பட்டணங்கள் ஒளிக் காடாய் ஜொலிக்கின்றன

பட்டணங்கள் ஒளிக் காடாய் ஜொலிக்கின்றன

பண்டிகைகளைக் கொண்டாட சிறு பட்டணமாக இருந்தாலும் கூட அது தயாராவதே அழகுதான்.முதலில் நாசுக்காக அது தொடங்கி பண்டிகையை நெருங்குங்குந்தோறும் நெருக்கடியுடன் கசங்குகிறது.பண்டிகை எந்த பண்டிகையாக இருப்பினும் அது கூட்டான ஜொலிப்பு.ஒருங்கிணைந்த மக்கள் மனோபாவம் பொங்கும் இடம் அது.கூடுதல் குறைவு , பொறாமை ,கசப்பு ,நிறைவு நிறைவின்மை எல்லாவற்றையும் அடக்கியதுதான் பண்டிகைகள்.இருப்பினும் ஒவ்வொருவரின் சிறகிலும் அது புதியதொரு வண்ணத்தை மெருக்கேற்றாமல் இருப்பதில்லை.

பண்டிகைக்கு பட்டணம் தயாராவது ஒருபுறம் எனில் தனிமனிதன் எவ்வாறு தயாராக வேண்டும்? உங்கள் வட்டத்திலுள்ள எவரேனும் ஒருவர் பண்டிகையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கலாம்.நிச்சயமாக இருப்பார்கள்.நீங்கள் பண்டிகைக்கு தயாராகும் ஒவ்வொரு கணத்திலும் அவர் நினைவையும் சேர்ந்தணைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் அவருக்கு ஏதேனும் செய்ய இயலலாம்.இல்லை இயலாமற்போகலாம்.அது பிரச்சனையில்லை.ஆனால் சிந்தையை மறுபக்கமாக சாத்திக் கொள்ளவே கூடாது.சாத்தினால் பண்டிகை முழுமையுறாது.பண்டிகையை ஏக்கத்துடன் அணுகும் ஒருவரை பற்றிய சிந்தை உங்களுக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.நீங்கள் மிகக் குறைவாக பண்டிகையை உபயோகப்படுத்தினால் கூட இது அவசியம்.அதற்கும் கீழே ஒருவர் ஏங்கியிருக்கக் கூடும்.பண்டிகையை திமிர்த்தனத்தோடு அணுகினால் அது திருப்பி ஒருநாள் அடிக்கும்.

என்னிடம் ஒருமுறை சமய பாதிரி ஒருவர் இப்படியெல்லாம் நீங்கள் ஒன்றிரண்டு பேர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் . சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள்.எவ்வளவோ அநியாயங்களை செய்கிறவர்கள் இதனையெல்லாம் யோசிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறார்கள் ? என்று கேட்டார்."நீங்கள் அநியாயங்கள் செய்யாமல் வாழும் வகை பெற்றிருப்பதால் அது எவ்வாறு திருப்பியடிக்கும் என்பது தெரியாமல் இருக்கிறீர்கள் போலும்.நானெல்லாம் நிறைய அநியாயங்களை செய்திருக்கிறேன்.அதனாலேயே அது எவ்வாறு திருப்பியடிக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறேன் "என்று சொன்னேன்.நீங்கள் ஒரு இன்பத்தை அதிகமாக எடுக்கும் போது அருகிலேயே ஒரு துன்பம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு அதிகபட்சமாக அத்து மீறுகிறீர்கள் என்பதை அது கணக்கிடுகிறது.அதிகபட்சம் உங்களை அனுமதிக்கிறது திருப்பித் தாக்கும் போது கனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பரிசோதித்து அறிந்து கொள்வதற்காக.

நீங்கள் எதனை அதிகமாக பிறர் எங்கும் வண்ணம் எடுத்தாலும் அதுதான் உங்களுக்கு சைத்தான்.பிறர் ஏங்காத வண்ணம் எடுத்தாலும் அதுதான் சைத்தான் . பத்து இட்லிக்கு பதிலாக நீங்கள் பதினைந்து எடுத்தால் அதிகம் எவ்வளவோ அத்தனையும் சைத்தான்.நீங்கள் காமத்தை அதிகம் எடுத்தால் அதிகமாக துய்க்கும் காமமே சைத்தான்.அதிகாரத்தை எடுத்தால் அதுதான் சைத்தான்.அற்பத்தனத்தை எடுத்தால் அது. பண்டிகையில் என்ன விஷேஷம் என்றால் பண்டிகைகள் கூடுதலாக நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு ஒருவிஷேஷ வாய்ப்பை வழங்குகிறது.என்றாலும் ஓர்மை முக்கியம்.

அதிகபட்சமான சில இலக்கிய விழாக்களை உருவாக்கும் போதே கோணங்கி ,நானெல்லாம் உள்ளுக்குள் கொஞ்சம் சுணங்கிப் போயுமிருப்போம்.விரும்பத் தகாதது எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக .ஒருமுறை பேயாட்டம் போட்டுவிட்டு இரவில் லாக்கப்பில் இருக்க வேண்டியிருந்தது.ஒருமுறை உடன் வந்த இளங்கவிக்கு முன்பல் வரிசை அத்தனையும் கழன்று போயிற்று .அதன் பின்னர் அதனை சரிப்படுத்தவே இயலவில்லை.அதனால் ஏதேனும் ; யாருக்கும் பாதிப்பற்ற சிறு தடங்கல்கள் ஏற்பட்டுக் கடந்து விட்டால் கொஞ்சம் லகுவாக இருக்கும்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகிறது என்று.சிறப்பு விழா ஒன்றிற்கு முன்னால் சாமிக்கு நேர்ந்து விட்ட கிடாவை விபத்து அடித்துக் கொன்றது.சாமியோ கிடாவை பறிகொடுத்து மற்றொரு விபத்தைத் தடுத்தேன் என்றது.விழாவில் சேதாரமில்லை.

இப்போதெல்லாம் ஆண்டவன் வினையை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பொறுமையுடன் இல்லை.முற்பகல் பிற்பகல் .பிற்பகல் முற்பகல்.பொருளென்றாலும் அருளென்றாலும் இங்கே இப்போதே நிரம்பியிருப்பதுதானே அன்றி பின்னர் எப்போதோ அல்ல.இவ்வுலகமும் ,அவ்வுலகமும் எல்லாமே இங்குதான்.ஒவ்வொரு கணக்கையும் நேர்செய்யாமல் இங்கிருந்து நீங்கள் யாராக இருந்தாலும் தப்பித்துச் செல்லவே முடியாது.சிலர் சிலரை இறந்து போவார்கள் என நினைத்து அலட்சியம் செய்திருப்பார்கள்.கணக்கு திரும்பி விடும்.வரும்.அலட்சியம் சைத்தானின் சொகுசு வாகனம். அலட்சியம் திரும்பி வருவதை கண்ணால் காண்பது என்பது மஹா தரிசனம். குற்றபோதம் உண்டாக்க இதனைச் சொல்லவில்லை.இது இயற்கையின் நியதி.விளங்கவில்லையெனில் விளங்கும் காலம் வந்தே தீரும் .

எனக்கு நல்ல பிரியாணி உண்ணும்போது எப்போதுமே கவி பாலை நிலவனின் நினைவு வந்து செல்லும்.சங்கரன்கோவில் பிரியாணி உண்ணும் ஒருசமயத்தில் எப்படியேனும் ஒருமுறை பாலை நிலவனுடன் சேர்ந்து வந்து உண்ண வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.மருத்துவ வசதிகளுக்காக செல்லும் போது இப்போதெல்லாம் ஜெ .பிரான்சிஸ் கிருபாவின் நினைவு வருகிறது.யானை ஆசிர்வதித்தால் கோணங்கி நியாபகம். தீபாவளிக்கு புதுக் துணியெடுக்கச் சென்றால் கைலாஷ் சிவனை நினைவு கொள்ளாமல் முடியாது.அவர் திடீரென வந்து நின்றால் அவருக்கு புதுக் துணிக்கு என்னிடம் வாய்ப்பில்லையெனில் நான் உடுத்துவதில் ஒருபலனும் கிடையாது.தமிழ்ச் சமூகம் பண்டிகைகளின் போது எழுதுகிறவனையும் ,கவியையும் மறதி கொள்வது தனக்குத் தானே தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டு வருகிற பெருந்தீமைகளுள் குறிப்பிடும் படியானது.யூமா வாசுகியின் கவிதை ஒன்று உண்டு.கடற்கரையில் உட்கார்ந்தது எதையெதையோ நான் செய்து கொண்டிருப்பேன் என்பது போல; வந்து திரும்பி பசிக்கும் போது பார்க்கையில் சோறு இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் அது முடியும்.பொதுப் பண்டிகைகளின் போது எங்கேனும் ஒரு கவி இல்லாமையால் பட்டினியிருந்தால் ஏக்கம் கொண்டால் அது அந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும்
தீமையே ...ஏனெனில் அவன் அவள் இங்கே எல்லோராலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து அதனைப் பொருட்படுத்தாமல் வாழும் விஷேஷ ஜீவிதம்.

ஜெயமோகன் மலையாளத்தில் தினத்தந்தி அளவிற்கு சமமான வணிக இதழ்கள் கூட ஓணம் பண்டிகைக்கு எவ்வாறு தயாராகின்றன என்பது பற்றி ஒருமுறை சொன்னார்.கவிகள் ,கலைஞர்கள் ,ஓவியர்கள் அந்த தினத்தில் கையில் காசில்லாமல் இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ; தங்களை சதா முழுநேரமும் எதிர்க்கும் எழுத்தாளனாக இருந்தாலும் கூட அதில் வஞ்சம் கொள்ளாது ஓணச் சிறப்பிதழ்களை அவை உருவாக்குகின்றன.பெரிய பெரிய நிறுவனங்களின் காசையெல்லாம் திரட்டி ,எழுத இயலா நிலையிலிருப்பவனிடம் ஒரு புகைப்படக் குறிப்பையேனும் வெளியிட்டு, அச்சமயம் அவனிடம் போதுமான காசு இருக்குமாறு செய்து விடுகின்றன என்று சொன்னார்.பகிரத் தெரிந்தவன் வழிப்பறி செய்தால் அதில் தவறில்லை.எப்படி வழிப்பறி செய்வது, யாரை வழிப்பறி செய்வது, எப்படி கொண்டு சேர்ப்பது இவற்றை சரியாக அறிந்தால் அவனும் தர்ம தேவனே.வழிப்பறி செய்து வீட்டில் கொண்டு முடக்கினால் கரையேறியது போல தோன்றும் கரையேறவே முடியாது.கரையேறுவது என்பது கரப்பான் பூச்சிகள் அதிகம் இரையாத மனத்தைக் கொண்டிருப்பது.

இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் தமிழின் அத்தனை பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சரி , உடமஸ்த்தர்களையும் சரி குனிய வைத்து குண்டியில் விளாறு கொண்டடிக்கலாம் தவறே இல்லை.தீபாவளிமலர்கள் அத்தனையுமே வெறும் பாமாயில் பலகாரங்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"