த அழகியின் பிரச்சனைகள்

எங்கள் மாமியொருத்தி சிறுவயதில் அழகு.மாமியென்றால் நாங்களும் மாமியென்றுதான் அழைப்பது. அவ்வளவு அழகு. அவளை சிறுவயதில்  செல்லம் கொஞ்சாதவர்கள் இல்லை.வழிப்போக்கர்கள் கூட நின்று ஏதேனும் கேட்டு விட்டுக்  கடந்து செல்வார்கள்.ஒன்றுமே கேட்பதற்கு இல்லாதவர்கள் சமயம் என்ன ? என்றாவது கேட்பார்கள்.திரும்பி பாராமல் அவள் சமயத்தை தவறாக சொல்வாள்.அதனை ஒருவர் கூட மறுத்துப் பேசியதில்லை.அவ்வளவு அழகு அவள்.சமயத்தை தவறாகச் சொல்வதென்றால் ஏழுமணிநேரம்,எட்டு மணிநேரம் தவறாக இருக்கும் . அவள் எங்களை எடுத்து இடுப்பில் கொஞ்சும் போது காண்பர்களுக்கு எச்சூறும் . அவள் அழகாக இருந்ததில் ஒரு பிரச்சனையும் இல்லை.ஆனால் அவளும் தன்னை அழகியென்றுணர்ந்ததில் ஒருபாடு பிரச்சனைகள்.அவளுக்கும் பிரச்சனைகள் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனைகள்.பின்னர் வயது வெளியில் ஏற ஏற ஒருபாடு பிரச்சனைகள்.அகத்திலும் புறத்திலும்.உள்ளத்தில் வயதாகாதவள் அவள். வளரும் போது முதலில் பிற அழகையெல்லாம் மறுத்தாள்.பின்னர் தாக்கத் தொடங்கினாள்.தனது  அறுபத்தியாறு வயதிலும் அவள் இவ்வாறே பயின்றதில் ஏற்றெடுத்த சிரமங்களை மாமா அறிவார்.தமிழ் பிராமணர்களின் மன நலப்பிரச்சனைகள்  தன்னை அழகியென்றுணர்ந்த அழகியின் மனநலப்  பிரச்சனைகளை ஒத்ததே.

இங்குள்ள அனைத்து சமூகத்தினருக்கும் தனிப்பட்ட குடும்ப,சாதி மத ,ஆன்மீக பழக்கங்கள் உள்ளன.அப்படியிலாதோர் இல்லை.இந்த தனிப்பட்ட வாழ்க்கைப் பழக்கம் ஒரு சக்கிலியனுக்கு இருப்பதனைப் போன்றுதான் பிராமணனுக்கும் இருக்கிறது.எல்லோருக்குமே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சே  . எல்லோரும் தாங்கள் சார்ந்த வாழ்க்கையே மேலானது என்கிற எண்ணம் கொண்டே குழந்தைகளை வளர்க்கிறார்கள்.அப்படியே நம்புகிறார்கள்.அப்படி நம்பாத குழுவோ சாதியோ கிடையாது.ஆனால் பிராமணர்களைத் தவிர்த்து பிறருக்கு பிற கலாச்சாரங்களிலும் மேன்மையான  குணங்கள் இருக்கக் கூடும் என்கிற ஐயமும் ,இருந்தால் ஏற்க வேண்டும் என்கிற மனோபாவமும் உண்டு.பிராமணர்களில் பலருக்கும் பிற கலாச்சாரங்கள் உண்டு என்பதே தெரிவதில்லை.தங்கள் குடும்ப நம்பிக்கைகளுக்கு வெளியே பொது வெளியுண்டு என்பதே பெரும்பாலான பிராமணர்களுக்குத்  தெரிவதில்லை.அப்படியிருந்தால் அவையெல்லாம் குறைவானவை என மதிப்பிடுகிறார்கள்.இஸ்லாமியர்களும் இதுபோன்ற ஒரு மூடுண்ட சமூகமாகவே வாழ எத்தனிக்கிறார்கள்

இத்தனைக்கும் பிராமணர்களே இந்திய வாழ்க்கையில் முதலில் சிதறுண்ட சமூகமாகவும் இருக்கிறார்கள்.எங்கெங்கோ பரவியிருக்கிறார்கள்.ஆனால் குடும்ப நம்பிக்கைகளுக்கு வெளியே அவர்கள் இதுவரையில் அசலான உலகத்தை இன்னும் காணவில்லை.தங்கள் குடும்ப நம்பிக்கைகளை  மட்டுமே "ஆதென்டிக்"   ஆக கொள்கிற ஒரு தனி பிராந்தியத்திற்குள் அவர்கள் வாழ முயல்கிறார்கள்.படைப்பாளிகள் ,அறிவாளிகள்,பிராமண முற்போக்கர்கள் எவரும் இதற்கு விதிவிலக்கில்லை.

பிராமண மனோபாவத்தின் மையமே இந்த "நான்" சொல்வது "ஆதென்டிக் "என்னும் தன்மைதான்.பிராமண எதிர்ப்பு ,பிற முற்போக்கு கச்சவடங்கள் என சகலத்திலும் பங்கேற்கிற பிராமணர்கள் உண்டு.கடவுள் எதிர்ப்பு பிராமணர்கள்,மாவோயிஸ்ட் பிராமணர்கள் எல்லாம் கூட இருக்கிறார்கள்.எனக்கு நிறைய பிராமண நண்பர்கள்.கிறிஸ்தவ நண்பர்களோடு உறவில் விரிசல் உண்டாக வேண்டுமெனில் பகுத்தறிவை அலட்சியம் செய்தால் போதும் .அந்த அளவிற்கு இந்திய பகுத்தறிவும் ,இந்திய கிறிஸ்தவமும் நெருங்கிய உறவு கொண்டவை.அவர்கள் விலகுகிறார்கள் என்று உணராத வகையில் விலகிக் கொண்டிருப்பார்கள்.அது போலவே பிராமணர்கள் எந்த தரப்பில் நின்றாலும் அவர்களுடைய "ஆதென்டிக் " என்னும் மனநிலையை நீங்கள் பொருட்படுத்தவில்லையெனில் விலகுவார்கள்.பிற விஷயங்கள் எதனை வேண்டுமாயினும் சகித்துக் கொள்கிற பிராமணர்களால் கூட நீங்கள் அவர்கள் கொண்டிருக்கிற இந்த "ஆதென்ட்டிக் "உளச்சீக்கை மறுத்ததால் தாங்கி கொள்ளவே மாட்டார்கள் . அவர்கள் தங்கள் தன்னிலையில் கொண்டிருக்கும் மைய பொருள்  இது.

வள்ளலார், நாராயண குரு,வைகுண்டசாமிகள் ஆகியோர் பிராமணர்களின் இந்த உளப்பாங்கை பொருட்படுத்தாதவர்கள். இந்த உளப்பாங்கை பொருட்படுத்தாதவர்களின் மீது அதிருப்தியும் ,பழிவாங்கும் மூர்க்கமும் பிராமணர்களுக்கு அதிகமாக உண்டாகும்.தமிழ் படைப்பாளிகளில் இந்த உளப்பாங்கை பொருட்படுத்தாதவர் என ஜெயமோகனை சொல்லமுடியும் .அவர் நாராயண குருவிடமிருந்தோ,அல்லது யதியிடமிருந்தோ இந்த அம்சத்தைப் பெற்றிருக்கக் கூடும். இதனைச் சொல்வது என்பது அவரைப் பொதுவில் காட்டிக் கொடுத்தது போலாகுமா ? தெரியவில்லை.ஜெயமோகன் அவர்களின் "ஆதென்டிக் " தன்மையை படைப்பு,ஆன்மிகம் என சகல வெளிகளிலும் மெளனமாக மறுக்கும் பிறிதொரு வகையான "ஆத்தன்டிக் " தன்மையை முன்வைக்கிறார்.இதனை நுட்பமாக உணர்ந்து கொண்ட பிராமணர்களுக்கு அவரைச் சகித்துக் கொள்வது சாத்தியமே இல்லை.அவர்கள் பல முகமூடிகள் மூலம் அவரை எதிர்ப்பார்கள். பிராமணர்கள்  தங்கள் "ஆதென்டிக் "  தன்மையை ஏற்றுக் கொள்கிற எல்லா தரப்புகளுடம் சேர்ந்திருப்பார்கள்.இந்த மையபொருளில் ஏற்பில்லாதவர்களிடம் துன்புறுவார்கள்.பெரியாரெல்லாம் அவர்களுக்கு தோளில் கைபோட்டுத் திரியுமளவிற்கு பக்கமே.பிராமணர்களை எதிர்ப்பது என்பதும் கடினமான காரியம் என்பது இந்த நெட்வொர்க் சார்ந்தது.

பிராமணத்தன்மை என்று ஒன்றைச் சுட்டுகிறோமே அது இந்த "நான்"  "ஆத்தன்டிக் "என்கிற உளப்பாங்கில் அமைந்தது.பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல இந்து மதத்திலே ,சடங்கிலே,நம்பிக்கையிலே தன்னைக் கொண்டதல்ல அது.இந்த உளப்பாங்கை யார் அடைந்தாலும் அதில் அதில் பிராமணத்தன்மையின் நெட்வொர்க் இணையத்தொடங்கி விடும்.இந்த உளச்சீக்கிற்கு  தனிப்பட்ட பிராமணர்களைக்  குறை சொல்வதில் ஒன்றுமில்லை.அவர்கள் காலம்காலமாக பெற்று வரும் திருச்சிறப்பு அது.இங்கே பொதுவில் பேசுகிற பல பிராமணர்களின் குரலில் இந்த "ஆதென்டிக் "என்னும் தன்மையைக் காணமுடியும்.பிராமண  அறிவுஜீவிகளும் இதில் விலக்கில்லை.

குடும்ப நம்பிக்கைகளுக்கு இவ்வளவு நம்பகத்தன்மையான "ஆதென்டிக்" தன்மையைக் கொண்டிருக்கக் கூடிய இருபெரும் சமூகங்கள் என்று பிராமண சமூகத்தினரையும் இஸ்லாமியர்களையும் சொல்லலாம்.இவர்கள் இருவருமே பொது  வெளியிலும் தங்கள் குடும்ப நம்பிக்கைகளை கொண்டு செலுத்த விரும்புவார்கள்.அவர்கள் குடும்ப நம்பிக்கைகளை அதிகாரத்திடம் மட்டுமே கைவிட்டு பணிக்கிறார்கள்.உதாரணத்திற்கு ஜெயலலிதாவிடம் இவர்கள் காட்டிய பணிவை நீங்கள் நினைவு கூறலாம்.

ஜெயேந்திரருக்கு பொது யோக்கியதை தெரியாது என்று இங்கே சமூக ஊடகங்களில் ஒரு வாதத்தை அப்பாவித்தனமாக  முன்வைக்கிறார்கள்  பாருங்கள். வேடிக்கையாக இருக்கிறது.பஸ்ஸில்  பயணித்தால் டிக்கட் எடுக்க வேண்டும். சைவ உணவென்றால் ஆரியபவன் போகவேண்டும் ,ரயில் டிக்கட் எடுக்க இப்போது தட்கல் வசதி உள்ளது.தாய்ப்பால் குடிக்க தாயின் முலையில் வாய் வைக்க வேண்டும்,கழிவறையில்  திரும்ப கைகழுக வேண்டும்,  இன்ன பிற எல்லாவற்றையும் ஜெயேந்திரர்களுக்கு எப்போது கற்றுத் தரப் போகிறீர்கள் பிராமணர்களே ?

தமிழ் பிராமணர்கள் தமிழ் வாழ்க்கை ,அரசியல்,சமூகம் ,உரிமை என அனைத்தையும் வெறுக்கிறார்கள் ,மறுக்கிறார்கள் .ஏனெனில் இதனுடன் இணைந்து தங்களுக்கு ஒரு அடையாளமில்லை என்றுணர்கிறார்கள். எப்போதும் அதற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள் என்பதன்றி இது வேறொன்றுமில்லை.பிராமணர்கள் இப்படியிருக்கக் கூடாது என்றும் நான் சொல்ல மாட்டேன்.அவர்களுக்கு அதற்கான சமூகவியல் காரணங்கள் இருக்கலாம்.அப்படியிருப்பது வெளிப்படையாக இருக்குமெனில் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்