அந்த குழந்தைக்கு வயது ஐம்பது

கல்குதிரை இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்

அந்த குழந்தைக்கு வயது ஐம்பது
( 15  கவிதைகளின் தொகுப்பு ) - லக்ஷ்மி மணிவண்ணன்

1

அவளிடம் அம்மனைப் போல
இருக்கிறாய் என்று சொன்னபோது உண்மையாகவே
அம்மனைப் போலவே இருந்தாள்
குனிந்து கீழே பார்த்தவள்
கீழே கிடந்த அவள் அம்மனை எடுத்து
இடுப்பில் வைத்துக் கொண்டு
நகர்ந்தாள்

எம்மாடி எப்போதடி எடுத்துக் கொள்வாய்
என்றிருந்தேன்
என்றாள்
அவள் எடுத்து சூடிக் கொண்ட
அம்மன்

2

நேற்றைய காலையில் என தொடங்கினாள்
அது ஏன் இன்றைய காலையில் வந்து அமர்ந்திருக்கிறது என்றேன்
வேறொன்றுமில்லை
இன்றைய காலையை
நேற்றைக்குள் தள்ளி விட முடியுமா
என முயல்கிறேன் என்கிறாள்
இரண்டு காலைகளை வைத்திருக்கும் கனம்
இருவரிடமும்
மண்டியிட்டு
அமர்ந்து கொள்கிறது
பொழுதிற்கு
ஒரு பொழுது என்பதெல்லாம்
ஒரு அர்த்தமாகுமா என்ன ?

3

வேகமாக வந்து மோதிய
பட்டாம்பூச்சியை
அடிக்க ஓங்கிய கையைத் தடுத்து
மெல்ல இறக்கினேன்
மார்பில் சிறிது நேரம்
இருந்த அது பின் பறந்து சென்றது
மார்பில் தேன் ஊறி ஒழுகுவதை
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது
ஓங்கிய கை

காம்பை நீட்டி சுவைக்கத் தருகிறேன்
தித்திக்கின்றன
விரல்கள்

4

முதலில் அந்த யுவதி
சுவருக்கு வெளியில் வந்து
பிச்சிப் பூக்களை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருந்தவள்
அப்போது எல்லாமே
சரியாகவே இருந்தன

திடீரென சுவரின் உள்பக்கம் நகர்ந்து
பிச்சிகளுக்கு மத்தியில்
பறிக்கத் தொடங்கினாள்

தோளுக்கு கீழே முழுதும் பிச்சிக்காடு

அதன் பின்
எல்லாவற்றையும் குழப்பி விட்டது
இந்த அந்தி.

அவளோ
இப்போது அகாலத்தில் நிற்கிறாள்
நானோ
தரையில்
அகப்பட்டுக் கொண்டேன்

இப்போது யார் அவள்
மற்றும் எதன் சாயை ?

5

பறவையை ஏன் வணங்குகிறீர்கள்
எனக் கேட்டார் ஒருவர்
பறவை எனக்கு பகவான்

சரி
தீயை ?
சூக்கும சரீரம்

நீர் ?
மாமிசமானது
பஞ்சபூதங்கள்

விலங்குகளை பூஜிக்கிறீர்கள் ?
அவை ஊர்ந்து நகரும்
எண்ணங்கள்

கல்லை ஏன் வணங்குகிறீர்கள் ?
பகவான்
பிறப்பற்று போய்
முடியும்
இடம்

எல்லாம் இருக்கட்டும்
அப்படியானால் என்னை எதற்காக
வணங்குகிறீர்கள் ?
நீங்கள் தானே அன்பே
பகவானின்
பரிசோதனைக்
கூடம் ?

6

குரு துறந்து
தந்தையை பார்த்தால்
அவர்
வெறும்
அதிகாரி
ஆவார்

புனிதமின்றி புணர்வீராயின்
புணர்ச்சி முடிவு
பீக்குழியாகும்

ஒன்பது துளையிலும்
பீளை

அன்பை அகற்றி
உலகை கண்டால்
காண்பதெல்லாம் போர்களமாகும்
முகமெங்கும்
ஆயுத பிரயோகம்
காணக் கிடைக்கும்

உள்ளும் புறமும்
ஒரே
தளம்

எதை எடுத்துக் கொள்கிறாயோ
அப்படி அப்படி

எந்த அகப்பையில்
வாரியெடுத்தாலும் என்ன ?
வருவதெல்லாம்
உனது
மாமிசம்

ஈர்ப்பு அகன்று போகுமிடத்தே
தாயொரு
முதுமை
நோயாளி

எனக்கு அன்னை பகவதி பிரஜாபதி
பூப்பு ரசம்

உனக்கு சுதைச் சிற்பம்

7

எனக்குள் ஒரு கடவுள் இருக்கிறார்
மனம் அவரை மெல்ல
படிப்படியாக இறக்கி
கீழே தள்ளி
கதவை
சாத்திக் கொள்கிறது

மீண்டும் மெல்லத் தவழ்ந்து
மேலேறி வருகிறார்
கடவுள்
மீண்டும்
அவரை
வெளியேற்றி
அடைக்கிறது மனம்

இருவரையும்
ஒரேயுரலில்
கட்டிப் போட்டேன்
உரலை இழுத்து கொண்டு
ஓடுகிறது
உடல்
இரண்டாக
வளைந்து

8

அந்தக் குழந்தைக்கு இதுவரையில்
இரண்டு ஆப்ரேஷன்ஸ் நடந்திருக்கின்றன
ஒன்று மேஜர்
மற்றொன்று மைனர்

பிங்க் கலர் மாத்திரைகள் இப்போது தினமும் இரண்டு சாப்பிடவேண்டும்

வெள்ளை மாத்திரைகள் இரண்டால்
சர்க்கரை சமநிலையில் இருக்கிறது

தூக்கத்திற்கு சன் ரைஸ் கலர் மாத்திரை ஒன்று

பெருநகரின் ரயில் நிலையத்தின் மீதுதான்
எவ்வளவு வளைகின்ற இடுப்புகள் என ஏங்கும் அதற்கு
இப்போது
வயது ஜம்பது

9

பெருந்தொழிலில்
வெட்டி வீழ்த்தப்படுகிற ஒருவனின் தலை
தகாத புணர்ச்சியில் ஈடுபட்டு
நிலைகுலைந்தவனின்
கண்களால் பார்த்துக் கொண்டே
இறந்து கிடக்கிறது

போக்குவரத்துப் பாதைகள்
கொஞ்ச நேரம் அந்த கண்களைப்
பார்த்தவாறு
வளைந்து செல்கின்றன

10

கருணைக் குழந்தை
கடந்து போன
காலத்தை நினைவுபடுத்தி
தாத்தா என அழைக்கையில்
உள்ளிருக்கும் சிறுவன்
தடுமாறுகிறான்
"அவ்வளவு விரைவாகச் சென்றுவிட்டதா இந்த காலமென"
குழந்தை அவனை வெளியிலிருந்து கண்டு
தாத்தா என்கிறது
அவனோ உள்ளிலிருந்து அவனைக் கண்டு
தடுமாறுகிறான்

அங்கிள் என அழைக்கும்
பெண் குழந்தைகள்
ஏற்பட்ட காயத்தின்
அருமருந்து

பின்னர் அவனை சற்றே நேரம்
வெளியிலிருந்தே
பார்க்கத் தொடங்குகின்றன
அனைத்து காட்சிகளும்

11

கொட்டாரத்து அம்மன்
பகவதி
ஒதுக்குப்புற அரசமரத்தடியில்
வாசம்
ஐயப்பனும்
விநாயகரும்
காவல்

குறைவில்லா
கம்பீரம் கட்டு
அபூர்வ பக்தன்
பட்டரின் அபிராமி அவள்

தாய்
மூலத்தாய்

பன்னீரபிஷேகத்தில்
முந்தானை
விலகிய கணத்தில்
நித்திய யுவதி ஒருத்தி
முன் தோன்றி நிற்க
பிரார்த்தனை மறந்து
பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டோம்

முந்தானையை சரி செய்து விடுவாளோ இவள்
என்னும்
பதற்றம் பற்றிக் கொண்டிருக்கையில்

நானுன் தாயென்று அவள் மிரட்ட
கண்கள் மூடி
நிறுத்திய பிரார்த்தனையை
மீண்டும் சொல்லிவிட்டுத்
திரும்பிவிட்டேன்

ஒரேயிடத்தில் இரண்டுபேராய்
இருப்பதை
நானின்றுதான் பார்த்தேன்

தாயென்றாலும் தனம்
வேறொன்றாகத்தான்
இருக்கிறது
பராபரமே

12

ஒரு கைதியை போலீஸ்கார்
விலங்கு பூட்டி அழைத்துச் செல்லும் போது
நானும் கைதிதானோ என சந்தேகமாயிருக்கிறது

ஒரு பிணத்தை ஊரார் அழைத்துச் செல்கையில்
நானும் பிணம்தானோ என சந்தேகமாயிருக்கிறது

கண்ணாடியில் யுவதி முகம் பார்க்கத் தொடங்கினால் போதும்
என்னை காதலிக்கத் தொடங்கிவிட்டாள்
என எடுத்துக் கொள்கிறேன்

போட்ட விதை சாரலில் துளிர்த்து முளைக்கிறதே
இனி
வசந்த காலம்
என
நினைத்துக் கொள்கிறேன்

வேறு எவ்வண்ணமாக
என்னால்
சிந்திக்க முடியும்
யோசித்துப் பாருங்கள் ?

13

பூவரச மரத்தடியில்
நிற்கையில்
எனது திருமேனியெங்கும் பூவரசின் காலம்

நெடுஞ்சாலையில் பயணிக்கையில்
தவறாக நினைக்காதீர்கள்
நெடுஞ்சாலையின் காலத்தில் செல்கிறேன்

ஆனால் பாருங்கள் எங்கே
சென்றாலும்
திருமேனியில் பூவரசு முளைப்பதை
எதுவுமே
செய்ய முடியவில்லை

14

மனம் கீழே கீழே கிடக்கிறது
என்ன செய்வீர்கள் ?

முதலில் ஒரு துண்டு இனிப்பு கொடுத்துப் பார்ப்பேன்

ம் ஹும் என்றால் மடியில் எடுத்தது வைத்து
கொஞ்சுவேன்

முடியவில்லையெனில்
குஞ்சாமணியை எடுத்து முத்துவேன்

வெற்றிடத்தில் பம்ப் பண்ணுவேன்

ஒன்றிலும் முடியவில்லை எனில்
என்ன செய்வீர்கள் ?

எத்தனை பௌடர் பூசினாலும்
அது இருக்குமிடத்தில் சரியாகத்தானே இருக்கிறது என்று
நானெழும்பி
கிளம்பிவிடுவேன்

நீங்களும் கிளம்பிப் பாருங்கள்
ஒருவேளை அது எழும்பி
உங்கள் பின்னால்
வரக் கூடும்

15

சின்ன ரயில் அது
இடமில்லையென
இறக்கி விட்டார்கள்
பல ஊர் பயணம் செய்து
சேர்ந்த இடத்தில்
நின்று கொண்டிருந்தேன்
நீ எப்படி இங்கேயென
கேட்கிறார்கள்

நீங்கள் ரயிலுக்கு உள்ளேயிருந்தபடி
வந்து சேர்ந்தீர்கள்
நான் வெளியே அமர்ந்தபடி
வந்து சேர்ந்தேன்

எனது பயணம்
அருமையோ அருமை
நீங்கள் பார்த்ததை மட்டுமே பார்த்தீர்கள்
நான் பார்க்காததையும் பார்த்தேன்


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"