தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 10

 காந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல்  ...





காந்தியைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்மிடம் நாம் கொண்டுள்ள கற்பனைகள்
,மிகையுணர்ச்சிகள் ,விருப்பங்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றில்
கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கான ஒரு வழிமுறை .அது உண்மையை
நேர்கொண்டு முன்னடக்க உதவும்.காந்தியை புரிந்து கொள்ளுந்தொறும் அதில்
புரிந்து கொள்பவர்களுக்குத் தான் லாபமேயொழிய வேறொன்றும்
இல்லை.உண்மைக்கும் நமது விருப்பங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு என்ன
என்பது காந்தியை புரிந்து கொள்ளும் காரியம் விளக்கித்
தரும்.பொய்யிலிருந்து விடுவிக்கும்.

உண்மையைப் பற்றி "அவ்வாறே பேசுதல்" என்றே பலரும் அர்த்தம்
கொண்டுள்ளோம்.அதுவல்ல.திருவள்ளுவர் உண்மை பற்றி பேசும் போது நீ
மறைப்பதும் கூட உண்மைத்தன்மை பெற முடியும் என்று கூறுவதை புரிந்து கொள்ள
முடியுமேயானால் , காந்தி உண்மையென்று எதனைக் குறிப்பிடுகிறார் என்பதும்
விளங்கும்.உண்மையென்பது ஆழமான அர்த்தம். பல சமயங்களும் உண்மை பற்றி
விவாதித்திருக்கின்றன.அதனை ஸ்தூல உருவாக எட்டியவர் காந்தி.முயன்றால்
நம்மிலும் நடைமுறையில் எட்டச் செய்து விடுபவரும் காந்திதான்.


பொய் பேசுதல் என்பது பெரும்பாலும் நாம் பேசிக் கொண்டிருக்கும் அனைத்துமே
பொய் தான்.ஒவ்வொரு விஷயங்கள் சார்ந்தும் பொதுவாக நமது விருப்பங்களை
முன்வைக்கும் பழக்கம் நம்மிலிருந்து விடுபடாதவரையில் பொய் அகலாது.நாம்
ஒவ்வொருவருமே விருப்பங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்.அன்றாட
செய்திகளில் தொடக்கி ,காமம்,காதல் எல்லாவிதமான விஷயங்களிலும் நமது
விருப்பங்களையே பேசிக் கொண்டிருக்கிறோம்.உண்மைக்கும் நமது
விருப்பங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி உண்டு.விருப்பங்களால் நம்
அவற்றை நிரப்புவோம்.விருப்பங்களால் ஒன்றை நிரப்புவதற்குப் பெயர்தான் பொய்
என்பது.விருப்பங்களும் உண்மையும் வேறு வேறு என்பதை நம்மால் கண்டுணரும்
சக்தி  கிடைக்குமேயானால் உண்மை மட்டும் நம்மிடம் துலக்கம் அடைவது
மட்டுமல்ல,தரிசனங்களும் சேர்ந்து துலங்கும்.தரிசனம் என்பது உண்மையை
நெருங்கும் இயக்கம்.விருப்பங்களை பேசுவதற்கு ,பொய் பேசுவதற்கு விடை
கொடுத்தால் தரிசனம் வாய்க்கும்.தரிசனம் மற்றபடி நெருங்கவே இயலாத
மாயவித்தையெல்லாம் ஒன்றுமில்லை.

ஒருசமயம் எனது நண்பன் ஒருவன் அவனுடைய காதலி நிராகரித்து விட்டுச்
சென்றதும் என்னிடம் வந்த பிளாக் மேஜிக் பேரில் உங்களுக்கு
நம்பிக்கையுண்டா ? என்று கேட்டான்.அவன் அவளுக்கு யாரோ அந்த மேஜிக்கை
அவளிடம் செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நம்பினான்.அப்படி மட்டுமே
இருக்க வேண்டும் என்று விரும்பினான்.   அவனுடைய காதலி நிராகரித்து
சென்றதை அவனுடைய மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்பதுதான் விஷயம்.அந்த
நிராகரிப்பின் மீது ஏதேனும் போர்வையைப் போர்த்த முடியுமா ? என்று அவனுடைய
மனம் சிந்திக்கிறது.உண்மையை தவிர எதனைச் சொன்னாலும் நம்புவதற்கு அது
காத்திருக்கிறது.உண்மையை மட்டும் என்னிடம் திறந்து விடாதீர்கள் என்று
பிறரிடம் கெஞ்சுகிறது.இதுதான் பொய் காட்டும் ஜாலம்.ஒருவேளை இவன் அவளை
முன் கூட்டியே நிராகரித்திருந்தால் இவனுக்கு ஒரு பிரச்சனையுமே
ஏற்பட்டிருக்காது.நிராகரிப்பை அவன் மனம் ஏற்கவில்லை.இதுதான் பொய்
என்பது.மற்றபடி ஒன்றை அப்படியே சொன்னால் அதன் பேர் உண்மையும் அல்ல.ஒன்றை
மாற்றிச் சொன்னால் அதன் பேர் பொய்யுமல்ல.நாம் கொள்ளுகிற விருப்பங்களில்
இருந்து மனத்தைத் துண்டிக்க வேண்டும்.அதில் எஞ்சுவதே உண்மை.

நாம் எல்லோருமே இறந்து விடுவோம் என்பது நமக்கு எல்லோருக்குமே நன்கு
தெரியும்.எது நமக்கு நடக்கவே நடக்காது என்று கருதுகிறோமோ அது நடந்தே
தீரும் முந்திக்கூட்டி நடக்கும்.வியாதியிலிருந்து,விபத்து வரையில் .உறவு
முறிவதிலிருந்து ,பிரிவு வரையில்.எது நடக்கவே நடக்காது நமக்கு என்று
கருதுகிறோமோ அந்த விஷயத்தின் பேரில் நமக்கு உரிமையும் உடைமையும் கடுமையாக
இருக்கும்.இதுவே போதும் அலட்சியம் வந்து கண்களை மறைக்க ,எல்லாமே வந்து
சேர .உறவு என்பது பரஸ்பரம் ஈர்ப்பு கெடாமல் வைத்திருக்கும் ஒரு
செயல்.ஈர்ப்பு கெட்டால் நாசம்தான் ,ஈர்ப்பு கெட்ட பின் உறவு தொடர
காரணங்களேனும் வலுவாக வேண்டும்.இல்லையெனில் உடைந்து தூளாகும்.ஈர்ப்பு
கெடாமல் வைத்திருப்பது என்பது ஒரு தீவிர நிலை.நாம் உடையவே மாட்டோம் என்று
கருதுபவர்கள் உடைந்து நொறுங்குவது உடைமையின்
மமதையால்தான்.மகன்தானே,மகள்தானே கேட்க  மாட்டார்களா ? என்று
நினைப்போம்.கேட்கமாட்டார்கள் என்பதே உண்மை .ஈர்ப்பு கெட்டால் கேட்க
மாட்டார்கள்.

எனக்கு மனதிற்கு விருப்பமான பெண்களைக் காட்டிலும் அதிகமாக காந்தியைப்
பிடிக்கும் என்பதை அறிந்த நண்பர்கள் என்னிடம் "காந்தியிடம் எனக்கு
முரண்பாடு உண்டு " என்று பேசத் தொடங்குவார்கள்.

"நல்லது.அப்படியானால் நீங்கள் காந்தியை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்
என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ? "என்று திருப்பிக் கேட்பேன் .புரிந்து
கொண்ட பின்னர்தானே முரண்பாடு எழவேண்டும் ?

அவர்களில் பெரும்பாலோரிடத்தில் இந்த கேள்விக்கு பதில்
இருப்பதில்லை.பொருளும் இருப்பதில்லை.இந்த கேள்வி என்ன சொல்கிறது என்று
புரிவதும் இல்லை.இதுதான் காந்தியின் பேரில் இங்கே கட்டப்பட்டுள்ள
ஆகப்பெரிய முரண்பாடு.

காந்தியிடம் கற்பது சுவாரஸ்யமான விஷயம்.நானும் பல அறிஞர்கள் மூலமாக
தாமதமாக அறிந்து கொண்டதுதான் இது.இப்போது காந்தியிடம் எனக்கு
ஏற்பட்டிருப்பது understanding  .புரிதல்.அது காந்தியைப் பற்றிய புரிதல்
மட்டுமல்ல என்னைப்பற்றிய புரிதல்.என்னைப்பற்றிய understanding  அது.

2

பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.




தூய அரசியல்வாதிகள் பற்றிய கற்பனைகள் எனக்கில்லை.அப்படியொருவர்
உளரேயாயின் அவரை நான் விரும்பவில்லை.அவர் பற்றிய புனித உருவங்களை
உருவாக்குபவர்களின் உள்ளீடுகளின் பூதகணங்கள் அச்சுறுத்தக்
கூடியவை.ஏனெனில் அப்படியொருவர் இன்று சாத்தியமாயின் அதுபோன்ற பெரும் பொய்
ஒன்றிருக்க இயலாது.இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவிற்கு ஐம்பது சதமானம்
காலத்தின் தொடர்பில் இருக்கிறாரா என்பதை பற்றியதுதான்.அப்படியொருவர்
இருந்ததாக பலரும் தங்கள் நினைவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்
நினைவில் இருக்கிறார் என்பதே உண்மை.அவருக்கு கால்கள் கிடையாது.
அப்படியொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? .அவருக்கு கால்கள்
இல்லாதிருக்கும் .அன்றாடத்துடன் தொடர்பற்ற கற்பனைகளை முன்வைக்கும் போது
பெரும்பாலும் நாம் பிற உருவங்களில் ஒப்படைக்க தயாராகி விடுகிறோம்.இது ஒரு
எளிய செயல்.சுகமும் கூட . பொறுப்பெடுக்க தயாரில்லை என்பதை
உணர்த்துகிறோம்.தூய கற்பனைகளை வைத்துப் பூட்டுவதற்கு ஒரு அரசியல் உடல்
நமக்குத் தேவைப்படுகிறது.இந்த சமர்த்தான கற்பனை என்னுடைய தாத்தா
நோயற்றவராக இருந்தார் என்பதைப் போன்றதுதான்.உப்பு
சப்பில்லாதது.அப்படியொருவர் வாய்த்தால் நமது பொறுப்புகளை முடக்கிவிட்டு
அன்றாடத்திற்குள் அவசரமாகவும் ,கவலையின்றியும் பிரவேசித்து விடமுடியும்
.இந்த கற்பனையைத் ஒரு உடலில் திணிக்க காவு கேட்டுக்
கொண்டேயிருக்கிறோம்.இந்த போக்கு நமக்கு மட்டும் என்றில்லை.உலகமெங்கும்
இருக்கிறது.இதன் பின்னணியில்தான் கோடிகளில் புழங்கும் பி.ஆர்.ஓ
கம்பெனிகள் செல்லப்பணியாற்றுகின்றன.

இப்போதைய தூய உரு என்பது மக்களிடம் என்னவாக இருக்கிறது ? என்பதைக்
கண்டறிய கடுந்தவசு தேவை . இந்த கடுந்தவசின் நிறம் தெரியுமானால் அவனே
சிறந்த பி.ஆர்.ஓ.கம்பெனி.எதனை எப்படி மாற்றவேண்டும்.அதிகாரத்தை எதனைக்
கொண்டு அடிக்க வேண்டும் என்பதில் கடும் புலமை அவற்றுக்கு அவசியம்.ஒரு
தமிழ் சினிமா எடுப்பதற்கு மக்களின் அலைவரிசையுடன் கூடிய ஒரு சிறுமூளை
தேவைப்படுவதை ஒப்ப பி.ஆர்.ஓ.கம்பெனிகளுக்கு ஆயிரம் மடங்கு
அவசியம்.நம்முடைய வார்த்தைகளை ,உரையாடல்களை அவை சிருஷ்டித்துத்
தரவேண்டும் .பல்வேறு உரையாடல்களை முன்வைத்து அதிலிருந்து நமது தேர்வு போல
தோன்றக் கூடிய ஒரு உரையாடலையும் அது நம்மிலிருந்து பேசத் தொடங்க வேண்டும்
. பி.ஆர்.ஓ கம்பெனிகள் ஊடகங்கள் இவற்றையெல்லாம் இன்று பிரித்தறிவது
என்பது சாதாரணமான காரியங்களில் இல்லை.பத்துப் பதினைந்து தரப்புகள்
இருப்பதாக நமது உரையாடலின் முன்பாக உருவங்கள் குவிகின்றன.இவற்றில் எதனை
தேர்வு செய்தாலும் அதிகாரத்திற்கு அதனால் ஒரு இடர்பாடும் கிடையாது.

இன்று இதனை விளங்கிக் கொள்ள சிறிய பரிசோதனை செய்து பாருங்கள்.நீங்கள்
விரும்பும் தலைவரின் மாதிரியை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர்
எதிரியின் மாதிரியை எடுங்கள் .யோசித்துப் பார்த்தால் இரண்டுமே
அவர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பது விளங்கிவிடும்.சினிமா
நட்சத்திரங்களை திரையில் கண்டு நாம் உருவாக்கிக் கொள்கிற உருவங்களுக்கு
நிகரானவைதான் இவை.இரண்டிற்குமே நாமும் பொறுப்பில்லை ,அவர்களும்
பொறுப்பில்லை.பின்னர் யார்தான் இவற்றுக்குப் பொறுப்பு என்று கேட்டால்
அதுதான் மந்திரம்.சூக்குமம்.கண்ணில் நேரடியாக புலப்பட மறுக்கும் பொருள்.

எங்கள் ஊரில் ஒரு வழக்கு நடைபெற்றது.முதலில் ஒருவர் குறிப்பிட்ட சொத்து
தனக்கு உடமைப்பட்டது என்று ஒரு பராதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்
உரிய ஆவணங்களுடன் .வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இடையில் ஒருவர்
உட்புகுந்து இல்லை ,குறிப்பிட்ட சொத்து தனக்குப் பாத்தியப்பட்டது என்று
கூறி உள்ளே புகுந்து அடிக்கிறார்.வழக்கின் திசையில் புதிய வெளிச்சம்
ஏற்பட்டு விட்டதாக எல்லோரும் நம்புகிறார்கள்.வழக்கு போய்க்
கொண்டிருக்கிறது.முடிவில் இந்த இரண்டு தரப்புகளும் தாங்கள் வழக்காட
விருப்பவில்லை .சமாதானமாக நாங்களே பிரிவினை செய்து கொள்கிறோம்
என்கிறார்கள்.நீதிமன்றம் இருவரையும் மெச்சி வழக்கை சமாதானப்படுத்தி
விடுகிறது.மேற்கொண்டு இதில் காரியமில்லை.வாதியும் பிரதியும் இணைந்து
தங்களுக்குள் சொத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு
சொல்கிறது.நீதிமன்றத் தீர்ப்பை அரசு உத்தரவாக எடுத்துக் கொண்டு மேற்படி
சொத்தை இவர்களே கொண்டு நிலைநாட்டிய ஆவணங்களின் அடிப்படையில் அறுபத்தேழு
பேருக்கு விற்பனை செய்து பத்திர பதிவும் செய்து முடிக்கிறார்கள்.இவர்கள்
தங்கள் தங்கள் தரப்பில் ஆவணங்களுடன் நின்று வாதாடிய சொத்து இருவருக்கும்
உரியது அல்ல.அரசுக்கு உரியது என்று தெரிய வர பின்னர் பத்தாண்டுகள்
ஆயிற்று.

ஆடை நமதில்லை,உருவம் நமதில்லை.நிறம் நமதில்லை.பின்னிருந்து இயக்குபவனின்
பெயர்தான் கடவுள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"