சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்



சிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்
பகுதி - 1
மிகக் குறைந்த ஊழியத்தில் ,அதிக அறுவடைகளைப் பெறவேண்டும் என்று எழுத்தாளர்களும் விரும்புவது எல்லா புறங்களிலும் தெளிவாகத் தெரிகிறது . கவிஞர்கள் தங்களின் முதல் தொகுப்புகளுக்கே சிலை அமைக்கப் படவேண்டுமென அரும்பாடு படுகிறார்கள் . பரிசோதனைகள் பேரிலோ , சவாலான காரியங்கள் பேரிலோ ஈடுபடும் நிதானத்தை இழந்து பரிதவிக்கிறார்கள் . கத்தரிக்காய் பயிரிடுதல் தொடங்கி கோழிப்பண்ணைகள் , அணுஉலை நிர்மாணம் வரை இலக்கியத்திலும் சாத்தியம்தாம் என்பதை ஊர்கூடி கண்டுகளிக்கிறது .இவை உலகின் எல்லா ஊர்களிலும் உள்ள விஷயங்களும்தான் .வேடிக்கைகளும்தான் . அவற்றுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன?அப்படி வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா ?
எல்லா பிரமுகர்களையும் இங்கே எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள் .பழைய கிளி ஜோசியகாரர்களைபோல , பிரமுகர்களோடு எடுத்துக்கொண்ட படங்களும் நொடியில் கைத்திரையில் சொடுக்குகின்றன .ஆனால் கலையில் ஒரு கிளி ஜோசியக்காரனின் இடத்தை நோக்கி நகருவதுஎப்படி என்பதைத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லை . இங்கே பலரும் இன்று கலை இலக்கிய அப்துல் கலாம்களாக மாறும் எத்தனத்தில் இருந்து தாகிக்கிறார்கள். தனிமனித சாதனைகளின் வெளிப்பாடென்று கலை இலக்கியத்தைக் கருதும் போக்கு பலப்பட்டிருக்கிறது.
இவை ஏன் போருட்படுத்தத்தகுந்த கவலைகளாக மாறுகின்றன ?இத்தகைய போக்குகள் இல்லாமல் ஒரு சமுகம் உயிர் வாழமுடியுமா?இவற்றை பொருட்படுத்தி விவாதிக்க என்ன இருக்கிறது?
மூன்று விஷயங்களை தெளிவு படுத்திகொண்டால் இந்த கவலையின் காரண காரியம் பிடிபடும் .
1 .
புதிதாக நம்பிக்கையோடு எழுத வருகிற இளைஞர்கள் கூட ,தடம் மாறி குறைந்தகால விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டு சிதைகிறார்கள்.விளையாட்டே இதுதான்போல என்று அவர்கள் கருதுகிறார்கள் .இலக்கியம் என்பது தொடர் அறிதல் இயக்கத்தின் மனோ விஞ்ஞானம் என்கிற அழுத்தம் அவர்களிடம் இல்லை.தனிமனித சாதனைகளின் அங்கம் என்று இன்று கருதுகிறார்கள்
2 .
இடைநிலை இதழ்களை சிற்றிதழ்கள் என கருதும் போக்கு தமிழில் உருவாக்கி இருக்கிறது .இடைநிலை இதழ்கள் பண்பாட்டு முதலாளியத்தின் மதிப்பீடுகளைக் உள்ளடக்கமாக கொண்டவை என்பதை அவர்கள் உணரவில்லை.கப்பைக் கிழங்கை,கஞ்சியை நட்சத்திர விடுதிகளுக்குக் கடத்துபவை அவை . தமிழ் நாட்டில் சொற்பொழிவாளர்களை ; எழுத்தாளர்கள்,கவிஞர்கள் என்று திராவிட இயக்கம் முன்வைத்த போலி மாயைக்கு நிகரானது இந்த பண்பாட்டு முதலாளித்துவம் .இடைநிலை இதழ்கள் தங்களை சிற்றிதழ்கள் என விளம்பரப்படுத்திக் கொண்டமையின் தீமையை இன்று எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. தொண்டு நிறுவனங்களின் சேவையை ஒத்த இலக்கிய தாகம் இவற்றின் பிரதான பண்பு .இடைநிலை இதழ்கள், சிறுபத்திரிகை இயக்கத்தை மட்டுப்படுத்தி இருப்பதில் இருந்து கவனமாக இடம் பெயரவேண்டிய மிக மிக்கியமான கால கட்டம் இது .
சிற்றிதழ்களின் தொடர் அறிதல் இயக்கத்திற்கு நேர் எதிரானவை இவை . பெரும்பத்திரிகைகளும் ,வெகுஜன ஊடகங்களும் சிற்றிதழ் இயக்கத்தை மாற்று செய்வதுபோல பாசாங்கு செய்யும் சக்தி அற்றவை .ஆனால் பண்பாட்டு முதலாளியத்தின் சாராம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இடைநிலை இதழ்கள் அவ்வாறான பாசாங்கை வெகு நேர்த்தியாக கையாளத் தெரிந்தவை .அதனால்தான் அவை இன்று தனது சகல பாசாங்குகளும் வெளிறி அருவருப்பூட்டிய பின்னரும் இன்று அவற்றிடம் விடைபெறுவது எங்கனம் என்பது தெரியாமால் திசை முட்டுகிறது.இருபது வருடங்களுக்கு முன்னர் தமிழில் அவை உருவாகும் காலத்திலேயே,தங்களை சிற்றிதழ்கள் என்று அழைத்துக் கொண்டதையும் பல்வேறு நூல் பெருக்கிகளை அவை ஊக்குவித்தத்தையும் கண்டறியவிடாமல் செய்தன .
சிற்றிதழ்களுக்குரிய சகல பெறுமதிகளையும் அவை தங்கள் வசமாகின.பண்பாட்டு முதலாளியத்தின் இந்த கட்புலனாகா மந்திர வித்தைக்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் இது .பல்வேறு வகையான சிற்றிதழ்கள் சூழலில் பரிசோதனைகளை முன்வைத்து வரத் தொடங்குமானால்.இந்த மாயை அகன்று திருவிழா பெட்டிக்கடைகளைப் போன்ற தமிழ் நூல் பெருக்கிப் பதிப்பகங்களை அவற்றின் கைப்பிடித்தலில் இருந்தகற்றி ;அவற்றை ஐஸ் க்ரீம் வியாபாரத்திற்கு அனுப்பிவிடலாம்.நூல் களின் அட்டை தயாரிப்பிற்கு பயன்படுத்திய ,தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு அவர்கள் ஐஸ் க்ரீம் விற்றுப் பிழைத்துக் கொள்வார்கள் .
3.
மதிப்பீடுகளும் ,விமர்சனமும் சுணங்கி போயுள்ள நிலையில் , ஓரளவு குறைந்த பட்ச சுரணையோடு இயங்கும் இன்றைய தமிழ்க் கவிஞனை உரைநடையிலும் ,விமர்சனங்களிலும் ஈடுபட ஊக்குவிப்பது தவிர்க்கவே இயலாத செயலாக மாற்றம் காணச் செய்யவேண்டும் . உரைநடையிலும் , விமர்சனங்களிலும் ஈடுபடும் வல்லமை இல்லாத கவிஞர்கள் உலகின் எந்த மூலையிலேனும் இருக்கிறார்களா? தமிழில் உரைநடை எழுதத் தெரியாதவர்கள் அதன் காரணமாக கவிதையில் ஈடுபடுகிறார்கள்.இந்த துயரம் அகல வேண்டுமெனில் உரைநடையைக் கொண்டு கவிதையை மதிப்பிடும் போக்கு உருவாக்கப்படுதல் வேண்டும்.உரைநடை இயலாமையை மறைப்பதற்கான உத்தியல்ல நவீன கவிதை .
*
கழிந்த இருபது வருடங்களில் தமிழ் கலை ,இலக்கிய சூழல் சுமார் நாற்பது வருடங்களுக்கு முந்தைய இடத்திற்கு நகர்ந்திருக்கிறது .பரிசோதனை ,சுய பரிசீலனை செய்து பார்க்கும் பண்பு ஆகியவை காணாமல் போயிருக்கிறது . கவிதை.ஓவியம் இரண்டையும் தவிர்த்து பிறவற்றில் பெரும் பஞ்சம் . சிறுகதைகளே புதிதாக இல்லை . நாவல் என்கிற பெயரில் எழுதி குவிக்கப் படுகிற பதிப்பக பேராசைகளில் நிலபேர ஊழல்களின் மனோபாவம் வெளிப்படுகிறது .நாவல்கள் ஊர்க்கிழவிகளால் எழுத முடிகிற ,சமூக சரிதைகளாகவோ,அறிவுச் சூழ்நிலையின் சில பகுதிகளைத் திரட்டி தொகுக்கிற வேலைத் திட்டங்களாகவோ வந்து குவிகின்றன .இருபது வருடங்களில் தமிழில் நாவல்களே வரவில்லை என்பதை இங்கே ஒரு இளைஞனுக்குப் புரிவிப்பது கூட இன்று சிரமம் .
எழுத்தாளன் ஒரு கதை சொல்லி இல்லை என்பது கூட அவனுக்கு தெரிய வில்லை .எழுத்தாளன் கதையைச் சொல்வது ,கதையை தவிர மற்றொன்றை சொல்வதற்கும்தான் என்று சொன்னால் இன்று அவனுக்கு வேர்த்துக் கொட்டுகிறது.கதையெனும் பாவனையை நிகழ்த்தி அவன் தனது படைப்புலகத்துடன் இணைப்பை உருவாக்குபவன்.கதை சொல்லியை எழுத்தாளன் என்று சொல்வது ,ஊர்க் கிழவிக்கு திருமண ஏற்பாடு செய்வதை ஒத்தது.எல்லா ஊர்க்கிழவிகளிடமும் சொல்வதற்கொரு கதை உண்டு . எழுத்தாளன் ஒருபோதும் துணியத் தயாராகாதவை அவை .படைப்புக்கு எதிரான ,போஸ்ட் கலோனியல் ஆயுதங்களில் ஒன்றான போர்டு பௌண்டேஷன் போன்றவற்றால் முன்வைக்கப்பட்ட மொண்ணைத் தனத்தால் ஆனவை அவை .தமிழ் அறிவுஜீவியின் காதை அறுத் தெடுத்தவர்களும் அவர்கள்தாம்.
*
இந்தப் பின்னணிதான் இன்று தமிழில் எல்லோரும் துணிந்திருக்கிற நாவல் பெருக்கிப் பழக்கம் .
தமிழ் நாட்டில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் எல்லோரும் கலந்து பேசி மூவாயிரம் பக்கம்,நாலாயிரம் பக்கம் என்று நாவல் எழுதும் உத்வேகத்திலும் ,செயல் திட்டத்திலும் இருக்கிறார்கள் .நடைப் பயிற்சியின்போது சர்க்கரை அளவை பிறரிடம் விசாரித்துக் கொள்வதைப் போல ;நாவலை எழுதி முடித்து விட்டீர்களா? எவ்வளவு பக்கம் வளர்ந்திருக்கிறது ? என்பதையும் விசாரிக்கத் தயங்குவதில்லை.இடைநிலை இதழ் பண்பாட்டு முதலாளிகள் ,நூல் பெருக்கி பதிப்பகங்கள் ;நடைப் பயிற்சிக்காரர்களை நம்பித்தான் கடையே அமைத்திருக்கிறார்கள் .எனவே அவர்களின் ஊக்கம் இவர்களுக்கிருக்கிறது . ஆங்கில மருத்துவர்களும்,தமிழ்ப் பதிப்பாளனும்தான் நடைப் பயிற்சிக்காரர்களின் அசையும் சொத்துக்களாகத் திகழுகிறார்கள் .
***
பகுதி - 2
விமர்சனம் என்பது ஊருக்கு நான்கு வார்த்தைகளைச் சொல்கிற விஷயமில்லை .தனக்கு தானே சில தெளிவுகளை ஏற்படுத்தி கொள்கிற காரியமும் தான்.நான் இத்தகைய காரியங்களை செய்ய விரும்பவில்லை ஏன்? என்பதை வார்த்தைகளைக் கொண்டு விளங்க முயற்சிப்பது அது.இங்கே நாவல் எழுதுகிறேன் பேர்வழிகள் , எம்பித் தாவிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் ஒரு கதையும் நடக்கவில்லை மரங்கள் மொட்டையானதைத் தவிர்த்து ! சிறிய,பெரிய பக்க பேதங்கள் ஏதுமற்று . சிறிதாக எழுதியவனும்,பெரியதாக எழுதியவனும் எல்லோருமே ஒரே காரியத்தைத்தான் இருபது வருடங்களாகச் செய்து வருகிறார்கள்.நல்ல படைப்புகளின் எளிய விதியே ,வாசிப்பவனின் அகத்தை உடைத்து புதிய அகத்தை உருவாக்குவதில் அடங்கி இருக்கிறது .படைப்பில் ஏற்கனவே இருந்த அக மனிதன் மடிந்து செயலிழந்து புதிதாக உருவாகவேண்டும் . தமிழில் இப்படியொரு படைப்பு "என்னை இந்த இருபதாண்டுக்குள் வெளிவந்ததில் உருக்குலைத்து தெருவில் நிற்கவைத்தது ,மீண்டு உருவாக கால அவகாசம் தேவைப்பட்டது" என்று ஒரு வாசகனுக்கு தோன்றிய நாவல்கள் ஏதேனும் உண்டா?
தானே உருவாக்கிய உலகத்தைக் கூட பிரதிஎடுக்கிற எழுத்தாளனை சிறந்த வாசகன் ஊக்குவிப்பதில்லை.அதிலும் தமிழ் வாசகன் குறைந்த எண்ணிக்கை எனினும் நிரம்பிய சத்து நிறைந்தவன்.தாது புஷ்ட்டி . அவன் கொண்டு பிறந்த தமிழின் நவீன மரபு அத்தகையது.அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இந்த நாவல் எழுதும் வேடிக்கை விநோதங்களை? தமிழில் அச்சு எந்திரங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிய போது ,நாவல் என்கிற கார்ப்பரேசன் குப்பைத் தொட்டிகளைத் தினுசாக வடிவமைத்த போது, உலக அளவில் சிறுகதைகளுக்கான நோபல் வழங்கப்பட்டது.
நோபல் ஒரு தரச் சான்று அல்ல .நமது பிராந்திய மொழிகளில் நோபல் பெற்ற படைப்புகளைக் காட்டிலும் பெறுமதி கொண்ட படைப்புகள் அதிகம்.இதனை இப்போது சொல்வதே தன்னுடைய அகத்தின் தற்கால சமநிலையில் தமிழ் எழுத்தாளன் எவ்வளவுதூரம் இந்த காலத்தில் முடங்கி போய் இருந்தான் என்பதை சுட்டுவதற்குத்தான் . தற்கால தமிழ்க்கதைகளின் பெருமதி மிக்க கலைஞனான கோணங்கி . உள்ளூர் பதற்றத்தில்,"நாவல் எழுதாதவர்கள் எல்லாம் செத்து மடிந்து விடுவார்கள்போல' என்றஞ்சி; தனது சிறுகதை மொழியை முப்பெரும் நாவல்களாகப் பாய் விரித்தபோது அவரிடம் 'கோணங்கி ஐந்து பக்கத்துக்குள் ஒரு சிறுகதை எழுதிக் கொடுங்கள் "என்று பரிந்துரைத்தேன் .இன்றைய சூழல் மீதான கடும் எதிர்வினை என்பதை புரிந்து கொண்ட அவர் எழுதினார்.அவரிடம் தொற்றியிருந்த பதற்றத்தை உண்மையாகவே கலங்கினேன் .பிறரை எனக்குப் பொருட்படுத்தும் அவசியம் ஏதும் இருக்கவே இல்லை .
இனி இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது எனில் புதிய பரிசோதனைகள் அவசியம் என்று உணரும் வாசகன் சிற்றிதழ்களை தனது கைவசத்திற்குக் கொண்டு வரவேண்டும் . வாசகன் தொடர்பு பெறாத 1G அலைகற்றை குத்துபாட்டுப் பண்பாட்டையும்,பண்பாட்டு முதலாளியத்தின் முகங்களான சகதிக்குப்பை இடைநிலை இதழ்களின் கோர முகங்களையும் தெளியவேண்டும் .
வாசகன் சூழலில் பொறுப்பெடுத்தாலே அன்றி காரியங்கள் நடைபெறாது .களைப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட கால அவகாசம் போதும் என்றே தோன்றுகிறது . இல்லையெனில் வாசகனை கண்டு அச்சுறும் ஒரு வழிப்பாதைகளாகிவிட்ட தற்காலத் தமிழ் கலை இலக்கிய சூழலை மாற்றியமைப்பது,கால தாமதமாகிவிடும்.
இடைநிலை இதழ் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாட்டை அரசுக்கு பரிந்துரைக்க இதுவே நல்ல தருணம்.இடைநிலை இதழ்களின் பண்பாட்டு உள்ளடக்கத்தை மமதையாகக் கொண்டலையும் விசுவாசிகளின் நன்னடத்தைக்கு : நோக்கியா கம்பனி கடையடைத்த போது கடைபிடித்ததை போன்று கட்டாய ஓய்வு கொடுப்பதைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதும் இல்லை .அவர்கள் தமிழின் இருபது வருடங்களை கூடியமட்டும் கூத்தாடி அவமதித்து போதாதா?
எண்பதுகளிலிருந்து 90களின் ஆரம்ப காலம்வரையில் தமிழில் நடை பெற்ற காரியங்களின் தொடர்ச்சியிலிருந்து சகலத்தையும் தொடங்கியாக வேண்டும்.
நடைபெறுகிற புத்தக விழாக்கள் மண் மூடாமல் எதையும் புதிதாகச் செய்வதற்கில்லை .
***
பகுதி - 3
தமிழில் படைப்பை குழந்தைப் பேற்றோடு ஒப்பிடும் ஒரு மரபு உண்டு . எல்லா கூட்டங்களிலும் படைப்பு வேதனையை பிரசவ வேதனையோடு ஒப்பிடும் ஒருவர் இருந்தே தீருவார் .அவர் இல்லையெனில் கூட்டத்திற்கு அமங்கலம்.இதனை நடைப் பயிற்சிக்காரர்கள் செவ்வனே புரிந்து வைத்திருக்கிறார்கள் .குழந்தையின் எடை முன்று கிலோவுக்குக் குறையக் கூடாது என்பதை மருத்துவ ஆலோசனையின் பேரில் கூடுமானவரையில் கடைபிடிக்கிறார்கள் . பரவாயில்லை அது அவர்கள் பாடு .
இதில் கவிஞனுக்குரிய,சிறுகதை ஆசிரியனுக்குரிய சோகம் என்னவெனில் , இந்த நடைப் பயிற்சிக்காரர்கள் விடுக்கும் கேள்விகளைத் தாங்க முடியாமல் போவதுதான் !
"நாவல் எழுதுகிறீர்களா?
எப்போது முடிப்பீர்கள் ?
எப்போது தொடங்குவீர்கள்? 
ஏனின்னும் தொடங்காமலிருக்கிறீர்கள் ?
சும்மாதானே இருக்கிறீர்கள் ஒரு நாவல் எழுத வேண்டியதுதானே?
அடுத்தது என்ன நாவலா?எத்தனை வால்யூம் ?
உங்கள் திறமைக்கு பத்தாயிரம் பக்கம் எழுதலாமே?
நாவல் எழுதாமல் காலத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் ?"
இவ்வாறெல்லாம் எதிர்த்து வருபவரிடம் கேட்டுக் கேட்டுப் பழகுபவர்கள் , தனியேயும் சில நேரம் இவற்றை புலம்பத்தொடங்கும்போது விதி விளையாடத் தொடங்குகிறது . அடுக்களையில் சென்று மனைவிமார்களிடம் இவர்கள் சொல்லப்போக , அவர்கள் இதனை உண்மையாக எடுத்துக் கொண்டு :இவர்கள் மறுமுறை நினைவு படுத்துவதற்கான அவகாசத்தைக் கூட தராமல் முன்னூரு,நானூரு பக்கத்தை முடித்து விடுகிறார்கள் .அதோடு விஷயம் நிற்பதில்லை.பக்கத்து வீட்டுக்காரனின் தயவோடும் , சிபாரிசோடும்விருதுகள்,பட்டங்கள்,பெறுமதிகள்,பரிசுகள் என்று தட்டி விடுகிறார்கள் ?
ஒரு கவிதையோ,கதையோ ஒருவர் சிறப்பாக எழுதிவிட்டால் :அடி கொடுத்து வீட்டுக்கனுப்பி சங்கிலியால் கட்டிவைத்து நாவல் எழுத உத்தரவு இடுகிறவர்களும் இருக்கிறார்கள் .ஒருவர் கவிஞனாக மட்டுமே அல்லது சிறுகதை ஆசிரியனாக மட்டுமே செயல்படும் பேச்சுக்கே இங்கு இடமில்லை .கவிஞனுக்குத் திரும்பும் திசை எங்கும் முட்டுச் சந்துகள் .எப்படி தப்பிப்பான்?
90 களுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் நடந்த மாற்றம் என்று கவிதை ஒன்றை மட்டுமே சொல்ல முடியும்.பிற வடிவங்களில் பதிப்புகள் பல்கிப் பெருகி இருக்கிற அளவுக்கு உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது .மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் .பதிப்பின் பெருக்கத்திற்கு எதிர் திசையில் 90 களுக்குப் பிறகான காலகட்டத்தை போரிட்டு வென்றவர்கள் தமிழில் கவிஞர்கள்தாம் . பெருக்கத்திற்கு எதிராக உண்மையாகவே இவர்கள் போரிட்டார்கள் . முந்தைய தலைமுறையின் சாராம்சங்களைக் கடந்து காலத்தை நெருங்க : பெருக்கத்தில் சூழல் பழுதுபட்டிருந்த நிலையிலும், கவிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகளை யுத்தம் என்ற வார்த்தையிலன்றி வேறு எதன் மூலம் குறிப்பிட்டாலும் பொருந்தாது .
சமூகம் ; பொருளாதாரத்தின் சுருதியை ,விசையை வேகம் கூட்டிய இந்த காலகட்டம் தொழில்நுட்பத்தின் அசுரத்தனம்.நவீன காலத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிஞர்கள் இந்த சமயத்தில் நாடோடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி !மேலும் மேலும் விளிம்பு நிலைக்குச் சென்றார்கள் .தப்பிப் பிழைப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் மட்டும் இவர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள் . இந்த ஸ்திதி நிலையை ஏற்றுகொள்ளாமல் பொதுநிலைக்குத் திரும்பியவர்களை கவிதை கைவிட்டுச் சென்றது ! மலையாளத்தில் இந்த அலைச்சலும்,நாடோடித் தனமும் ,அனாதைநிலை விளிம்பும் நவீன காலத்தைச் சேர்ந்தவை எனில் தமிழில் பின் நவீன கவிஞனின் மீது ஏறி அமர்ந்து கொண்டவை. விதியாய் கவிந்தவை.இன்று எவர் ஒருவராக இருந்தாலும் 90 களுக்குப் பிந்தைய தமிழ்க் கவிதையில் நடந்திருக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ளாமல் சமகாலத் தன்மையை தமிழ் மொழியில் அடைவது என்பது சாத்தியமற்றது .
*
90 களின் பாதிக்கு பிறகு சிறுகதை ,நாவல் போன்ற வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் கைவிடப் பட்டன .சிற்றிதழ்கள் முடங்கின .இன்று இலக்கிய பிரமுகர்களாக ,பொது மக்கள் மத்தியில் அறியப்படும் ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் ,சாரு நிவேதிதா எல்லோரும் ஒரு காலத்தில் பரிசோதனை எழுத்துக்களை எழுதிப் பார்த்தவர்கள் தாம்.அப்போதும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தவர் சாரு நிவேதிதாதான் .எஸ்.ராமகிருஷ்ணனின் "தாவரங்களின் உரையாடல் "என்ற சிறுகதை நூல் ஒரு நல்ல முன்னெடுப்பாக அப்போது இருந்தது .அதுபோல ஜெயமோகனின் "திசைகளின் நடுவே " ,கோணங்கியின் "பொம்மைகள் உடைபடும் நகரம் ",சுரேஷ் குமார இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்" T .கண்ணனின் "கல்வெட்டுச் சோழன் " ,தமிழ்ச் செல்வனின் 'வெயிலோடு போய்",வாளின் தனிமை "போன்று பல முன்னெடுப்புகள் .எம்.டி.முத்துக்குமாரசாமி , விமலாதித்ய மாமல்லன் , கோபி கிருஷ்ணன் ,சி.மோகன் என்றிருந்த ஒரு தீவிர நிலை .பரிசோதனை முயற்சிகளின் தீவிரத்தில் ஈடுபடுகிறவர்கள் பெருக்கிக் காட்ட இயலாதவர்கள் என்பதல்ல அர்த்தம்.அறிதலின் தீவிரம் ஒரு சுகானுபவம்.அதை வாய்க்கப் பெற்றவர்கள் பெருக்குவதில் ஈடுபடுவது கடினம் .இன்று சுகானுபவம் என்றால் அதனை கெட்ட வார்த்தையாகப் பார்க்குமளவுக்குக் கேடு . அறிதலின் தீவிரம் உண்மையாகவே ஒரு பரவசநிலை வாசகர்களுக்குமே ?அப்போது வாசகர்கள் எல்லாம் நிமிர்ந்து நடந்தார்கள் .
எழுத்தில் சவால்களை நோக்கிச் செல்லவேண்டியதில்லை , உற்பத்தியைப் பெருக்கினால் போதும்,தனிமனித சாதனையை சொரூபப்படுத்தினால் போதும் என்று இரண்டாயிரத்தில்தான் முடிவு செய்தவர்கள் வந்து சேர்ந்தார்கள் .வாசகர்களின் செல்வாக்கிலிருந்து கைமாறி பொதுமக்களின் செல்வாக்கிற்கு சூழல் சரியத் தொடங்கியதும் இதே கால கட்டம்தான்.நான்குவழிச் சாலைகளை ஒத்த நாவல் பெருக்கிகளும் தைரியம் பெற்றார்கள் .இடைநிலை இதழ்கள் பண்பாட்டு முதலாளியத்தை வேகம் பிடித்தன.அதுவரையில் மலிவான உற்பத்தியை பெருகியவர்கள் எவருமே மதிக்கப் பட்டதில்லை .இன்று ரோடு கான்றாக்டர்கள்தான் சூடு பிடிக்கிறார்கள் ?
தமிழில் நவீன காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல்களோடு ஒப்பிட்டு ஒருவர் இரண்டாயிரத்திற்குப் பிறகு நாவலே தமிழில் எழுதப் படவில்லை எனக் கூறினால் இன்று பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் . இது வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகச் சொல்லப்படுவதாய் அவர்கள் கருதக் கூடும் .தமிழில் நவீன காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை வளத்தையும்,நாவல் அடைந்த உன்னத இலக்குகளையும் அறிந்த வாசகனுக்கு இதில் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது .
எம்.வி.வெங்கட்ராமின் "நித்தியகன்னி",லா.ச.ராவின் "அபிதா",வண்ண நிலவனின் "கடல்புறத்தில்",ஜி.நாகராஜனின் "குறத்தி முடுக்கு " , தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள் ',அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்',"18 வது அட்சகோடு ",போன்ற படைப்புகளை வெற்றிகொண்ட வாசகனுக்கு இது விளங்கும்.சம்பத்,நகுலன்,பிரமிள் போன்றோரின் தகிப்புகள் சாட்சிகள்.சிறுகதைகளுக்கும் ,நாவல்களுக்கும் தமிழின் நவீன காலம் ஒரு பொற்காலம் .
மௌனியும்,புதுமைப்பித்தனும் மட்டுமல்ல ;,பிரமிள்,அழகிரிசாமி , சுந்தர ராமசாமி ,கிருஷ்ணன் நம்பி,ஜி.நாகராஜன் ,நா.முத்துசாமி இன்னும் பலர் தமிழ்ச் சிறுகதையில் ஏற்றெடுத்த தூரங்கள் அதிகம்.இந்த முன்னெடுப்பும்,பாய்ச்சலும் தமிழ் நவீத்துவத்தைத் தாண்டி நாம் வெகுதூரம் செல்ல துணை செய்திருக்கவேண்டும்.அடைந்திருப்பதோ வறுமையின் தாங்கொணா துயரம் .
புதுமைப் பித்தனும்,மௌனியும் ஏன் நாவல் எழுதிப் பெருக்கவில்லை?மௌனி ஏன் இருபத்திரெண்டே கதைகளில் நிறுத்திக்கொண்டார்?ஏன் அவர்கள் தங்களைப் பெருக்கி காட்டவில்லை? நா.முத்துசாமி ஏன் பெருக்கிப் பெருக்கி ஓடவில்லை?செய்ததைத் திரும்பிச் செய்வதோ,பல்கிப் பெருக்குவதோ எழுத்தாளனின் வேலை இல்லை.சிறந்த எழுத்தாளன்:தான் உருப்படியாய் செய்த காரியத்தைக் கூட திரும்பச் செய்ய முயலமாட்டான் .
இன்றளவும் மிகப் பெரிய படைப்பு மேதைகளாகத் திகழும் தாஸ்தேவெஸ்கியும் ,பிரன்ஸ் காப்காவும் வாழ்நாளெல்லாம் தங்கள் படைப்புகளின் தன்மையை சந்தேகித்தார்கள் .குறைபட்டுக் கொண்டார்கள் . காப்கா பிரசுரத்திற்கே முன்வரவில்லை .போர்ஹே தனது மடத்தனத்தின் மீதும்,மூட நம்பிக்கைகள் மீது கவலை கொண்டிருந்தார் .
தமிழ் நவீனத்தின் சிறப்புகளைக் கற்க விரும்பும் மாணவனுக்கு இரண்டு எளிய நூல்களை சிபாரிசு செய்ய முடியும். அவை இலக்கியம் பயில விரும்பும் மாணவனுக்கு அடிப்படை வழிகாட்டி நூல்களாக உதவக்கூடும்.அவை நவீன தமிழ் இலக்கியம் முறையாகப் பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் பாடநூலாக வைக்கத் தகுதி கொண்ட நூல்களும் கூட . ஜெயமோகனின்"கண்ணீரை பின்தொடர்தல்",சி.மோகனின் "காலம் கலை கலைஞன் "ஆகிய இரண்டு நூல்களுமே அவை.தவிர பிற அநேகம் .முதலில் இவை
எண்பதுகளின் தொடக்கம் தொட்டு 90 களின் முற்பகுதிவரையில் தமிழ் படைப்புலகம் சிறப்பான மனநிலையில் இருந்த காலம் .தமிழ்ச் சிறுகதையில் அரிய சாதனைகளை நிகழ்த்திச் சென்றிருந்த முந்தைய தலைமுறைக்குப் பின்னர்,அவ்வளத்தின் பேரில் மதிப்பும்,புதிய வழித் தடங்களைத் தேடும் ஆர்வமும் முனைப்பு பெற்றிருந்த காலம் .படைப்பின் மதிப்பைத் தவிர்த்து பிற பெறுமதிகளின் வழியே படைப்பை நிலை நிறுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை தோன்றியிராத காலம் .
வெற்றியை நோக்கி என்கிற தடுமாற்றம்,கரவு,பரபரப்பு ஏதும் மனப்பரப்பில் லெட்சியம் பெற்றிருக்கவில்லை .ஒரு சிறுகதை ஆசிரியனென்றால் :அவன் ஏற்கனவே உள்ள வளங்களைத் தெரிந்து புதிய முயற்சியில் புதிய பாதிப்பை ஏற்படுத்துபவனாக இருக்கவேண்டும்.அறிதல் முறையில் புதிய திசையை நோக்கி சில அங்குலமேனும் நகர்ந்திருக்கவேண்டும்.இதுவே அப்போதைய இலக்கிய தகுதி .வாசகர்களும்,பதிப்பாளர்களும் கூட இதில்தான் ஆர்வம் கண்டார்கள்.அந்த காலகட்டத்தில் வந்த எல்லாவகைச் சிற்றிதழ்களும் இதற்கு சாட்சி .படைப்பென்றால் ஏற்கனவே அடைந்துள்ள அறிதலில் இருந்து மேலும் சில தொலைவைக் கடக்கவேண்டும்.புதிய கண்டுபிடிப்பு நிகழவேண்டும்.இதுதான் நியதி.
படைப்பின் குணாம்சத்தை உணர்ந்த விமர்சனக் குரல்கள் இதைத்தான் அப்போது வேறு வேறு பாஷைகளில் பேசிக் கொண்டிருந்தன.ஒரு இளைஞன் வடிவத்திலும் ,பொருளிலும் புதுமையை நிகழ்த்தவில்லை எனில் அவன் பேரிலோ,அவள் பேரிலோ கவர்ச்சி கொள்வதற்கான ஒரு முகாந்திரமும் இல்லை .அந்த கடந்து வந்த பாதையைப் பின்பற்றி நடப்பதே தமிழுக்கு அழகு .மொழிக்கு நல்லது .பண்பாட்டுக்கு ஊட்டம் .

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்