பொடிப்பொடி பொடி கவிதைகள் பத்து

பொடிப்பொடி பொடி  கவிதைகள் பத்து 

1

ஏராளம் ஈசல்கள் வந்து நிறைகின்றன 
அதற்குத் தக்க பல்லிகள்
எல்லா ஈசல்களும் ஒரு ஈசல் தான் என்பது போல 
தொட்டு நக்கி 
எல்லா பல்லிகளும் 
சுவரிலிருந்து காணாமற் போகின்றன 
நாங்கள் அத்தனை பல்லியும் ஒரே பல்லி தான் என்பது போல

2

அடித்துப் பெய்கிறது பேய்மழை 
அனைத்தும் நிறைகிறது 
ஊற்றின் தாய்மடி நிறைகிறது 
ஊருணி நிறைகிறது 
எண்ணங்கள் நனைகிறது
அடுத்து எறும்புப் புற்றுக்குள் 
காலடி எடுத்து நனைக்கையில் 
மொத்த மழையையும்
தடுத்து நிறுத்துகிறது 
சிறிய எறும்பு 
புற்றின் வாயிலில்

3

அசுரர்கள் எப்படி அசுரர்கள் ஆனார்களோ 
அப்படியே 
தேவர்களும் தேவர்கள் ஆகிறார்கள் 
அனுபவம் கிளர்ந்து
அடிக்க அடிக்க அசுரனாகிக் கொண்டே இருக்கிறான் அசுரன் 
வலிக்க வலிக்க தேவனாகிக் கொண்டேயிருக்கிறான் தேவன்

4

நானொரு கைப்பிடியளவு சாம்பல் பேசுகிறேன் 
வாழ்க்கையென்பது தித்திக்க தித்திக்க தேன் .
நானொரு துளி தேன் பேசுகிறேன் 
கைப்பிடியளவு சாம்பலின்
வயிற்றுக்குள் 
எவ்வளவு ருசி

5

கடைசியாகத் திரும்பிய பல்லியிடம் 
நான் கேட்டேன் 
இப்போது நீங்கள் எடுத்துக் கொண்ட ஈசல்களையெல்லாம் 
எவ்வளவு நாட்களாக வைத்துச் சாப்பிடுவீர்கள் 
வயிற்றுக்குள் ?

அடுத்த முறை இவர்கள் 
வருவது வரைக்கும் 
பதில் சொல்லிற்று 
பல்லி 
அவ்வளவு பசிப்பதில்லை 
பசி

6

விவாதம் தானே 
இப்படியும் வாதாடலாம் 
அப்படியும் வாதாடலாம் 
மத்தியிலும் வாதாடலாம் 
உங்கள் 
வசதியைப் பொறுத்து

மற்றபடி 
அதில் ஒன்றும் இல்லை

7

முரண்பட்டுக் கொண்டே 
இருப்பவன்
கூரிய கத்தியால் 
தன்னை அறுக்கத் தொடங்குகிறான் 
கத்திக்கு அவனை அறுப்பது 
பிடித்துப் போகிறது 
இப்படி மொத்த உடலையும் 
யார் தான் ஈர ஈரமாகத் 
தின்னத் தருவார்கள் தானமாக 
என

8

தன்னை எளிமையாக்கிக் கொண்டிருப்பவனிடம் 
முளைக்கக் கீறி 
எத்தனிக்கின்றன தானியங்கள் 
கடுமையாக்கிக் கொண்டிருப்பவனிடம் 
கணந்தோறும் 
இறக்கின்றன பறவைகள்

9

எடுத்துக் கொடுக்குந்தோறும் 
எதுவுமே குறைவதில்லை 
பரிமாறப்படாதவிடத்தே 
பதுங்கி நிற்கிறது 
விஷம்

10

எனது துயரத்தைப் பாருங்கள் 
என்று பொதுவில் 
தனது புண்ணை எடுத்து காண்பிப்பவளின் 
தோளில் இரண்டு விதவையர்
ஏறி அமர்ந்து கொள்கிறார்கள் 
அவளோ பாவம் 
ஆசையின் தேவதைகள் என 
அவர்களை 
நினைத்து விடுகிறாள்

foto - rishi nanthan

Comments

  1. மிளகுக் கவிதைகள்.அருமை ,சிறப்பு மணி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்