குடும்பம் என்பது புராதனமானதொரு அலுவலகம்

குடும்பம் என்பது புராதனமானதொரு அலுவலகம்

சமூகத்தின் பிற அமைப்புகள் ஏற்படுத்திய அலுவலகங்கள் பலவற்றைக் காட்டிலும் இதற்கு சிறப்பு அதிகம்.மனிதன் ஏற்படுத்திய அலுவலகங்கள் பலவற்றிலும் புராதனமான அலுவலகம் இதுவே.பல அமைப்புகளின் வேர் இந்த அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது.குடும்பம் என்கிற இந்த தொன்மையான அலுவலகம் ஆண் , பெண் என்கிற பலகீனமான உறவு நிலையில் மீது கட்டப்பட்டிருப்பது விந்தையானது.பலகீனமான அடித்தளத்தின் மீது உயர்ந்து நிற்கும் கோபுரம் போல. எப்போது வேண்டுமாயினும் உடைவதற்கு சாத்தியமான ஆண் பெண் உறவுநிலையை ; அது பல காலங்களாக பராமரிப்பு செய்து வருவது எவ்வளவு பெரிய ஆச்சரியம் ? எப்போது வேண்டுமாயினும் உடையும் சாத்தியம் கொண்டது உறவு என்பதை புரிந்து கொண்டோருக்கு; இந்த அமைப்பினைப் போல இசைவானதொரு அலுவலகம் வேறில்லை.

அமைப்புகள் உருவாக்கும் எத்தனையோ அலுவலகங்கள் காலத்தில் அழிந்து விடுகின்றன.முற்றாக அழியும் தன்மை  கொண்டவை,உருமாற்றத்துடன் தன்னை தற்காத்துக் கொள்பவை என பல அலுவலகங்கள் .மத அமைப்புகள் உருவாக்குகிற; அரசாங்கம் உருவாக்குகிற அமைப்புகள்;  மடங்கள்,கல்விச்சாலைகள் போன்றவற்றை உதாரணம் சொல்லலாம்.மடங்களுக்கு தன்னை சீர்திருத்தியவாறு தற்காத்துக்  கொள்ளும்  பண்பு அவசியம் .மடங்களை சீர்திருத்தினால் கல்விச்சாலைகள் உருவாகும்.தண்டனை அமைப்புகள் எவ்வளவோ அழிந்து விட்டன.சமூக அமைப்புகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன . குடும்பம் என்கிற அலுவலகம் தன்மையில் மாறவில்லை.

பல அலுவலகங்களை அமைப்புகளே ஏற்படுத்துகின்றன.மனிதன் தன் இயல்புணர்ச்சியிலிருந்து உருவாக்கிக் கொண்டதிந்த குடும்பம் என்னும் அலுவலகம். தனிச்சையானது.இதனை அமைப்பென்று புரிந்து கொள்ளாமல் அலுவலகம் என புரிந்து கொள்வதன் மூலம் இதன் பணி மிகவும் எளிமையாகிறது.அலுவலகம் என புரிந்து கொள்ளும்போது ; இதற்குள் உங்களுக்கிருக்கிற பணி என்ன ? என்பதனை விளங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

குடும்பம் என்னும் இந்த அலுவலகத்தின் மற்றொரு சிறப்பு ; இந்த அலுவலகத்தை சமூகத்தின் பிற அமைப்புகளோ ,அறிவுக் கருவிகளோ , சிந்தனைப் போக்குகளோ ,மதங்களோ ஒருபோதும் புறத்தில் இருந்து பாதிக்க இயலவில்லை.இந்த அலுவலகத்தில் தொடர்பு கொள்கிற ,அதற்கான தேவை கொண்ட அமைப்புகளை மட்டுமே இது ஏற்கிறது.முற்றிலும் துறவை போதித்த மதங்கள் அந்நியப்பட்டு நின்றன.இங்கு குடும்பத்தை உடைப்போம் கருத்தாளர்கள் முற்றிலும் துறவை போதித்த மதங்களின் தொடர்ச்சியாளர்கள்.பூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் இதனை அலுவலகமாக நோக்காமல் அமைப்பாகப் பார்த்ததன் காரணமாக சில தவறுகளை செய்தார்கள்.சமூகத்தின் பிற அமைப்புகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.இது முதல் தவறு.அமைப்பு என்பது ஒருமித்த சிந்தனை உடையவர்களுக்கானது எனில் குடும்பம் என்கிற அலுவலகம் ஒருமித்த சிந்தனையோ,ஒற்றுமையோ இல்லாதவர்கள் இணைவதற்கானது என்பதை காணத் தவறினார் அவர் . பின்னாட்களில் கத்தோலிக்கம் ஒருபக்கம் குடும்பத்தை  ஆராதித்த வண்ணமும்,பிறிதொரு பக்கம் எதிர்த்த வண்ணமும் என இரட்டை நிலைகளைக் கையாண்டது .அதில் மதப்  பணியாளர்களை உருவாக்குதலுக்கான நோக்கம் உண்டு.

குடும்பம் ஒருபோதும் ஒருமித்த கருத்து கொண்டார் வேண்டும் என நிர்பந்திப்பதில்லை.ஒருமித்த கருத்தோ,ஒற்றுமையோ இல்லாமல் புழங்குவதற்கான தளம் இது.மிகவும் முற்போக்கான அமைப்பு இது.பணியின் அடிப்படையில்,ஏற்றெடுக்கிற பொறுப்புகளின் அடிப்படையில்   அதிகாரத்தை மறைமுகமாக தருகிற அலுவலகம் இது.அதே சமயம் பணியில் பின்னடைவோரை முழுதுமாக புறக்கணிக்காத அலுவலகம்.

குடும்பம் தனது பணியினை அதிகமாக செய்வோருக்கு அதிகமான இயங்கு வெளியைத் தருகிறது.காலையில் வீட்டிற்குரிய அனைத்தையும் உங்களால் வழங்கி விட இயலுமாயின் மீதமுள்ள நேரத்தை அது உங்களிடம் கேட்பதில்லை.நீங்கள் செய்ய வேண்டிய பொறுப்புகளைக் கைவிட்டால் உங்களுக்கான அவகாசத்தை சுருங்கிவிடும்.எவ்வளவுக்கு விரிவுபடுத்துகிறீர்களோ அவ்வளவிற்கு விரியும் தன்மை கொண்டது வீடு.

யோசித்துப் பாருங்கள்.அப்பாவுக்கும் மகனுக்கும் ஒத்த கருத்து வேண்டியதில்லை.மனைவியும் கணவனும் வேறு வேறு உடல்கள்.வெவ்வேறு மிருகங்கள்.ஒருவரும் பிறிதொருவரைப் போல சிந்திக்க வேண்டியதில்லை.தனித்தனியாக இங்கே புழங்க முடியும்.பிற மனித அமைப்புகள் அத்தனையும் ஒன்றாக சிந்தித்தலைக் கோரக் கூடியவை.குடும்பத்தில் ஒத்த சிந்தனையைக் கோரினால் அது உடையத் தொடங்கும்.பிற அமைப்புகள் ஒத்த சிந்தனை இல்லையென்றால் உடையும் நேரெதிராக .

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"