ஆண்டாளின் கண்ணாடி அறை
ஆண்டாளின் கண்ணாடி அறை
---------------------------------------------
ஆண்டாளை முதலில் பார்க்கச் சென்றபோது
பார்க்கத்தான் சென்றேன்
கவிக்கரம் குவித்து
ஆண்டாளின் கண்ணாடி அறை
தொங்கும் திரைச்சீலை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது போன்று
அணங்கி அசைகிறது.
கிசுகிசுப்பில் ரங்கன் தொட்டுத் தொட்டு பேசும் பிம்பங்கள்
அகத்துக்குள் எதிரொளிக்கின்றன
தேவதையின் அகம்
எடுத்துத் திரும்பும் வழியெங்கும்
பேய்முலைச் சுரப்பு
கீசுகீசென்று பேச்சரவம்
பிம்பங்கள் உருள
மனச்சாயல் தடுமாற
தூமணி மாடத்து சுற்றும் விளக்கொளி
இப்படியிருந்தால் எப்படியம்மா வெளியேறுவான்
பார்க்கவந்தவன் ?
ஆண்டாளைப் பார்க்கத் தான்
சென்றேன்
உள்ளிழுத்து இறுக அடைத்துக் கொண்டதோ
மினுமினுங்கும்
மாயக் கண்ணாடி அறை
திருமேனிக் குடமுடைந்து சிந்த
நீ சூடிக் கொடுத்தாலும்தான் என்ன ?
வாடிக் கொடுத்தாலும்தான் என்ன?
பெரியாழ்வாருக்கு மட்டும்தானோ
இத்தனை பெரிய பெருந்தகப்பன் ஸ்தானம் ?
Comments
Post a Comment